

பெரும்பாலான பெண்கள் வேலை, பயணங்கள் மற்றும் பொது கழிப்பறைகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரை அடக்குகிறார்கள். இருப்பினும், இந்தப் பழக்கம் சிறுநீர்ப்பை தசைகளை பலவீனப்படுத்துவதுடன், இடுப்பு தசை பாதிப்பு, கடுமையான சிறுநீர் பாதை தொற்று மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
சுகாதாரமற்ற கழிப்பறைகள்:
பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல், அசுத்தமாக இருப்பதால் தொற்றுகள் ஏற்படும் என்ற பயத்தில், பெண்கள் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கின்றனர்.
வேலை மற்றும் அவசரம்:
அலுவல் பணிகள், கூட்டங்கள் (meeting) அல்லது நீண்ட பயணங்களின் பொழுது, உடனடியாக கழிப்பறைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படுவதன் காரணமாக சிறுநீரை அடக்குகிறார்கள்.
இதனால் ஏற்படும் ஆபத்துகள்:
பெண்கள் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது (Women's health) சிறுநீர்ப்பை தசைகளை பலவீனப்படுத்தி, சிறுநீர் பாதை தொற்று (Urinary Tract Infection), சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சிறுநீர் பாதை தொற்று (UTI):
சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க் குழாய்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு பொதுவான நோய் தொற்றாகும். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தீவிரமடையக்கூடும்.
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கும்போது, அதில் பாக்டீரியாக்கள் பெருகி, சிறுநீரகப் பாதையில் கடுமையான தொற்றுநோயை (Infection) உருவாக்குகிறது. இதனால், சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், வலி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும்.
சிறுநீர்ப்பை தசை பலவீனம்:
சிறுநீர்ப்பை ஒரு தசை போன்றது. சிறுநீரைத் தொடர்ந்து அடக்குவதால், அதன் மீள்தன்மை மற்றும் சுருங்கி விரியும் திறன் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சிரிக்கும் பொழுது அல்லது இருமும் பொழுது கூட சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர்ப்பை அதன் இயல்பான சுருங்கி விரியும் தன்மையை இழந்து, சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல் போகலாம்.
வயிற்று வலி மற்றும் அசௌகரியம்:
சிறுநீர்ப்பை முழுவதுமாக நிரம்பியதும், அதனைத் தொடர்ந்து அடக்கும்போது சிறுநீர்ப்பை தசைகள் அதிகப்படியான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இது, அடிவயிற்றில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது சிறுநீர்ப்பை தசைகளை பலவீனப்படுத்துவதுடன், சிறுநீரக பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
சிறுநீரக செயலிழப்பு:
இந்தப் பழக்கம் தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் தேங்கும் சிறுநீர் மீண்டும் சிறுநீரகங்களுக்குத் தள்ளப்படும் ஆபத்து உள்ளது. இது, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு (Kidney failure) வழிவகுக்கலாம்.
சிறுநீரகக் கற்கள்:
சிறுநீர் தொடர்ந்து தேங்குவதால், சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் வெளியேறாமல் நீண்ட நேரம் தேங்கி, அவை படிகங்களாக மாறி, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இது கடுமையான வலியையும் ஏற்படுத்தும்.
சிறுநீர் வெளியேறாமை (Urinary Retention):
நீண்ட காலமாக சிறுநீரை அடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, ஒரு கட்டத்தில் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாத நிலை அல்லது சிறுநீரே வராத நிலை கூட ஏற்படலாம்.
புற்றுநோய் ஆபத்து:
நீண்ட காலம் சிறுநீரை அடக்குவது சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுநீர் கழிப்பது என்பது உடலின் கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான செயல்முறையாகும். எனவே, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது எல்லாம் கழிப்பறையைப் பயன்படுத்துவது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பேண உதவும். சிறுநீரை அடக்குவது என்பது தற்காலிகமாக தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், அதை ஒரு வழக்கமாக மாற்றுவது உடல் நலனைக் கடுமையாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)