

ஊருக்குச் சென்று திரும்பி வந்தால் செந்தில் நாதன் முதலில் செய்யும் வேலை மேஜையில் அவருக்காக காத்திருக்கும் தினசரி மற்றும் வார, மாத இதழ்களை படிப்பதுதான். இந்த முறை இதழ்களுக்கு இணையாக திருமண அழைப்பிதழ்களும் அடுக்கி இருக்க, அதனை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து பக்கத்தில் இருந்த டைரியில் குறிக்க அதனை எடுத்தார்.
அவர் மனைவி அதனை ஏற்கனவே தெளிவாக எழுதி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் செய்திருந்த மொய்ப் பணம் வருடத்தையும் எழுதி இருந்தார்.
மனைவி விரும்பிய வாழ்க்கையை தர முடியாவிட்டாலும் அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் செந்தில் நாதன் மன நிறைவாக இருந்தார். மனைவி தன்னுடன் வாழ்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று ஒரு முறையும் அவரிடம் கேட்டதில்லை. அதுவே சண்டையாக மாறிவிடுமோ என்கின்ற பயம் அவருக்கு.
ஒரு முறை அவர் மகள் "இந்த அப்பாவோட எப்படி குடும்பம் நடத்துறே" என்று ஏதோவோரு கோபத்தில் திட்டும்போது,
"உனக்கென்னப் புத்தி கெட்டுப் போச்சா. அவரும் நானும் சண்டை போட்டுக்கிறோம்தான். நான் சந்தோசமாக இல்லைன்னு உன்கிட்ட சொன்னேனா" என்று சொன்னதைக் கேட்டப் பிறகுதான் தன்னோடு வாழ்வதில் அவர் சந்தோசமாக இருக்கிறார் என்பது செந்தில் நாதனுக்குத் தெரிந்தது.
ஒவ்வொரு அழைப்பிதழ்களாக பார்த்துக் கொண்டே வரும்போது ஒன்றைப் பார்த்ததும் அவருக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
அந்த நகரத்தின், மற்றும் நாடு முழுவதும் அறியப்பட்ட சாதித் தலைவர் தன் தாத்தாவின் பெயர் தன் தந்தையின் பெயர் தன் பெயர் தன் மகன் பெயர் எதிலுமே அவரின் ஜாதிப் பெயரைக் குறிப்பிடாமல் இருந்தார்.
மகிழங்கோட்டை மணிவண்ணனுக்கு அவர் உறவினர் என்பதால் அவருக்கு போன் செய்தபோது தான் விவரங்கள் சொன்னார்.
"டேய்... அதாடா. அவுங்க டாக்டருக்கு படிக்கும்போதே லவ் பண்ணிட்டாங்களாம். வேற வேற ஜாதியாம். அதான் அவர் எதுவுமேப் போடலையாம்."
தன் நண்பனின் காதலைப் பிரித்தவர் என்ற கோபம் சாதித் தலைவரின் மேல் செந்தில் நாதனுக்கு எப்போதும் உண்டு.
'வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது உண்மையாகிவிட்டது' என்று செந்தில் நாதன் நினைத்தாலும் காதலும் ஜாதியை ஒழிக்கும் என்பதை நினைத்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்.