
வாழ்க்கையில் எது எப்போது நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. அப்போது பாபு- கோபு படித்துக்கொண்டு இருந்தார்கள். பாபு அண்ணன். கோபு தம்பி. பாபு கல்லூரியில் படித்துவந்தார். கோபு +1 படித்து வந்தார்.
அவர்கள் வாழ்வில் ‘சுனாமி’ வந்தது. ஆம். அப்பா, அம்மா கோயிலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். ‘தண்ணி’ அடித்துவிட்டு லாரியை கண் மூடித்தனமாக ஒட்டி வந்தார். ‘போதை’ யில் ஒட்டி சென்ற லாரி ரோட்டில் நடந்துகொண்டிருந்த இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தை பற்றி கேட்ட பாபு-கோபு பயங்கர துக்கத்தில் மூழ்கினார்கள். பயங்கர ஷாக். பேரதிர்ச்சி. பாபு தனது பொறுப்பை உணர்ந்தார். கோபுவை தான்தான் படிக்க வைக்க வேண்டும் என்று உணர்ந்தார். ஒரு மாதம் சரியாக சாப்பிடவில்லை. சரியாக தூங்கவில்லை.
பாபு கோபுவிடம் இன்று முதல் +2 வகுப்பிற்குச் செல்லச் சொன்னார்.
“சரி… பாபு… !” கோபு பாபுவை பேர் சொல்லித்தான் கூப்பிடுவார்.
“பாபு… உன் டிகிரி…?”
“இல்லை. நான் படிப்பை நிறுத்தப் போகிறேன். நீ நன்கு படித்து, பெரிய வேலையில் சேர்ந்து என்னைக் காப்பாற்று..!”
“அப்போ இப்போது எப்படி சாப்பிடுவது…?”
“கோபு... அப்பா வங்கியில் கொஞ்சம் பணம் மட்டுமே வைத்து இருக்கிறார். அதை நம்பி நாம் இருக்க முடியாது..!”
“அப்போ… பணம்…?”
“நீ இதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். நீ டிகிரி முடித்து மேல் படிப்பு படிக்க வேண்டும்… இதுதான் உன் உள்ளே ஒட வேண்டும்…!”
கோபு +2 வகுப்புக்குப் போக ஆரம்பித்தார்.
பாபு… தான் இருந்த பகுதியில் காலை எல்லா வீட்டிற்கும் பால் மற்றும் பேப்பர் விநியோகம் செய்ய ஆரம்பித்தார். காலை 4 மணிக்கு எழுந்து சென்றால் காலை 7 மணிக்குத்தான் வேலை முடியும். அப்பா வைத்து இருந்த ஸ்கூட்டிதான் பாபுவிற்கு வரப்பிரசாதமாக இருந்தது.
பின்னர் தனது வீட்டிற்கு அருகிலேயே இருந்த லெதர் தொழிற்சாலையில் சூப்பர்வைசர் பணியில் சேர்ந்தார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை.
பிறகு வீட்டிற்கு வந்து குளித்து விட்டு சமையல் செய்வார். கோபு உதவிக்கு வந்தால்… கோபத்துடன் “ போய் நல்லா படி…!” என்று பதில் சொல்லி விடுவார்.
காலை மற்றும் மதியம் இருவரும் கையேந்தி பவன்தான். தினமும் கோபுவிற்கு ₹ 50 கை செலவுக்கு கொடுத்துவிடுவார். கோபு மனதில் வருத்தம். நல்லா படித்துக்கொண்டு இருந்த பாபு படிப்பை துறந்து வேலைக்கு செல்வது வருந்தத்தக்கதாக இருந்தது.
பாபு ரொம்ப பிசி. காலை 3.40க்கு எழுந்து பால், பேப்பர் போட்டு முடிக்க 7 மணி ஆகி விடும். பின்னர் ஒரு அரைமணி நேரம் ஒய்வு எடுத்து விட்டு… கோபுவை கூட்டிச்சென்று கையேந்தி பவனில் காலை டபன் சாப்பிட்டு விட்டு கோபு பள்ளிக்கு சென்று விடுவார்.
இந்த வருடம் +2 பொது தேர்வு. எனவே பாபு அடிக்கடி இதை கோபுவிற்கு நினைவு படுத்தினார்.
+2வில் கோபு 90% வாங்கினார்.
பாபுவுக்கு ரொம்ப சந்தோஷம்.
நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும். கோபு AI செயற்கை நுண்ணறிவு பாடம் படிக்க விரும்பினார். நல்ல செலக்ஷன் என்றார். அவர் விரும்பிய அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
கோபு தான் சேமிப்பு செய்த பணத்தில் பாபுவிற்கு ஒரு பேண்ட், ஒரு டீ ஷர்ட் வாங்கி கொடுத்தார்.
பாபு மெய்சிலிர்த்தார்.
பாபு… கோபு கல்லூரிக்கு போக இருப்பதால் மூன்று பேண்ட் ஐந்து ஷர்ட் வாங்கி தந்தார்.
கோபு ஒரு விண்ணப்பம் வைத்தார். அதாவது மாலையில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறேன் என்று சொன்னார்.
“கோபு… பணம் பற்றி நீ யோசிக்காதே… ! முடிந்தால் முதல் மாணவனாக வர முயற்சி செய்…!”
“பாபு.. பாபு… !” என்று கண் கலங்கினார்.
கோபு பாபுவை கட்டி பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தார்.
நாட்கள் ஓடின. மாதங்கள் பறந்தன. வருடங்கள் நகர்ந்தன.
கோபு மாநிலத்தில் முதல் மாணவனாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.
பாபுவிற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்….?
பாபுவின் தியாகம் வீண் அல்ல..!
கோபு படித்து சாதித்து விட்டார்.
கோபுவுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
இனி என்ன… ?
பாபு திரும்பவும் படிக்க தீர்மானம் செய்து விட்டார்… !