
அரபு மொழியில் எழுதப்பட்ட உரைநடை மற்றும் கவிதைத் தொகுப்புகளை அராபிய இலக்கியம் என்கின்றனர். அரபுலகில் இது அதாப் என அழைக்கப்படுகின்றது. பண்டைய காலங்களிலிருந்தே பல வாய்வழி இலக்கியங்கள் இங்கு இருந்த போதும், ஐந்தாம் நூற்றான்டின் பிறகே அராபிய இலக்கியம் வளரத் தொடங்கியது. இந்த அரபி இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஆயிரத்தொரு இரவுகள்' கதை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு கதையாகும். இந்தக் கதைக்கும் ஒரு கதை இருக்கிறது. என்ன கதை அது?
பாரசீக அரசன் சாரியார் என்பவன் தனது முதல் மனைவி தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததை அறிந்து அவளுக்கு மரணதண்டனை விதிக்கிறான். அதன் பின்னர் எல்லாப் பெண்களுமே நன்றிகெட்டவர்கள் என அறிவிக்கிறான். அதோடு நில்லாமல், ஒவ்வொரு நாளும் இளம் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு, மறுநாள் காலையில் கொன்று விடுவதை வழக்கமாகக் கொண்டான். காலம் செல்லச் செல்ல, அரசன் மணம் செய்வதற்குப் பெண்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அரசனுக்குப் பெண் தேடும் பொறுப்பைக் கொண்டிருந்த ஒரு அமைச்சரின் மகள் செகர்சதா, தான் அரசனைத் திருமணம் செய்வதாகச் சொல்கிறாள். அமைச்சர் மகளிடம் அரசனின் கொடூரக் குணங்களையும், அவன் மறுநாள் அவளைக் கொன்று விடுவான் என்பதையும் எடுத்துச் சொல்லியும், அதனைக் கேட்காத மகள் பிடிவாதமாக அரசனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறாள். அமைச்சரும் வேறு வழியின்றி மகளை அரசனுக்கு மணம் செய்து கொடுக்கிறார்.
மணநாள் இரவில் அப்பெண் அரசனுக்குக் கதை சொல்லத் தொடங்கினாள். ஆனால் அவள், அக்கதையின் முடிவைச் சொல்லாமல் இருந்தாள், அக்கதையின் முடிவை அறிவதற்காக, அரசன் அவளை மறுநாள் கொல்லாமல் வைத்திருக்க வேண்டியதானது. அடுத்த நாள் இரவும் முதல் கதையை முடித்த பின், இன்னொரு கதையைச் சொல்லத் தொடங்கி இடையில் நிறுத்திவிட்டாள். இப்படி அவள், ஆயிரத்தொரு இரவுகளில் அரசனுக்குச் சொன்ன கதைகளே, ‘ஆயிரத்தொரு இரவுகள்’ கதையில் இடம் பெற்றிருக்கின்றன.
‘ஆயிரத்தொரு இரவுகள்’ கதைகள் பல்வேறு கதைகளைக் கொண்டவை. வரலாற்றுக் கதைகள், மிகு புனைவு கதைகள், காதல் கதைகள், துன்பக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், கவிதைகள் எனப் பலவாறான கதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இக்கதைகளில் பல கதைகள் கற்பனை மனிதர்கள், இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருந்ததாக இருந்த போதிலும், இடையிடையே உண்மையான மனிதர்கள், இடங்களைப் பற்றிய கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, ஏமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள், பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, சின்ன ஆசியா, கலீபாக்கள் காலத்து மத்தியக் கால அராபிய நாட்டார் கதைகள் என பல்வேறு இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இவை இசுலாமிய பொற்கால நேரத்தில் அரபு மொழியில் தொகுக்கப்பட்டன.
இக்கதைகள் முதன் முதலாக 1704 ஆம் ஆண்டில் இரவுகள் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியிலும், பின்னர் 1706 ஆம் ஆண்டில் அரேபிய இரவுகள் என ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன. தொடர்ந்து பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன.
இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத் ஆகியவையாகும். இக்கதைகள் உண்மையான அரேபிய நாட்டார் கதைகளாக இருந்திருக்கக் கூடியன ஆயினும், இவை ஆயிரத்தொரு இரவுகள் கதைத்தொகுதியின் பகுதிகள் அல்ல. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது இவை இடைச் செருகல் செய்யப்பட்டன என்கின்றனர்.
கதைக்குள் கதை எனும் இதன் பாணியானது பண்டைய இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் ஏற்கனவே இருந்த ஒன்றே என்ற போதும், ஆயிரத்தொரு இரவுகள் நூலுக்குப் பிறகே ஐரோப்பிய நாடுகளில் இம்முறை பிரபலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து பல புதினங்கள் இதே நடையில் மேற்குலகில் எழுதப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.