

அன்புள்ள ஆருயிரே…!
மனதை திருடிய காதலியே…!!
மயங்க செய்த பத்மாவே…!!!
வணக்கம்.
நாம் 3 வருடங்கள் ஒன்றாக படித்தோம்; மறக்க முடியாது; நம் நெருக்கம் பெரிதாக இல்லை. நீ இப்போது எம்.எஸ்.சி சேர்ந்துவிட்டாய். எனக்கு உன்மீது கொள்ளை ஆசை, பிரியம், பாசம், நேசம் எல்லாம். நான் உன்னைக் காதலிப்பது உனக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
உன் கண்கள் பளீரென்று பளபளக்கிறது. ஈர்த்துவிடும் விழிகள். முகம் சந்திரன்போல் இல்லை; சூரியன்போல உள்ளது; யாரையும் ஈர்த்துவிடும். மேக்-அப் இல்லாமல் உன்னுடைய முகம் ஜொலிக்கிறது. அந்த ஜொலிப்புதான் என்னை மிகவும் ஈர்த்தது. நல்ல உயரம். மேலும், உன்னை விவரிக்க இயலாது. அது காமம்போல் இருக்கும். மொத்தத்தில் நான் கிளீன்போல்ட்.
நான் ஏன் காதலைச் சொல்லவில்லை என்றால் எனக்கு வேலை இல்லை.
ஆனால், நீ நம் கல்லூரியிலேயே படிப்பது மிக்க சந்தோஷம்.
எனக்கு உன்னைத் தினமும் பார்க்கவேண்டும் என்று தீராத ஆசை.
நான் வீட்டில் பத்மா என்ற பெண்ணைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் யாரும் எதிர்க்கவில்லை.
உன் கல்யாணம் பற்றி என்ன நினைக்கிறாய்…? நான் உன்னைக் காதலிப்பது குறித்து என்ன நினைக்கிறாய்? கல்லூரிக்கு வந்து உன்னோடு பேச ஆசை. ஆனால், பயம் என்னைத் தடுக்கிறது. ஒருவேளை நீ என்னைப் பிடிக்கவில்லை என்றால் என் உயிரே போய்விடும்.
உங்கள் வீட்டு முகவரி எனக்குச் சரியாகத் தெரியாது. பெருமாள் கோயில் அருகே உள்ளது என்பது மட்டுமே தெரியும். எனவேதான் பத்மா, பெருமாள்கோவில் தெரு என்றுதான் முகவரியில் எழுதியுள்ளேன்.
பத்மா…! என் உயிரே…!! ஒரு குட் நியூஸ். எனக்கு எல்.ஐ.சி.யில் வேலை கிடைத்து உள்ளது. எனக்கு மிகவும் சந்தோஷம். இப்போது எனக்கு உங்கள் வீட்டிற்கு என் பெற்றோர் உடன் வந்து பெண் பார்க்க ஆசை.
நீ வீட்டில் என்ன சொல்லி இருக்கே…? நாங்கள் வரலாமா…?
என் முகவரி இந்தக் கடிதத்தில் உள்ளது. நீ நிச்சயமாகப் பதில் போடவேண்டும். நான் இப்போதே கல்யாணத்திற்கு ரெடி பத்மா… நீ என்ன நினைக்கிறாய்? நீ இல்லை என்றால் நான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்வேன். ஒரு தாய், தன் குழந்தைமீது எவ்வளவு பிரியம் வைத்து இருக்கிறாரோ அதே அளவுதான் நான் உன்மீதும் பாசம், காதல்கொண்டு உள்ளேன். சரி. பத்மா… நான் முடிக்கப் போகிறேன்.
நான் உன்னைக் கல்லூரியில் வந்து பார்த்துப் பேசமுடியுமா?
இல்லை என்றால் நேராக உங்கள் வீட்டிற்கு என் அம்மா, அப்பா உடன் வந்து பெண் கேட்கவா…? எல்லாம் உன் கையில்தான் உள்ளது. உன் விருப்பத்தைச் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஐ லவ் யூ டியர்…!
கடைசியாக ஒரு விஷயம். என் உயிர் உங்களிடம்தான் உள்ளது. உங்களைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன். இது சத்தியம். தயவுசெய்து பதில் போடுங்கள். பத்மா…!
என் மனம் முழுக்க நீதான்மா..!
அன்பு முத்தங்களோடு… உன் பதிலை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறேன்.
வித் லவ். ராமு…!
**************
லவ் லெட்டர் அனுப்பிய 2 நாட்களில் ஒரு கவர் வந்து இருந்தது. கவரைப் படபடக்கத் திறந்தார். ஒரே ஒரு பக்கம்தான். அதில் வேறு எதுவும் இல்லை. பத்மாவின் முகவரி…
பத்மா,
D/O, சிவராமன்,
108, பெருமாள் கோவில் தெரு,
ஊட்டி- 643 001.