

-ஷாராஜ்
காற்றுக்காக, சமையற்கட்டின் பின்கதவைத் திறந்துவிட்டு, அதற்கு நேராகவே தரையில் பழஞ்சேலையை விரித்துப் படுத்திருந்தாள் அம்மா. பொதுவாக அவள் பகல்நேரங்களில் தூங்குவது கிடையாது. இன்று காலையிலேயே பக்கத்து ஊரிலிருக்கிற ரேஷன் கடைக்குச் சென்றிருந்தாள். மண்ணெண்ணெயும் அரிசியும் வாங்கி, அவற்றை இந்த வேகாத வெயிலில் சுமந்துகொண்டு வீடு வந்து சேர்த்தியிருக்கிறாள். சுமையும் நடையுமாக உண்டான களைப்பினாலேயே படுத்துக்கொண்டிருப்பாள் போலும்.
ரகுபதி கண்ணாடி ஸ்டேண்டில் சேகரித்து வைத்துள்ள தீப்பெட்டிப் பக்குகளை எடுத்துக்கொண்டு விளையாடக் கிளம்பும்போது, "தண்ணி லாரி வந்துருச்சுன்னா எளுப்புடா" என்றாள் அவனிடம். அவன் சரியென்ற பிறகும், "வெளையாட்டு முசுவுல மறந்திறாத. அப்புறம் குடிக்கறக்குக்கூடத் தண்ணியில்லாம ரெண்டு நாளைக்கு லோல் படோணும்" என்ற எச்சரிக்கையோடு, "ஒரு கொடத்த வரிசைல வெச்சுரு' என்றாள்.
அவற்றுக்கும் தலையசைத்துவிட்டு ரகுபதி நகர்ந்தான். திண்ணையில் ஐந்து குடங்களைக் காலியாக்கி வைத்திருந்தாள் அம்மா. அதில் மஞ்சள் குடத்தை எடுத்துக்கொண்டான். படிக்கட்டுகளிலிருந்து செருப்பை அணிந்து வாசலுக்கு வரும்போது வெளிச்சம் கண்ணைக் கூசியது. சந்து வழியே நடந்தான். வெயிலில் எண்ணெய்த் தலை லேசாகச் சூடேறியது. தூரத்து ஓட்டுக் கூரைகள் நடுங்கும்படியான கானல்.