

மேலமாங்குடி மலை அடிவாரக் கிராமம். அடர்ந்தகாடுகள் சூழ்ந்த வனப்பகுதி அங்கிருந்து தான் ஆரம்பம்.
அடிக்கடி மேலமாங்குடியில் ஆடுகள் காணாமல் போயின. கிராமத்து விவசாயிகள் கவலை அடைந்தனர். கடைசியில் காரணம் தெரிந்து விட்டது.
ஆட்டுத் தொழுவங்களில் சிறுத்தை கால் தடம் தெரிந்தது.
கிராமத்து பஞ்சாயத்து கூடியது.
தலைவரிடம் ஒரு விவசாயி, “ஐயா.. சிறுத்தை நடமாட்டம் இருக்குதுங்க. ஆடுகளை அது தான் இழுத்துப் போகுது. கொஞ்ச நாள் ஆனா மனுஷாளுக்கும் ஆபத்து தான்.”
தலைவர் தன் மொட்டைத் தலையைத் தடவியபடி,
“சரி இப்போ இதுக்கு ஒரே வழி சிறுத்தையை வேட்டையாட வேட்டைக்கார ஜம்புவை அனுப்பலாம். என்ன சொல்றீங்க.”
கூட்டத்தில் ஒருவன், “அவர் இது வரை ஒரு குருவி காக்கா கூட சுட்டு நான் பார்த்ததில்லீங்க. தினம் காலையில் தொப்பி துப்பாக்கி சகிதமா காட்டுக்குள் போவாரு. மாலையில் திரும்புவாரு. என்ன பண்றாரு காட்டுக்குள்ளன்னு யாரும் பார்த்ததில்லை.”
“சும்மா இருங்கப்பா. சிறுத்தையை சுடுறதுன்னா சும்மாவா. இந்தாப்பா ஜம்புவை போய்க் கூட்டி வா.”
சிறிது நேரத்தில் ஜம்பு வந்து தன் தோளில் இருந்த துப்பாக்கியை மடியில் கிடத்தி அமர்ந்தார்.
“ஐயா அவசரமா கூப்பிட்டீங்களாமே.”
“ஆமாம் ஜம்பு.. சிறுத்தை நடமாட்டம் ஊருக்குள் இருக்கு. நீங்க தான் அதை வேட்டையாடணும். அதுக்கு காட்டு இலாக்கா அதிகாரி அனுமதிக் கடிதம் தந்திட்டார். முடிஞ்சா உயிரோட பிடிங்க. இல்லாட்டி சுட்டு விடலாம்.”