

சந்திரன் தாத்தா 60 வயதைக் கடந்தவர். பிரம்மச்சாரி. தனது அண்ணன் வீட்டில்தான் இருந்தார். அண்ணன் பிள்ளைகள் என்றால் உயிர். அண்ணனின் பிள்ளைகளுக்கும் சித்தப்பாவை ரொம்பப் பிடிக்கும். சந்திரனுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இல்லவே இல்லை. ஆனால் அவருக்கு பெரிய பிரச்னை என்னவென்றால் ஞாபக மறதி.
சந்திரனிடம், “காலை, மதியம் என்ன சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டால் ‘திரு.. திரு..’ என்று விழிப்பார். அவருக்கு என்ன சாப்பிட்டோம் என்று தெரியாது.
சந்திரன் தினமும் ஏதாவது பிரச்னை பண்ணி விடுவார். போன வாரம் காலை அவர் வெளியே கிளம்பினார். கிளம்பும் முன் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்.
அண்ணன் பையன் “என்ன சித்தப்பா தேடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
“நான் வெளியே போறேன். அதற்குதான் என் தொப்பியைத் தேடுகிறேன்… எங்கேயும் காணவில்லை.”
அதற்கு அந்த பையன், “சித்தப்பா… அது உங்கள் தலையில்தான் உள்ளது…!” என்றான்.
அவர் தலையைத் தொட்டுப் பார்த்து தொப்பி இருப்பதை உணர்ந்தார்.
இது மாதிரி ஒரு வேளை நடந்தால் பரவாயில்லை. ஆனால், தினமும் எதையாவது தேடுவது அவர் வழக்கம்.
போன மாதம் நம் வீட்டுக்கு வருவதற்குப் பதில் பக்கத்து வீட்டிற்குப் போய்விட்டார். அவருக்கு பக்கத்து வீட்டிற்கு வந்து உள்ளோம் என்றுகூடத் தெரியவில்லை.
“பெரியவரே... உங்கள் வீடு பக்கத்து வீடு…!” என்று பக்கத்து வீட்டில் சொன்ன பிறகுதான், தான் வீடு மாறி வந்துவிட்டோம் என புரிந்துகொண்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் வெளியே போய் ₹35,000 விலை அதிகம் உள்ள ஸ்மார்ட் மொபைலை வாங்கி வீட்டிற்கு வந்தார். அவர் கடைக்குப் போனது, ஸ்மார்ட் மொபைல் வாங்கியது அவனுக்குத் தெரியாது.
வீட்டிற்கு வந்ததும் சந்திரன் காபி குடித்துவிட்டு, மிகவும் பதட்டமாக, அவசர அவசரமாக ஏதையோ தேடினார். வீடு முழுக்க தேடினார். மிகவும் வேதனை அடைந்தார்.
அவன், “சித்தப்பா...! என்ன தேடுகிறீர்கள்…?”
“டேய்… ₹35,000 மதிப்பு உள்ள பொருளை வாங்கினேன்…!”
“சரி… என்ன என்று சொல்லுங்கள்…”
“அது வந்து... ஆமாம்... ஸ்மார்ட்போன்…!”
“சரி… நம்பர் சொல்லுங்கள். நான் ரிங் செய்கிறேன். ஏங்கே இருக்கிறது? என்று தெரிந்துவிடும்..!” என்றான்.
“இல்லை. சிம் கார்டு இன்னும் போடவில்லை…!”
சந்திரன் மிகவும் வேதனை அடைந்தார்.
அவன் தேடினான்.
சித்தப்பா சார்ஜரில் போட்டுவிட்டு அதை தேடுகிறார் என சரியாக யோசித்து… சார்ஜர் போடும் இடம் போய் பார்க்க… புதிய மொபைல் சார்ஜரில் இருந்தது.
“சித்தப்பா பாருங்கள்.. சார்ஜரில்தான் உங்கள் புது மொபைல் உள்ளது…”
“அடக்கடவுளே…! வந்த உடன் சார்ஜரில் நான்தான் போட்டேன்.. சே… என்ன ஞாபக மறதி…?”
சித்தப்பா அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
மொபைல் கிடைத்தவுடன் சந்திரன் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
அண்ணன் மகன்கள் இருவரும் அப்பாவிடம் சித்தப்பாவை மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்கள்.
மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரன், சந்திரனை பரிசோதித்தார்.
“வயது ஆனால் ஞாபக மறதி வருவது உண்டு. ஆனால், உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாக உள்ளது. நான் தரும் மாத்திரைகளை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். அதற்குபிறகு என்னைச் சந்திக்க வேண்டும்.”
சந்திரன் “சரிங்க டாக்டர்..!” என்றார்.
ஒரு மாதம் சிகிச்சை எடுத்ததில் சந்திரனிடம் பெரிய மாற்றம் இருந்தது. "என் பேனா, என் நோட்டு புத்தகம், என் வேஷ்டி, என் மூக்கு கண்ணாடி" என்று எதையும் தேடவில்லை.
ஒரு மாதம் முடிந்தது. சந்திரன் டாக்டர் ருத்ரனை சந்தித்து தனது பிரச்னை பெருமளவு குறைந்துவிட்டது என்று சொன்னார்.
டாக்டர், “வெரி குட்… இந்த மாத்திரையைத் தினமும் சாப்பிட வேண்டும். ஞாபக மறதி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நல்ல நினைவாற்றல் வரும்...”
“ரொம்ப நன்றி டாக்டர்…”
தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததால் சந்திரனுடைய ஞாபக மறதி மறைந்து, நினைவாற்றல் பெற்று சந்திரன் மிகவும் ஆனந்தம் அடைந்தார்!
வயதானால் பலருக்கும் ஞாபக மறதி வரும். இது இயற்கை. இதை ‘டிமென்ஷியா’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இதற்கு சிகிச்சையும் உண்டு.