

கோவிலுக்குப் புடவை வழங்கும் போது நாம் செய்ய வேண்டிய எளிய வழிமுறைகள் என்ன? எந்த நிறம் என்ன பலனைத் தரும்? வாருங்கள், இந்த ஆன்மீகத் தொகுப்பில் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்!
அம்மனுக்கு பல வண்ணங்களில் அழகழகாய் புட வை சாத்துவதால் ஏற்படும் நன்மைகள் அநேகம். அதுவும் குறிப்பாக, செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் அம்மனுக்கு புடவைசாத்தி, கூழ் வார்த்து வழிபட்டால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். மங்களம் பெருகும். அஷ்ட ஐஸ்வர்யம் நிலைக்கும். தீய சக்திகள் விலகும். மேலும், திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்க, சக்தி ரூபமாக உலா வருகின்ற அம்மன் மனதைக் குளிர வைக்க பல வண்ணப் புடவைகளை அம்மனுக்கு சாத்துகின்றனர்.
அநேகர், அம்மனுக்கு சாத்துவதற்காக கோவிலுக்கு கொடுக்கும் புடவைகளை, கடைக் கவரைக் கூடப் பிரிக்காமல் அப்படியே கோவில் அலுவலகத்தில் கொடுத்து விடுகின்றனர். இது சரி கிடையாது என சான்றோர்கள் பலர் கூறுகின்றனர்.
புடவையைக் கொடுக்கையில், கவர் மற்றும் விலைச் சீட்டை எடுத்துவிடவேண்டும். மன நிறைவுடன், புடவையை ஒரு தட்டில் வைத்து அதன் மீது இரண்டு வெற்றிலை, பாக்கு, மஞ்சள்-குங்குமம், பழம் ஆகியவைகளுடன் அளிக்கவேண்டும்.
அம்மனுக்கு ஏற்ற சிகப்பு, மஞ்சள், பச்சை போன்ற மங்களகரமான வண்ணங்களில் புடவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கருப்பு, நீலம் அல்லது சாம்பல் போன்ற நிறங்களைத் தவிர்க்க வேண்டும். கிழிந்த அல்லது சேதமடைந்த ஆடைகளை கொடுக்கக் கூடாது. பட்டு அல்லது பருத்தி புடவைகளை அவரவர் வசதிக்கேற்ப வாங்கித் தரலாம்.
அம்மன் வழிபாடுபோது, நாம் வைக்கும் கோரிக்கைக்கு ஏற்ப வெவ்வேறு நிறப் புடவைகளைச் சாற்றுவது வழக்கம். எந்த நிறத்திற்கு என்ன பலன்..? என்று தெரிந்து கொள்ளலாமா..!
மஞ்சள் நிறம் - சுபகாரியங்கள் தடை இன்றி நடைபெற, மற்றும் திருமணத்தடை நீங்க உதவும்.
ஆரஞ்சு நிறம் - உயர் பதவி மற்றும் தொழில் முற்னேற்றம் ஏற்படும்.
பச்சை நிறம் - நல்ல கல்வியும் வேலை வாய்ப்பும் அமையும்.
மாம்பழ நிறம் - குடும்பத்தில் அன்பு, மகிழ்ச்சி மற்றும் செல்வம் நிலைத்திருக்க உதவும்.
சந்தன நிறம் - உடல் நலம் மற்றும் மன அமைதி பெற வழி வகுக்கும்.
சிகப்பு நிறம் - கண் திருஷ்டி நீங்க, மற்றும் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட வைக்கும்.
வீடுகளில் அம்மன் புடவை சாத்துதலின் வழிமுறைகள்:
வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமையில் சுத்தமாக நீராடி, பூஜையறையில் விளக்கேற்றி வணங்க வேண்டும்.
பின்னர், புடவையுடன் மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் ஆகியவைகளை வைத்து நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டபிறகு அம்மனுக்குப் புடவையைச் சாற்ற வேண்டும். பின்னர் இந்த புடவையை ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
கோவிலில் உள்ள அம்மனுக்கு சாத்திய புடவைகளை, ஒரு சில மாதங்கள் சென்றபின் கோவில் நிர்வாகத்தினர் குறைந்த விலையில் விற்பனை செய்வது வழக்கம். அதை மகிழ்வுடன் வாங்கி பல பெண்கள் அணிவது உண்டு. கொடுப்பினை இருந்தால்தான், அம்மனுக்கு சாத்திய புடவையை வாங்கி அணிய இயலும்.
உபரி தகவல்கள்
ஆடிப் பூரம் போன்ற முக்கிய நாட்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே, பெரிய கோவில்களில் புடவையை சாத்த விரும்பினால், கோவில் நிர்வாகத்திடம் முன் கூட்டியே கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
அம்மனுக்காக கொண்டு சென்ற புடவை மற்றும் மங்களப் பொருட்களைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மனுக்குச் சாத்தச் சொல்ல வேண்டும்.
அம்மனுக்குச் சாத்திய புடவையை சில கோவில்களில் நம்மிடமே திருப்பித் தருவார்கள். அதை நாம் வீட்டில் வழிபாட்டிற்குப் பயன்படுத்தலாம் அல்லது சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கலாம். சில பெரிய கோவில்களில் அந்தப் புடவைகளை ஏலம் விடுவார்கள் அல்லது கோவில் தேவைக்குப் பயன்படுத்துவார்கள்.
வண்ணப் புடவைகள் பல அணிந்து, அழகாய் ஜொலிக்கும் அம்மனை ஆனந்தமாய் வணங்கி வழிபடுவோம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் குடும்பத்தில் மங்களமும் ஐஸ்வர்யமும் பெருகி, தடைகள் விலகி சுபகாரியங்கள் தடையின்றி நடப்பதற்கான ஆன்மீக வழிகாட்டுதலைப் பெற்று மனநிறைவுடன் வாழலாம்.