

கடல் அலைகளைப் பார்த்தவாறு, தன்னை மறந்து அந்த மணல் பரப்பில் அமர்ந்திருந்தார் விநாயகம். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கையில், “சார், சுண்டல் வேணுமா? சூடா இருக்கு, வெங்காயம், மாங்கா, தேங்காய் எல்லாம் போட்டிருக்கு சார்,” என்றார் சுண்டல் விற்பவர்.
விநாயகம் குரல் கேட்டு, ஒலி வந்த திசையில் திரும்பி, “என்ன பெரியவரே?” என்றார்.
“சார், சூடான சுண்டல் இருக்கு, வேணுமா?”
“இல்லைங்க, எனக்கு இப்ப சாப்பிடணும்னு தோணல,” என்றார்.
விநாயகத்திடம் பதிலைக் கேட்டு மனச்சோர்வுடன் தன் நடையை வேறு பக்கம் திருப்ப ஆரம்பித்தவரை, விநாயகம் பார்க்க மனதில் என்னமோ தோண, “பெரியவரே நில்லுங்க,” என்றார்.
“என்ன சார்?” என்றார் அந்த முதியவர்.
“சுண்டல் எவ்வளவு?”
“பொட்டலம் பத்து ரூபாய்.”
“சரி, ஒரு பொட்டலம் கொடுங்க,” என்று அவரிடத்தில் பத்து ரூபாயை நீட்டினார் விநாயகம்.
முக மகிழ்ச்சியுடன் விநாயகத்திடமிருந்து அந்தப் பத்து ரூபாயை வாங்கித் தன் சட்டைப் பையில் போட்ட பின், மீண்டும் கேட்டார் அந்த முதியவர், “ஒண்ணு போதுமா சார்?”