

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ரஞ்சனா குமாரி, (Ranjana Kumari) தனது தந்தை கொலையின் அதிர்ச்சியையும், பல வருட நிதி நெருக்கடியையும் கடந்து எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) சேரும் தனது கனவை ஜனவரி, 2026ல் நனவாக்கியுள்ளார்.
2024ஆம் ஆண்டு BSF பொதுப் பணி (GD) காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சனா, சமீபத்தில் மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள BSF பயிற்சி மையத்தில் ஒரு வருட காலப் பயிற்சியை முடித்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் தனது பணிக்காகக் சென்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வடக்கு பகுதியில் உள்ள ஹசாரிபாக் ததிஜாரியா தொகுதியின் கீழ் உள்ள அமானாரி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சனா, எட்டு வயது சிறுமியாகவும், இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை மனோஜ் குமார் குஷ்வாஹா, ஜனவரி 2013இல் நகர ஹோட்டலில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மாதத்திற்கு சுமார் ரூ.4,000 சம்பாதிக்கும் அங்கன்வாடி உதவியாளரான அவரது தாயார் நூதன் தேவி, ரஞ்சனாவையும் அவரது இரண்டு சகோதரிகளையும் தனியாக வளர்த்தார்.
"என் தந்தை ஒரு நகர ஹோட்டலில் மேலாளராகப் பணிபுரிந்தார், அங்கு அவர் கொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் முழு உலகமும் எங்களுக்கு இருட்டாகிவிட்டது, ஆனால் என் அம்மா குடும்பத்தை ஆதரிக்க அயராது உழைத்தார்," என்று ரஞ்சனா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஹசாரிபாக் பகுதியில் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது தனது கல்வியைத் தொடர, அவர் 10ஆம் வகுப்பு வரை சுமார் 40 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினார். இது அவரது இடைநிலை மற்றும் பட்டப்படிப்பை முடிக்க உதவியது. அவர் தற்போது ஹசாரிபாக்கில் உள்ள விஷ்ணுகரில் உள்ள டெக்லால் மஹதோ டிகிரி கல்லூரியில் வரலாற்று கௌரவப் பட்டம் பெற்றவர்.
"என் தந்தையின் கொலை என் திட்டங்களைத் தடம் புரள விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நான் எப்போதும் BSF சீருடையை அணிய விரும்பினேன்," என்று கூறியுள்ளார். அதற்காக எல்லை பாதுகாப்பு படையில் சேர்வதற்கான எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) GD தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மேற்கு வங்காளம் சிலிகுரி பயிற்சி மையத்திற்கு ஒரு ஆண்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.
தனது கனவு நிறைவேறியதாக கூறியுள்ள ரஞ்சனா, தற்போது பிஎஸ்எஃப் உயர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். ரஞ்சனாவுக்கு ஒரு அக்கா, அவர் சஞ்சனா விசாகப்பட்டினத்தில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரை கல்யாணம் செய்து செட்டிலாகிவிட்டார். ஒரு தங்கை அஞ்சலி ஹசாரிபாக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
கஷ்டங்களை எதிர்கொள்ளும் மற்ற பெண்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வரும் ரஞ்சனா "ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் நான் அதைச் செய்ய முடிந்தால், மற்றவர்களும் கடின உழைப்பு மற்றும் உறுதியின் மூலம் தங்கள் கனவுகளை நனவாக்க முடியும்" என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.