
பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் எண்ணத் தெரியும் என்று சொன்னால் ஆச்சரியம் தான் ஏற்படும். ஆனால் அது உண்மை! ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உளவியில் பேராசிரியாகப் பணி புரியும் மைக்கேல் பெரான் (MICHEAEL BERAN, PROFESSOR OF PSHCHOLOGY, GEORGIA STATE UNIVERSITY) பெரிய ஆய்வு ஒன்றைச் செய்து பல பூச்சிகள், பறவைகள், நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றிற்கு அளவுகள் நன்கு தெரியும் என்கிறார்.
நியூமராசிடி (numerosity) என்று கூறப்படும் அளவுகள் பற்றிய அறிவு இவற்றிற்கு இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உயிர் வாழத் தேவையானது உணவு. உணவை உட்கொண்டு உயிர் வாழ்வதோடு அவை தனது ஜீன்களுக்கு இந்த அறிவைக் கொண்டு செலுத்துகின்றன.
தேனீக்கள் பறக்கும் போது எங்கெல்லாம் தேன் அதிகம் உள்ள மலர்களைக் காண்கிறதோ அந்த வளமான பகுதிகளை எண்ணி வைத்துக் கொள்கிறது. கோல்டன் ஆர்ப் வீவர் ஸ்பைடர் எனப்படும் சிலந்திப்பூச்சிகள் (Nephila clavipes) தங்களது கூட்டில் எத்தனை பூச்சிகளைப் பிடித்து வைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்கின்றன.
தவளைகளில் துங்க்ரா தவளைகள் (Physalaemus pustulosus) தங்களது செக்ஸ் அழைப்புக்கு இந்த எண்களைத் துணை கொள்கிறது. ஒரு ஆண் தவளை முதலில் சக் என்கிறது. உடனே இன்னொரு ஆண் தவளை சக் என்று பதில் தருகிறது. இந்த சக் என்னும் ஒலிப் போட்டி தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியில் ஒரு தவளை சக்தி இல்லாமல் சக் சொல்லாமல் நின்று விடுகிறது. அதிகமாக சக் சொல்லி, ஜெயித்த தவளை பெண் தவளையை ஈர்த்து செக்ஸில் வெல்கிறது.
பெண் சிங்கங்களை (Panthera leo) எடுத்துக் கொண்டால் எதிரியின் பலத்தை அறிந்து கொள்ள ஹோ என்று கர்ஜிக்கின்றன. பதில் கர்ஜனை உடனே வரும். எத்தனை பதில் கர்ஜனைகள் வருகிறது என்பதை எண்ணிக் கொண்டு அதை எதிர்த்துத் தாக்கலாமா வேண்டாமா? என்று முடிவு செய்கிறது.
2024ல் நடந்த ஒரு அதிசய ஆய்வில் பூமியில் உள்ள காக்கைகளில் உள்ள ஒரு அதிசயமான இனமான கேரியன் காக்கைகள் (Corvus corone) நினைவூட்டும் குறிப்புகளாக கா, கா என்று ஒன்று முதல் நான்கு முறை வரை கத்திக் கத்தி செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன.
இவை அனைத்தும் மனிதனுக்கு நிகராகாது என்றாலும், இவை எண் பற்றிய அறிவைக் கொள்ளும் ஒரு ஏ என் எஸ் எனப்படும் அப்ராக்ஸிமேட் நம்பர் சிஸ்டத்தைக் (ANS – Approximate Number System) கொண்டவையாகும்.
இதை விட ஆச்சரியமான சம்பவம் ஒன்று 1891-ம் ஆண்டு நிகழ்ந்தது. சாதாரண பள்ளி வாத்தியாரான வில்லியம் வான் ஆஸ்டன் என்பவர் தனது க்ளூஸ் ஹான்ஸ் என்ற குதிரைக்கு கணக்குப் போடும் திறனைக் கற்றுக் கொடுத்தார். ஒரு மேஜை மேல் கொட்டைகளை வைத்தால் எத்தனை இருக்கிறதோ அத்தனை தடவை அது தனது கால் குளம்புகளைத் தட்டிக் காட்டி எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லும்.
இதனால் கவரப்பட்ட எல்பர்பெல்ட் நகரில் இருந்த ஒரு நகை வியாபாரியான ஹெர் க்ரால் என்பவர் தன்னுடைய குதிரைகளுக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அவருடைய நான்கு குதிரைகளான முகம்மது, ஜரீஃப், பெர்டோ மற்றும் ஹான்சென் வர்க்கம் மற்றும் க்யூப் ரூட்டைக் கூட போட ஆரம்பித்தன. இதில் ஆங்கில ஸ்பெல்லிங்கை வேறு அவை தெரிந்து கொண்டன. 34 என்று சொன்னால் இடது கால் குளம்பை மூன்று தடவையும் வலது கால் குளம்பை நான்கு தடவையும் அவை தட்டும்.
இது உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே இது உண்மை தானா? என்பதை அறிய நோபல் பரிசு பெற்ற பிரபல சிந்தனையாளரான மௌரிஸ் மேடர்லிங்க் (பிறப்பு28-8-1862 மறைவு 6-5-1949) எல்பர்பெல்ட் நகருக்கு வந்து நேரில் முகம்மதைப் பார்த்தார். குதிரை அவர் பெயரைக் குளம்புகளினால் தட்டிக் கூறி அவரை வரவேற்றது.
பல கணக்குகளை அவர் போட்டார். விடைகளைச் சரியாக குதிரை கூறியது. அதிசயித்த அவர் குதிரை கணக்குப் போடுவது உண்மை தான் என்று கூறினார். உலகமே வியந்தது. இப்போது நவீன யுகத்தில் இது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன. நாளுக்கு நாள் வரும் சோதனை முடிவுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.