

உதகை...
உதகை அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரி இருக்கும் இடம் ரொம்ப ரம்மியமாக இருக்கும். எக்கச்சக்க மரங்கள். காற்றுக்குப் பஞ்சம் இல்லை.
மோகன் மற்றும் சீனிவாசன் ஒரே வகுப்பு. இளங்கலை கணிதம். இரண்டு பேரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மூன்று வருடங்களாகப் படித்து வருகிறார்கள். நன்றாகவே படிப்பார்கள். அதே வகுப்பில் லலிதா என்பவரும் படித்துவந்தார்.
லலிதா பாவடை தாவணியில்தான் கல்லூரிக்கு வருவார். வெள்ளிக்கிழமை மட்டுமே சேலை கட்டிவந்து கலக்குவார். பார்ப்பதற்கு சினிமா நடிகைபோல அழகோ அழகு. கூச்சச் சுபாவம் உடையவர். ஆனால், உண்மையில் அவர் தைரியசாலி.
மோகன், சீனு இருவருமே லலிதாவைக் காதலிக்கிறார்கள். இருவருக்கும் இடையே ஒரு உடன்பாடு. அது என்னவென்றால் லலிதா யாரை விரும்பினாலும் அடுத்தவர் தனது காதலைக் கைவிட வேண்டும் என்பதுதான்.
இருவரும் லலிதாவிடம் பேசுவார்கள். லலிதாவுக்கு இருவரும் தன்னை விரும்புகிறார்கள் என்று தெரியும். ஆனால், அவர் மனதில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கல்லூரி கடைசி மாதம். அதற்கு பின்னர் ஸ்டடி ஹாலிடேஸ். மோகனும் சீனுவும் ஒரு திட்டம் போட்டார்கள். இருவருமே நேரே சென்று லலிதாவிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அப்படி செய்வது லலிதாவுக்கு தர்மசங்கடமாகும் என்று அந்த யோசனையைக் கைவிட்டார்கள். ரொம்பவே யோசித்தார்கள். பிறகு தனித்தனியே சொல்வது என முடிவு எடுத்தார்கள். முதல் வாய்ப்பு யாருக்கு என்று முடிவு செய்யமுடியவில்லை.
மோகன்தான் “நாளை நான் சொல்கிறேன். நீ அதற்கு மறுநாள் சொல்லு.”
ஓகே என்று இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.
மறுநாள்.
மோகன் காலை 11 மணிக்கு லலிதாவை நூலகம் அருகே பார்த்தார்.
“லலிதா… உங்கக்கூடப் பேசணும்..?”
“ம்ம்.. சொல்லுங்க…”
“லலிதா… லலிதா… நான் வந்து… வந்து…”
“சொல்லுங்க… ஏன் தயங்குறீங்க…?”
மோகன் ஒருவழியாக சொல்லிவிட்டார்.
அதற்கு லலிதா தனது பதில் என்னவென்று சொன்னார்.
மோகன் கல்லூரியில் இருந்து கீழே இறங்கி டாஸ்மாக் கடையில் ஒரு அரை பாட்டில் விஸ்கி வாங்கி குடித்துவிட்டு தாவரவியல் பூங்கா சென்றார்.
மறுநாள். மோகன் கல்லூரிக்கு வரவில்லை. சீனுவுக்கு எதுவும் புரியவில்லை. அதே 11 மணிக்கு சீனு தனது காதலை விம்மி விம்மிச் சொன்னார்.
அதற்கு லலிதா சொன்னார்:
“எனக்கு கல்யாணம் நிச்சயமாகி உள்ளது. பரீட்சை முடிந்ததும் கல்யாணம். அவர் வேறு யாரும் இல்லை. என் சொந்த தாய் மாமாவின் மகன். நானும் அவரை ரொம்ப விரும்புகிறேன். ஐயம் சாரி…!”
சீனு அழுதுகொண்டே கீழே உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று ஒரு அரை பாட்டில் விஸ்கி வாங்கி குடிக்க ஆரம்பிக்க...
மோகன் வந்து...
“தோஸ்த்… அவருக்குக் கல்யாணம் செய்கிறார்களே… அவர்களிடம் நாம் நம் பிரச்னையைச் சொல்லலாமா…?”
“நோ... தோஸ்த்.. இனி அவரை டிஸ்டர்ப் செய்யக்கூடாது. எல்லாம் விதி… நமக்கு என்று யாராவது பிறந்து இருப்பார்கள். இந்த மது பழக்கம் கூடாது. ரொம்பத் துக்கம் என்று தெரியும். இருப்பினும் விட்டுவிடலாம். நாம் ‘குடி’ மகனாகி நம்மை நாமே அழித்துக் கொள்ளக்கூடாது.”
“சீனு… நாம் கல்யாணத்திற்குப் போகலாமா… ?” - மோகன்.
“இல்லை மோகன்… அது எல்லாம் ஒன்றும் அவசியம் இல்லை…! “
“வீ ஆர் இன் தி சேம் போட்...!” – சீனு.
“எஸ். எஸ்…!“ – மோகன்.
தே ஆர் இன் தி சேம் போட்..!