

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோதினி கிராமம் இந்தியாவில் இரட்டையர்கள் கிராமம் என அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
உலக அளவில் ஆயிரம் குழந்தைகளுக்கு நான்கு முதல் 9 இரட்டை குழந்தைகள்தான் பிறக்கின்றன. இந்த நிலையில் இங்கு ஆயிரம் குழந்தைகளுக்கு 50 என்ற எண்ணிக்கையில் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.
உலகின் பிறப்பகுதிகளை விட இங்கு பல மடங்கு அதிக அளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது மருத்துவ விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
இங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்றாலும் அங்கும் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.
நம் நாட்டிலேயே முதன் முதலாக இரட்டையர்கள் சங்கம் (The twins and kins Association) இங்குதான் தொடங்கப்பட்டது. எனவே இந்த கிராமம் இரட்டையர்கள் கிராமம் என அழைக்கப்படுகிறது.
கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து வருவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இதற்கு மரபணு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ள குடிநீர், உணவு பழக்க வழக்கம் இவை காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சி நடைபெறுகிறது.
தற்போது இதற்கு சில வகை உணவுகள் தான் காரணம் என கூறப்படுகிறது. இங்கு விளையும் ஒரு வகை கிழங்கு இதற்கு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. ஆனால், இங்குள்ள மக்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். மரபணு தான் காரணம் என அடித்து சொல்கிறார்கள். தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
சரித்திரம், புதுமை என பல மர்மங்களை கொண்டுள்ளது இந்த கிராமம். வெளியே இருந்து இங்கு வருபவர்கள் இதனை ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த ஊரின் ஆரம்பத்தில் உள்ள வரவேற்பு பலகையில் இறைவன் வரமாக அளித்துள்ள இரட்டையர் கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்று காணப்படுகிறது.
இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு தென்னை மரங்கள் வயல்வெளிகள் கால்வாய்கள் என இயற்கையோடு ஒன்றி போய் உள்ளது.
சாலையில் நடந்து செல்லும் போது ஒருவர் நம்மை பார்த்து சிரிப்பார். அவரை கடந்து சென்ற பின் மீண்டும் அதே நபர் நம்மை பார்த்து சிரிப்பார். நாம் கொஞ்சம் குழம்பி போவோம். பிறகுதான் இரட்டையர்கள் என்ற நினைப்பு வரும். இந்த நிகழ்வு அடிக்கடி வரும் அதை பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
பள்ளிகளில் ஒரு வகுப்பை எடுத்துக் கொண்டால் அங்கு சுமார் 24 ஜோடி இரட்டைகள் இருப்பார்கள்.
இதேபோன்று தெற்கு வியட்நாம் ஹாங் பகுதி, நைஜீரியாவில் உள்ள ஓரா பகுதி, பிரேசில் உள்ள கோடாய் பகுதிகளில் இரட்டையர்கள் அதிக அளவில் உள்ளனர். கோதிணி கிராமத்தைப் பொறுத்த வரை இந்த பகுதியில் உள்ள காற்று, தண்ணீர், மரபணு இவற்றை காரணமாக கூறுகிறார்கள்.
இந்த கிராமத்தில் இரட்டை குழந்தைகள் 3 தலைமுறைக்கும் மேலாக உள்ளனர். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய டாகா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த கிராமத்தில் உள்ள சந்தைகள், தெருக்கள், பள்ளிகள் என எங்கு பார்த்தாலும் இரட்டையர்கள் காணப்படுவார்கள். இங்குள்ள கிராம மக்கள் இந்த இரட்டைக் குழந்தைகளை வரப்பிரசாதமாக பார்க்கிறார்கள்.
நைஜீரியாவில் உள்ள இக்போ நகரத்தை இரட்டையர்கள் தலைநகரமாக அழைக்கிறார்கள்.
அதேபோன்று இந்த கோதினி கிராமத்தையும் இரட்டையர்கள் நகரம் என அழைக்கிறார்கள். 1949க்கு பிறகு தான் இங்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அதிகம் காணப்படுகிறது.
இங்குள்ள இரட்டைகளை யாரும் எளிதில் பேட்டி காண முடியாது.
அதற்கு இந்த ஊர் கிராம பஞ்சாயத்து தலைவரின் அனுமதியும் பெற்றோர்களின் அனுமதியும் பெற்று இவர்களை பேட்டி காண முடியும். கேரளா என்றாலே அதிசயமும் ஆச்சரியமும் கலந்த மாநிலமாக தான் உள்ளது.