
சமீப காலங்களில் குழந்தைகள் பிறந்த சில மணித்துளிகளிலேயே திருடப்பட்டு முன்பின் தெரியாதவர்களிடம் ஒரு வணிகப்பொருளாக விற்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இது சமூக ஆர்வலர்களுக்கு கவலையைத் தருகிறது.
தாய்மை என்பது ஒரு தவம். ஒரு குழந்தையை தீண்டும்போது நம் மனமும், உடலும் பரவசம் அடைவது உண்மையே. குழந்தைகள் நம் நாட்டின் எதிர்கால தலைவர்கள். நன்கு வார்க்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டியவர்கள். சட்டங்கள் அனைத்து குழந்தைகளும் அனைத்து உரிமைகளையும் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதரவற்ற குழந்தைகளை ,குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர் தத்து எடுத்து வளர்ப்பது சமீபகாலங்களில் சமூகத்தில் பரவலாக காணப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தத்து எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. குழந்தைகளை தத்து எடுக்கும் வழிமுறைகளில் குழந்தையின் பெற்றோர்களிடம் இருந்து முறைப்படி நேரடியாக பெறுவது, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆதார மையத்தின் மூலம் ’இணையத்தில்’ பதிவு செய்து குழந்தைகளை தத்து எடுப்பது போன்ற வழிமுறைகள் நடப்பில் உள்ளன.
நமது இந்தியப் பண்பாட்டின் பெரிய பலமும், அடித்தளமும் குழந்தைகளும், குடும்ப அமைப்புகளும்தான். இது உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை திருமண உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே பெறுகிறார்கள். குடும்ப அமைப்பில் சுயக்கட்டுப்பாட்டும் ஒழுக்கமும், அன்பும் ஊட்டப்பட்டு ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
நம் நாட்டில், பல லட்சம் குழந்தைகள் பல்வேறு காரணங்களால் ஆதரவற்றவர்களாக மாறுகிறார்கள். கனிசமான எண்ணிகையிலான குழந்தைகள் அரசின் காப்பகங்களில் இருக்கிறார்கள். ஆதரவற்ற குழந்தைகளை கண்டெடுப்பவர்கள் முறையான வழிமுறைகளை அறிந்தவர்களாக இருந்தால், அவர்களை அரசு அல்லது தனியார் காப்பகங்களில் ஒப்படைப்பது வழக்கம்.
இவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகள், அந்த மையங்களில் அறுபது நாட்கள் வரை தங்க வைக்கப்படுகிறார்கள். அந்தக் கால அவகாசத்திற்குள் யாராலும் உரிமை கொண்டாடப்படாத குழந்தைகள் அரசு தத்தெடுப்பு நிறுவனங்களில் சேர்க்கப்படுகிறார்கள். நடைமுறையில், அதற்கு பிறகு அந்த குழந்தைகளை 'அரசு தத்தெடுப்பு வள ஆதார மையத்தின்' சட்ட விதிமுறைகளைப் பின்பற்றித்தான் எவரும் தத்து எடுத்துக் கொள்ள முடியும்.
குழந்தைகளை குற்ற சம்பவங்களைச் செய்வதற்காக கடத்துவது, தனிப்பட்ட நபர்கள் ஆதரவற்ற குழந்தைகளை இன்னொருவருக்கு தத்து கொடுப்பது, முறைகேடாக விற்பது போன்றவற்றை தடுக்க சட்டத்தில் வழிகள் செய்யப்பட்டுள்ளன. தத்து எடுப்பவர்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கண்டறிந்த பின்னரே குழந்தைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்கள்.
ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளி காலங்களில் தத்து எடுத்திருக்கும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் அரசு தொடர்ந்து கண்காணித்து குழந்தைகள் கண்ணியமாக நடத்தப்படுவதையும், வளர்க்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
கரோனாத் நோய்த்தொற்றினால் இந்தியாவில் பல குழந்தைகள், பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கின்றனர். இந்தக் குழந்தைகளை தமிழ்நாடு அரசு, அரசு காப்பகங்களில் தங்க வைத்து, அவர்களின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும் போது வட்டியுடன் கிடைக்கும் வகையில் குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கிகளில் வைப்புத் தொகையாக செலுத்தப்படும் என்னும் தமிழக அரசின் திட்டம் பாராட்டுக்குரியது.
மாநிலம் முழுவதும் உள்ள சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் ஆதரவற்ற குழந்தைகள், அவற்றில் சேர்வதற்கான வழிமுறைகளை வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுக்க விரும்புவோர்களை இன்னும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநில தத்தெடுப்பு வள ஆதார மையத்தை முறைப்படுத்த வேண்டும். இதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவைப்படும் உதவிகள் விரைவாக கிடைக்கச்செய்வதில் அரசும் பொதுமக்களும் தம் தம் பணியினை சுணக்கமின்றி விரும்பி ஆற்ற வேண்டும்.
சாலையோரங்களிளும், பொது இடங்களிலும் பதினெட்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை காணும்போது அவர்களைப் பற்றிய தகவல்களை குழந்தைகளுக்கான உதவி எண் 1098க்கு தெரிவித்தல் அல்லது அந்தக் குழந்தைகளை மீட்டு காவல் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரசு காப்பகங்களில் போன்றவற்றில் சேர்ப்பதற்கான முனைப்புகளில் பொது மக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்று என தத்தெடுக்கும் நிறுவனங்கள் உருவானால் ஆதரவற்ற குழந்தைகளின் நிலை மேம்படும். ஒரு பக்கம் பதிவு செய்து விட்டு குழந்தைகளுக்காக காத்திருக்கும் பெற்றோர்கள், இன்னொரு பக்கம் பெற்றவர்களால் கைவிடப்பட்டு அன்புக்காக ஏங்கும் குழந்தைகள் இவர்களை சட்டப்படி இணைக்கும் அன்புப் பாலமாக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
வாய்திறந்து பேசி உதவிகளை கேட்க முடியாத இந்த ஆதரவற்ற குழந்தைகளும் மற்றக்குழந்தைகள் பெறும் அத்தனை உரிமைகளையும் பெற வேண்டும். அதைநோக்கி நாம் ஒவ்வொருவரும் நம்மாலான கடமையை செய்ய தவறுதல் கூடாது. இதன் மூலம் அன்றாடம் பெருகிவரும் செயற்கை கருதரித்தல் மையங்களின் எண்ணிக்கையும் கனிசமாகக் குறையும் என திடமாக நாம் நம்பலாம். பார்க்கும் அனைத்துக் குழந்தைகளையும் கொண்டாடுவது நம் வாழ்வியலாக மாற வேண்டும். இது அனைவருக்கும் சாத்தியம் என்றே தோன்றுகிறது.