

இன்றைய காலகட்டத்தில் ஃபிளாஸ்க் இல்லாத வீடே கிடையாது; நினைத்தபோது கொதிக்கும் வெந்நீர் தேவைப்படுபவர்களுக்கும் நினைத்தபோது காப்பியும் மற்றும் சூடான பானங்களை விரும்புபவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் ஃபிளாஸ்க் ஒரு வரப்பிரசாதமாகும். கண்ணாடி (Glass Lined) ஃபிளாஸ்க்குகள், சில்வர் (Stainless Steel) ஃபிளாஸ்க்குகள், வாக்கியூம் (Vacuum) ஃபிளாஸ்க்குகள் என சந்தையில் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் ஃபிளாஸ்க்குகள் கிடைக்கின்றன.
ஃபிளாஸ்க் உபயோகித்தால் மட்டும் போதாது; அதை பாதுகாப்பாய் வைத்துக் கொள்ளும் முறையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சரியான முறையில் பராமரிப்பதன் மூலமே ஃபிளாஸ்க்கின் ஆயுட்காலத்தையும் அதன் செயல்திறனையும் நாம் அதிகரிக்க முடியும். அந்த வகையில் இந்த கட்டுரையில், ஃபிளாஸ்க்கின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த பயனுள்ள குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.
ஃபிளாஸ்க் பயன்படுத்தும் முறையும் அதன் உபயோகமும்:
அதிக சூட்டை நீண்ட நேரம் நீடித்து வைத்துக் கொள்ள ஃபிளாஸ்க்கை முழுவதும் நிரப்ப வேண்டும்.
பாதி, முக்கால் ஃபிளாஸ்க் என்று நிரப்பக்கூடாது; ஊற்றப்படும் பானம் மிகச் சூடாக அல்லது குளுமையாக இருக்க வேண்டும்.
சூடான பானம் ஊற்று முன், ஃபிளாஸ்கில் வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றி வைத்து, ஐந்து நிமிடம் கழித்து வெந்நீரை கொட்டி விட்டு பானத்தை ஊற்றி வைக்க வேண்டும்.
இதே போல மிக குளிர்ந்த பானம் ஊற்றும் முன் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரை கொட்டி விட்டு குளிர்ந்த பானத்தை ஊற்றி வைக்க வேண்டும்.
அது கண்ணாடி ஃபிளாஸ்க் ஆனாலும் சரி; சில்வர் ஃபிளாஸ்க்கானாலும் சரி இரண்டையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
ஃபிளாஸ்க்கை பயன்படுத்தாத போது அதில் சர்க்கரை போட்டு வைத்திருந்தால் துர்நாற்றம் அடிக்காது.
பயன்பாட்டில் இல்லாத போது திறந்து வைக்க வேண்டும் மூடி வைத்தால் வாடை அடிக்கும்.
ஃபிளாஸ்க்கை பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
ஃபிளாஸ்க் வாஷரை அடிக்கடி மாற்றுவதன் மூலம் துர்நாற்றம் வீசுவதை தடுக்கலாம்.
ஃபிளாஸ்க்கை சுத்தப்படுத்தும் பொழுது தண்ணீர் குழாயில் இருந்து நீர் நேரடியாக ஃபிளாஸ்க்கில் விழும்படி கழுவக்கூடாது பலமாக குலுக்கவும் கூடாது.
ஃபிளாஸ்கின் மேல் மூடி, ரப்பர் போன்றவற்றை சுத்தப்படுத்திவிட்டு சிறிது வெந்நீரால் கழுவி எடுக்க வேண்டும்.
பால் திரிந்து போகாமல் இருக்க அதில் ஊற்றி வைக்கப்படும் பால் மிகச்சூடாக அல்லது குளிர்ந்ததாக இருக்க வேண்டும்.
ஃபிளாஸ்க்கில் ஐஸ் வைப்பதென்றால் தூளாக்கி விட்டு சாய்வாக வைத்து நிரப்ப வேண்டும்.
சூடான காப்பியோ, டீயோ ஃபிளாஸ்க்கில் ஊற்றும்போது சர்க்கரை சேர்க்காமல்; குடிக்கும் பொழுது சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்து பானத்தை ஊற்றினால் பால் சில நேரம் திரிந்துவிட வாய்ப்புள்ளது.
திட உணவுப் பொருட்களை ஃபிளாஸ்க்கில் வைத்திருந்தால் பயன்படுத்தியதும் உடனே வெந்நீரை உள்ளே விட்டு பிறகுதான் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
காப்பி, டிகாஷன் இறக்கிய கையோடு பாலை காய்ச்சிய உடனே தனித்தனி ஃபிளாஸ்க்குகளில் சூடாய் ஊற்றி வைத்துக் கொண்டால், ஒவ்வொருவருக்கும் காபிக்கு தனியாக சூடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எரிபொருளும் நேரமும் மிச்சப்படும். காலை நேர அவசரத்தில் இது மிக உதவியாக கை கொடுக்கும்.
இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஃபிளாஸ்கின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, தினமும் நீங்கள் அருந்தும் தேநீர் மற்றும் பானங்களின் சுவையும் தரமும் துளி கூட குறையாமல் புத்துணர்ச்சியுடன் கிடைப்பதை உறுதி செய்யலாம்.