

பெண்கள் உயர்கல்வி பயில்வதற்கே தடையாக இருந்த கால கட்டத்தில், திருமதி ஏ.லலிதா அவர்கள் கற்பனை கூட செய்ய முடியாத ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
15 வயதிலேயே திருமணம் செய்துகொண்ட இவர், தன்னுடைய 18 வயதிலேயே தாயானார். மகள் பிறந்த நான்கு மாதங்களிலேயே தன் கணவரையும் இழந்தார். கணவனை இழந்த நிலையில் மகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க, லலிதா அவர்கள் தன் தந்தையின் ஆதரவுடன் மீண்டும் கல்வி கற்கத் தொடங்கி இந்தியாவின் முதல் பெண் பொறியாளராக சாதனை படைத்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்...
ஏ.லலிதா என்று பரவலாக அறியப்பட்ட அய்யாலசோமயாஜுல லலிதா அவர்கள், அப்போதைய மெட்ராஸில் ஆகஸ்ட் 27, 1919 ஆம் ஆண்டில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். பொறியியல் அவரது குடும்பத்தில் ஏற்கெனவே பரிச்சயமான ஒன்றாகவே இருந்தது. அவருடைய தந்தை, பப்பு சுப்பா ராவ், கிண்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். அதே சமயம் அவருடைய சகோதரர்களும் அங்கு பொறியியல் படித்து கொண்டிருந்தார்கள்.
இருப்பினும், திருமதி லலிதாவின் வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு திருப்பத்தை அவருக்கு அளித்ததென்றே சொல்லலாம். அவருடைய 15 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. மேலும் 1937-ல் அவர் தன்னுடைய மகள் ஷியாமளாவைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த நான்காம் மாதத்திலேயே அவருடைய கணவரும் இறந்து விட்டார்.
ஒரு பெண் விதவை ஆகி விட்டால் வீட்டுக்குள்ளேய முடங்கி கிடக்க வேண்டும் என்கிற அந்த காலகட்டத்தில், ஏ.லலிதா அவர்கள் தடைகளை உடைத்து தன்னுடைய மகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க விரும்பினார்.
லலிதா அவர்கள், தன்னுடைய தந்தையின் ஆதரவோடு, சென்னையில் உள்ள குயின் மேரிஸ் கல்லூரியில் தன்னுடைய கல்வியை மீண்டும் கற்க தொடங்கினார். அங்கு அவர் இடைநிலைக் கல்வியை முதல் வகுப்பு மதிப்பெண்களுடன் முடித்தார். அந்த சமயத்தில் ஏற்கனவே ஒரு சில இந்தியப் பெண்மணிகள் தடைகளை தகர்த்து உயர்கல்வியை கற்க தொடங்கி இருந்தார்கள். ஜானகி அம்மாள், கடம்பினி கங்குலி போன்ற முன்னோடிகள், குறிப்பாக மருத்துவம் போன்ற துறைகளில் தடைகளை உடைத்து கல்வியை கற்று கொண்டிருந்தார்கள். ஆனால், ஏ.லலிதா அவர்களுக்கு மருத்துவம் படிக்க விருப்பமில்லை.
அவருடைய தந்தை மற்றும் சகோதரர்களை பார்த்து அவருக்கும் பொறியியல் தான் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றியது.
அவருடைய தந்தை, இந்த முடிவை ஆதரித்து, அவர் சார்பாக College of Engineering, Guindy – இன் அப்போதைய முதல்வர் டாக்டர் கே.சி. சாக்கோவை அணுகினார்.
அக்காலத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி ஆண்களுக்கான ஒரு கல்வி நிறுவனமாகவே இருந்தது. ஆகவே, லலிதா அவர்களுக்கு எல்லாவிதமான தகுதிகள் இருந்த போதிலும், கல்லூரியில் அவர்களுடைய சேர்க்கைக்காக கல்லூரி அதிகாரிகளையும் சம்மதிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் அனுமதி பெற வேண்டிய கட்டாயமும் இருந்தது.
பல போராட்டங்களுக்கு பிறகு 1940-ல் லலிதா அவர்கள், கிண்டி இன்ஜீனியரிங் கல்லூரியில் நான்காண்டு மின் பொறியியல் துறையில் சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், கல்லூரி அதிகாரிகளும் அலுவலர்களும் அவருக்குத் தேவையான ஆதரவை அளித்தார்கள்.
அவருக்கென ஒரு தனி விடுதியில் தங்க ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது. அதே சமயம், அவருடைய மகளை சகோதரர்கள் கவனித்துக் கொணடார்கள்.
லலிதா அவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் மகளை சந்தித்து வந்தார். அவர், தன் வகுப்புகளில் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த போதிலும், விடுதியில் ஒரு பெண் துணை இல்லாததை அவர் உணர்ந்தார்.
ஆகவே, அவருடைய தந்தை மேலும் பல பெண்களுக்கான சேர்க்கையைத் திறக்குமாறு அதிகாரிகளை ஊக்குவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அடுத்த ஆண்டு மேலும் இரண்டு பெண்கள் – லீலம்மா ஜார்ஜ் மற்றும் பி.கே. தெரேசியா – சிவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்கள்.
அக்கால அரசாங்க விதியின்படி, மின் பொறியாளர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் கல்விப் படிப்பையும் ஒரு ஆண்டு செய்முறைப் பயிற்சியையும் முடிக்க வேண்டியிருந்தது. லலிதா அவர்கள், ஒரு பெரிய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு மையமான ஜமால்பூர் ரயில்வே பட்டறையில் ஓராண்டு தொழிற்பயிற்சி மூலம் தனது செய்முறைப் பயிற்சியையும் நிறைவு செய்தார்.
1943-ல் அவர் தன்னுடைய பொறியியல் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். மற்ற இருவரும் தொழிற் பயிற்சியை நிறைவு செய்யாமல் இருந்த போதிலும், மூன்று பெண் பொறியாளர்களும் ஒன்றாகவே பட்டத்தை பெற்றனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், CEG-யின் முதல் மூன்று பெண் பட்டதாரிகளுக்காக, அவர்களின் பட்டச் சான்றிதழில் 'HE’ என்கிற வார்த்தைக்குப் பதிலாக, முதன் முதலில் 'SHE’ என்று மாற்ற வேண்டியிருந்தது!!!
ஏற்கனவே பல தடைகளைக் கடந்திருந்த லலிதா, ஒரு தொழில்முறை நிபுணராக வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தையும் தொடங்கத் தயாராக இருந்தார்.
சிம்லாவில் உள்ள இந்திய மத்திய தர நிர்ணய அமைப்பில் (Central Standards Organisation of India) பொறியியல் உதவியாளர் என்ற வேலை வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கல்கத்தாவிலுள்ள அசோசியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸின் (Associated Electrical Industries) பொறியியல் துறையில் பணியாற்ற தொடங்கினார்.
அவருடைய புத்திசாலித்தனமும் திறமைகளும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கத் தொடங்கின.
லலிதா அவர்கள் 1977-ல் ஓய்வு பெறும் வரை அசோசியேட்டட் எலக்ட்ரிக்கல் அசோசியேட்ஸ் (பின்னர் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது) நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றினார். STEM (Science, Technolgy, Engineering & Mathematics) துறைகளில் பெண்கள் முன்னேறுவதை லலிதா ஆதரித்தார்
ஓய்வு பெற்ற சிறிது காலத்திலேயே, லலிதா அவர்களுக்கு மூளை இரத்தக்குழாய் வெடிப்பு ஏற்பட்டு, 1979-ஆம் ஆண்டு தன்னுடைய அறுபதாம் வயதில் காலமானார்.
இன்று பல பெண்கள் பொறியியலைத் தங்கள் தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் வேளையில், இந்தத் துறைக்கு வழி வகுக்க உதவிய இந்த விதவை பெண்ணின் மனவுறுதியையும் விடாமுயற்சியையும் பற்றிப் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. ஆம்... ஏ.லலிதா என்கிற ஒரு இளம் விதவை, அர்ப்பணிப்புள்ள ஒற்றைத் தாய், ஒரு சிறந்த மாணவி, புடவை அணிந்த ஒரு முன்னோடித் தொழில் வல்லுநராக இன்றைய பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
வாசகர்கள் ஒரு வரலாற்றுச் சாதனையின் பின்னಿರುವ தனிப்பட்ட போராட்டங்களையும், விடாமுயற்சியால் சாத்தியமான வெற்றிகளையும் உணர்ந்து ஊக்கத்தைப் பெறுவார்கள்.