

"டேய் நம்ப ரமேஷ் சிப்பாயில் சேர்ந்துட்டான் டா"- இப்படியான பேச்சு 70களில், 80களில் அதிகமாக கேட்கும்.
அந்தப் பேச்சுக்கு சொந்தமான கிராமம் தான் காத்திருப்பு.
'காத்திருப்பு' - இது தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்திற்கு 'காத்திருப்பு' என்கிற பெயர் எப்படி வந்தது என்பது தெரியவில்லை.
ஆனால் அங்கே 50 குடும்பங்கள் வசித்து வந்தன. ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் ஆண் வாரிசு பிறந்தால், அந்த ஆண் மகனை பட்டாளத்துக்கு அனுப்புவது என்பது வழக்கமாக இருந்தது.
அதனால்தான் என்னவோ பட்டாளத்துக்கு சென்று திரும்பி வரும்போது அந்த வீர மகனை வரவேற்க அந்த கிராமமே 'காத்திருந்து' வரவேற்ற விஷயம் அந்த ஊருக்கு 'காத்திருப்பு' என்கிற பெயரை வழங்கி சென்றிருக்க வேண்டும் .
இவ்வாறாக ரமேஷ் பட்டாளத்தில் சேர்ந்து பணியாற்றி, விடுப்பில் வீடு திரும்புவார்.
சிப்பாய் ரமேஷ் வருவதை அறிந்து அந்த கிராமமே அவருக்கு ஒரு ஹீரோ வெல்கம் கொடுக்கும்.
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊரே ஆர்ப்பரித்துப் போகும்.
அவர் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊரின் தெரு கோடியில் இருக்கும் தன் வீட்டிற்கு செல்வதற்கு முன் அவர் நடந்து வரும் நடையை பார்க்க கோடி கண்கள் தான் வேண்டும்.
அந்த மிடுக்கும், நடையும் அப்பப்பா !!
நம்ப "ரமேஷ் அண்ணா" வா இது ; எப்படி இருந்த புள்ள இப்படி ஆயிடுச்சு !!
ஹேர் கட், பருத்த வாலிப்பான உடம்பு, போதாக்குறைக்கு ஹிந்தி, இங்கிலீஷ் என பேசும் போது எல்லோரும் வாய் அடைத்து தான் போய் விடுவார்கள்.
ரமேஷ் - சும்மா சொல்ல கூடாது ; ஒவ்வொரு 2 வருடத்துக்கு ஒருமுறை வரும் போதும் அந்த ஊரில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் உடைகள், பொம்மைகள் என வாங்கி குவித்து கொண்டுதான் வருவார்.
இப்பவும் அவர் வருவது எல்லோருக்கும் தெரியும்; ஆனால் இப்போது அவர் தியாகி.
இதைப் புரிந்து கொள்ள குழந்தைகளுக்கு சில வருடங்கள் ஆகலாம்...
ஆனால் ஊருக்கு இது வெற்றியின் சின்னம்.
அரசு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தது ......
மரியாதை, மாலைகள் என சூழப்பட்டு ...
வேதனைகள் இருந்தாலும் வேற்றுமைகள் எல்லாம் கலைந்து ஒற்றுமையாய் ஒன்று கூடி அந்த கிராமமே அவருக்கு ஒரு 'ராஜ மரியாதையை', ஒரு 'வீர வணக்கத்தை' செலுத்தி கொண்டு இருந்தது.
அந்த சிறார்கள் மனதில் நாமும் அவராகவே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறிது சிறிதாக சிறகடிக்க ஆரம்பித்து விட்டது.
சேவை என்பது ஒரு புனித பயணம்.
அதில் பயணப்பட காத்திருக்கிறது ‘காத்திருப்பு’ கிராமம்......
பின்னோட்டம் :-
ஒரு சிப்பாய் தனது உயிரைத் தியாகம் செய்து, அவர் உடல் கிராமத்திற்கு வந்தால், அவருக்கு முழு இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.
தேசியக் கொடி போர்த்தப்பட்டு, வீர வணக்கம், மவுன அஞ்சலி, மற்றும் ஊர்மக்களின் மரியாதையுடன் அவரை வழியனுப்புவர்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here