

அந்த மனை சுமார் 50 வருடங்களுக்கு மேலாக காலியாகவே இருந்தது. அதன் எதிரே அரசினர் ஆரம்பப் பள்ளிகூடம். இருபுறமும் வீடுகள்.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்த மனைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இது ஒரு சாபமாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காலிமனையில் விளையாடினலோ வேறு எந்தச் செயல் செய்தாலும் சாமி குத்தம் ஆகிவிடும் என்ற கருத்து அங்கே நிலவியது. காலி மனை சுமாராக 6 சென்ட்.
மூட நம்பிக்கையைப் போக்க அந்த தெரு கவுன்சிலர் அங்கே ஷெட் அமைத்து 10 கார்கள் நிற்பதற்கு வழி வகை செய்தார். இதன்மூலம் அங்கே மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. ஆரம்பித்து ஒரு சில மாதங்கள்தான் ஆகி இருக்கும்.
திடீரென்று ஒருநாள் சுமார் 8 மணி அளவில் காலையில் கூட்டம் கூடியது. அதுவே சிறுக சிறுக பெரிய போர்க்களமாக மாறியது. எங்கும் கூச்சல், குழப்பம்.
காவல்துறைக்குச் செய்தி அனுப்பப்பட்டு எஸ்.பி. காவலர்களுடன் அங்கு வந்தார். மனை சுத்தமாகத் தடுக்கப்பட்டு அங்கு செல்ல யாவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
செய்தி அறிந்து ஊடகங்கள் அங்கு கூடின. மேலும் காமிராக்கள், செய்தி சேகரிப்பவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் அங்கே, பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு செய்தி வெளியானது; அதுவே ‘Breaking News’ ஆக ‘Viral’ ஆனது.
அங்கே நிறுத்தப்பட்டு இருந்த கார்களின் பின் வரிசையில் உள்ள ஒரு வண்டியின் பின் இருக்கையில் ஒரு வித்தியாசமான நபர் சடலமாக இருக்கிறார். இதுபற்றிய முழுவிவரம் பிறகு தெரிவிப்போம் என்றும் எஸ்.பி. தன் முதல்கட்ட அறிக்கை வாயிலாக மீடியாவிற்கு சொன்னார்.
அதற்குள் அந்த மனைப் பற்றியும், அந்த மனையின் வாயிலாக வந்த கற்பனைக் கதைகளும் you - tube முதல் உள்ளூர் பாட்டி வரை உடனே பேசு பொருள் ஆனது. கவுன்சிலர் அதற்குள் தலைமறைவு என்கிற Flash News பின்னோட்டமாக ஒளிபரப்பப்பட்டது.
காவலர்கள் ஒருவழியாக அந்தக் காரை அப்படியே எடுத்து வந்தனர். இப்போது முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தது. முன்புறம் இருந்த கார் ஓட்டுனர் மட்டும் எல்லா மீடியாக்களுக்கும் தெரியும்படி இருந்தார். உள்ளே உள்ள அந்த இறந்த நபரைப் பற்றிய செய்தி இன்னும் வெளிவரவில்லை.
பல வகையான photos எடுக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தங்கள் ரகசியத்தை கட்டிக் காத்தனர். தமிழ்நாடு முழுவதும் எங்கள் பள்ளியும், தெருவும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு எங்கள் தெருவின் Entry & Exit points மூடப்பட்டன.
அன்று மாலை மாநகர காவல் ஆணையர் சென்னையில் இருந்து மீடியாக்களுக்கு பதில் கூறினார். “காரின் உள்ளே வித்தியாசமான உருவமைப்புடன் உள்ளவர் ஒரு Asian from China.” குற்றவாளியை கூடிய விரைவில் பிடித்து விடுவோம் என்று அவர் தன் முதல்கட்ட அறிக்கையில் சொன்னது Viral ஆனது.
அடுத்து, கவுன்சிலர் காட்டுமன்னார்குடி அருகே பிடிபட்டார் என்ற செய்தியும் பேசுபொருள் ஆனது.
எங்கள் தெரு கவுன்சிலர் கூறுகையில் “செய்தி கிடைக்கப் பெற்றேன்; நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்; நான் திருப்பதி சென்று திரும்பி வருகிறேன், வரும் வழியில் என் மைத்துனர் வீட்டில் இருந்து பேசுகிறேன். மேலும், அங்கு நான் சென்றது என் மகள் வழி பேத்தி பிறந்தமைக்கு," என்று மிகுந்த கவலையுடன் சொன்னார்.
"என் பங்கிற்கு எல்லா ஒத்துழைப்பையும் அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் முழுமனதுடன் எந்த ஒரு பாரபட்சமின்றி எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன் என்பதை உங்கள் (செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள்) வாயிலாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் சொன்னார்.
அதற்குள் அங்கே உள்ள மீடியாக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தெருவாசிகளிடம் ‘மனை பற்றியும், மனையின் மர்மம்’ பற்றியும் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொருவரும் அந்த மனையைப் பற்றி விதவிதமான தகவல்களைக் கூறினர்.
எல்லாவற்றையும்விட தெருவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரின் பேட்டி 10 நிமிடங்கள் நீடித்தது. அவர் ஏற்கனவே அங்கு பில்லி, சூன்யம் வைத்து இருப்பதாகவும் இந்தப் பேயை விரட்ட கேரளா சென்று மாந்திரியம் கற்று வந்ததாகவும் தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
“யாரும் எந்த ஒரு மீடியாவிற்கும் எந்த ஒரு தகவலையும் சொல்லக்கூடாது; அப்படி மீறினால் அவர்களுக்கு 1 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்” என்றும் அரசு பிரகடனப்படுத்தியது. பிரச்னைகள் அதிகமாகவதைத் தடுக்கத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிலைமை சகஜமாக 10 நாட்கள் ஆகின. பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர்.
10 நாட்கள் கழித்து வந்த அரசு செய்தி:
“அந்த பகுதியில் ஏதோ பேய் இருப்பதாகவும் அங்கே செல்லக் கூடாது என்கிற செய்தியும் அறிந்தோம்; ஊர் மக்களின் மன நிலையை நன்கு அறிந்து இருக்கிறோம். ஆகவே அமைதி காத்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்” என்று முதன்மை செயலாளர் செய்தி வெளியிட்டு இருந்தார்.
"இந்தத் தெரு கவுன்சிலர் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல பல காரியங்களைச் செய்து உள்ளார். ஆகவே எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம்"- பள்ளியில் பெரிய விளம்பரம் செய்யப்பட்டது.
"இறந்து போனவர் ஒரு அயல்நாட்டுக்காரர் என்பதால், நாங்கள் டெல்லியில் உள்ள Consulate General-ஐ தொடர்பு கொண்டு இதுவரை நடந்த நிகழ்வுகளை மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பித்து உள்ளோம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் துப்பு துலங்குவதில் பெரும் உதவியாக இருக்கும்," என்றும் கூறப்பட்டது.
பதினைந்து நாட்கள் சென்றுவிட்ட நிலையில் மக்கள் தத்தம் வேலைகளை பார்ப்பதில் மும்முரமாக இருக்கத் தொடங்கினர். ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களை காட்சி ஊடகத்திற்கு பகிர்ந்த வண்ணம் இருந்தனர். உண்மையைக் கண்டுபிடிக்கவில்லையென்றால் இது ஒரு மாபெரும் போராட்டமாக மாறும் என்றும் எச்சரித்தனர்.
‘விசாரணைக்குட்பட்ட பகுதி’ என்று அறிவித்து, கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன. அங்கே ராட்ச மின் கம்பம் நிறுவப்பட்டது. அது அந்த தெருவிற்கே நல்ல வெளிச்சத்தைத் தந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு மாதத்திற்கு பிறகு கிடைத்த செய்தி:
கவுன்சிலரின் தாய்மாமாவின் நண்பரானவர் அதே தெருவில் 30 வருடங்களாக வசித்து வருகிறார். அவருடைய மகன்கள் அமெரிக்காவில் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் artificial intelligence மூலம், இந்த உடலை Embalming செய்து உள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அதிர்ச்சி ஊட்டும் வகையில், 'இறந்த உடல் ஒரு மனிதக் குரங்கு; மனிதக் குரங்கைப் பதப்படுத்தியதால் வந்த விளைவுதான்' என்பதை காவலர்கள் தெரிவி்த்தனர். அனைவரும் இவ்விடத்தை உபயோகப்படுத்தலாம் என்றும், பேயுமில்லை, இது எல்லாம் சாமி குத்தம் என்றும் சொல்ல வேண்டாம் என்றும், வீண்வதந்திகளுக்கு காவலர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
கவுன்சிலரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டுமென்பதும், அரசியல் காழ்ப்புணர்ச்சியும்தான் காரணம். இந்தச் செயலுக்குக்காக அவருடைய தாய்மாமன் மற்றும் அவரைத் தூண்டிய நண்பரையும், மனிதக்குரங்கை மனிதனைப் போல் பதப்படுத்திய நண்பரையும் மகனையும் கைது செய்தனர்.