

"அப்பா, மாடி போர்ஷன் காலியாயிருக்குன்னு பேப்பர்ல விளம்பரம் குடுத்தோம் இல்ல? அதைப் பார்க்க வரேன்னு ஃபோன் பண்ணாங்க. நான் கொஞ்சம் வெளிய போறேன். சாவி இந்த ஆணியில மாட்டியிருக்கேன். வந்தா வீட்ட காட்டுங்கப்பா. உங்களால போக முடியலைன்னா சாவியைக் குடுங்க, அவுங்க பார்த்துட்டு தருவாங்க" ரஞ்சனி சொல்லிக்கொண்டே சின்ன போனி டெய்ல் போட்டு நெற்றிப்பொட்டை சரி பண்ணிக்கொண்டாள்.
"சரிம்மா. வேலை வீட்லேர்ந்துனு சொன்னியே" விஸ்வம் கேட்டார். தனியா இருக்கணுமேன்னு பயம் அவருக்கு, வயது 80 ஆனதால் தள்ளாமை.
"பாங்க் வேலை ஒண்ணு இருக்குப்பா. சீக்கிரம் வந்துடுவேன்" என்றாள் சிரித்துக்கொண்டே. அவர் தலையை லேசாகத் தடவியபடி.
"ஃபிளாஸ்க்ல வெந்நீர் இருக்கு. பக்கத்துலயே ஹார்லிக்ஸ் இருக்கு, குடிச்சுக்கோங்க. அஞ்சுகம் அக்கா வருவாங்க வேலைக்கு. தனியா இருக்க மாட்டீங்க. நான் வரவா," என்றபடி எதிரே வந்துவிட்ட அஞ்சுகத்திற்கு கையசைத்துவிட்டு கிளம்பினாள்.
"சார்.. சார்..." இரண்டு நபர்கள் வாசலில் நின்று குரல் கொடுத்தார்கள்.
"வாங்க," என்றார் விஸ்வம்.
"மாடி வீடு..." என்றார் வந்தவர்.
"சாவி தரேன். இந்தம்மா கூட்டிட்டு போவாங்க. என்னால மாடி ஏற முடியல. பார்த்துட்டு வாங்க. பேசலாம்" என்றவாறு அஞ்சுகத்திடம் சாவி கொடுத்து அவர்களோடு அனுப்பினார்.
பார்த்துவிட்டு வந்தார்கள். ரஞ்சனியும் சரியாக வந்தாள் அப்போது. "எங்களுக்கு பிடிச்சிருக்கு. நாளைக்கே பால் காய்ச்சலாம். வாடகை எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா..." என்றார் வந்தவர்.
விஸ்வம், "எத்தனை பேர்?"
"ரெண்டு பேர் தான்" - வந்தவர்.
"நீங்களும் உங்க சம்சாரமும் தானா?" - விஸ்வம்.
"நானும் இவ(ர்)ங்களும் தான்" - வந்தவர்
"என்ன? நீங்க ரெண்டு பேரா! பேச்சிலர்ஸ்க்கு இல்லைன்னு போட்டிருந்தேனே..." விஸ்வம் கொஞ்சம் கோபமானார்.
ரஞ்சனி சட்டென்று, "அப்பா, அவங்க பேச்சிலர்ஸ் இல்லப்பா. ஃபேமிலி தான்."
"சார் நீங்க நாளைக்கு பால் காய்ச்சுக்குங்க" என்று சொல்லி அப்பாவிடம், "இப்ப இப்படியும் இருக்காங்கப்பா. நல்லவங்கதான் அப்பா. நமக்கு தொந்தரவு குடுக்கலைன்னா, நாமளும் கண்டுக்காம இருக்கறது நல்லது. எங்கிட்டே பேசிட்டு தான் வந்தாங்க. யோசிச்சு தான் நானும் வரச்சொன்னேன்!" என்றாள்.