மாதவிடாய்: மௌனம் களைவோம், மூடநம்பிக்கை ஒழிப்போம்!

மே 28: மாதவிடாய் சுகாதார நாள்!
Menstrual Hygiene Day
Menstrual Hygiene Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் நாளன்று, 'மாதவிடாய் சுகாதார நாள்' (Menstrual Hygiene Day) கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலகம் முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாக இருக்கிறது.

2014 ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான வாஷ் யுனைடெட் (WASH United) தொடங்கப்பட்டு, 270 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஒத்த அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது. பெரும்பாலான பெண்களின் மாதவிடாய்க் கால அளவு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5 நாட்கள் என்பதையும், மாதவிடாய் சுழற்சியின் தோராய அளவு 28 நாட்கள் என்பதையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டின் 5 ஆவது மாதமான மே மாதத்தின் 28 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் (Menstruation) அல்லது மாதவிலக்கு என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3 முதல் 7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதைக் குறிக்கிறது.

மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய், பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்துப் பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பை மடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.

கருத்தரித்திருக்கும் காலத்திலும், குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. அதாவது, குருதிப் போக்கு இருப்பதில்லை. இச்சுழற்சி மீண்டும் துவங்கும் வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது.

மாதவிடாய் சுகாதாரம் குறித்த போதுமான அறிதல் இல்லாமையால் வளர்ந்து வரும் நாடுகளில் மகளிர் பலவிதமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. வெளிப்படையாய் மாதவிடாய் குறித்துப் பேசுவது தவிர்க்கப்படுவதால் மாதவிடாய்ப் பருவத்திலுள்ள மகளிருக்கும் பதின்மச் சிறுமையருக்கும் அவர்களது உடலமைப்பு, உடல் நலம், கல்வி, தன் மரியாதை, மனித உரிமை குறித்த விவரங்கள் தெரியவருவதில்லை. மோசமான மாதாவிடாய் சுகதார மேலாண்மையால் பெண்களின் இனப்பெருக்கப் பாதை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான சிறுமியர் இனப்பெருக்கப் பாதையின் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. துவக்கத்திலேயே இந்நிலை சரிவர கவனிக்கப்படவில்லையெனில் பலவிதமான ஊனங்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.

முறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை என்பது;

  • மாதவிடாய்க் காலத்தின் போது மகளிரும் பதின்மச் சிறுமியரும், மாதவிடாய்க் குருதிச் சேகரிப்பதற்கு அல்லது உறிஞ்சுவதற்குச் சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தல்;

  • அவர்களுக்குத் தேவையான போது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி;

  • அந்நாட்களில் உடலைச் சுத்தப்படுத்தத் தேவைப்படும் தண்ணீர் மற்றும் கழுவுபொருள் (சோப்பு);

  • குருதி சேகரிப்பு அல்லது உறிஞ்சலுக்குப் பயன்படுத்தப்பட்டவற்றை அப்புறப்படுத்தும் வசதி

போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து மக்களிடையே இருக்கும் தவறான எண்ணங்களைத் தவிர்த்து, பெண்களுக்காகவும், சிறுமியருக்குக்காகவும், ஒற்றுமையான வலுவான குரல் எழுப்புவதற்காகத் தனி நபர்கள், அமைப்புகள், சமூக வணிகங்கள் மற்றும் ஊடகங்களை ஒன்றிணைக்கும் மேடையாகச் செயல்படுவதே மாதவிடாய் சுகாதார நாளின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது, மேலும்;

  • மாதவிடாய் நாட்களில் பெண்களும் சிறுமியரும் சந்திக்கும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்துப் பேசுதல்

  • இதற்காக மேற்கொள்ளப்படும் வளர்முகமான புத்தாக்கத் தீர்வுகளை முன்னிலைப்படுத்துதல்

  • பெண்கள் மற்றும் சிறுமியரின் உரிமைகளை அங்கீகரித்து, ஆதரிக்கும் உலகளவிலான இயக்கம் வளர ஊக்குவித்தல்; இதே நோக்கத்தோடுச் செயற்படும் அமைப்புகளுக்கிடையே உள்ளிட அளவிலும், தேசிய அளவிலும் இணைப்பு ஏற்படுத்துதல்

இதையும் படியுங்கள்:
மாதவிடாய் வலியை சட்டுன்னு குறைக்கும் சில அற்புத பானங்கள்!
Menstrual Hygiene Day
  • கொள்கை உரையாடல்களில் ஈடுபடுதல்; உலக, தேசிய, உள்ளிட அளவிலான கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களாக மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஒருங்கிணைப்பை எடுத்துச் செல்லுதல்

  • சமூக ஊடகங்கள் உட்பட்ட பல ஊடகச் செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளைத் தோற்றுவிக்கிறது.

  • உடற்கூறு பற்றிய அறிதல், தன்னாட்சி மற்றும் பாலினச் சமத்துவத்துவத்தை வளர்த்தெடுக்கும் நாடு கடந்த இயக்கத்தை இந்நாள் உருவாக்குகிறது.

மாதவிடாய் சுகாதார நாளில், மகளிர் நலனில் அக்கறையுடன் செயல்படும் சமூக அமைப்புகள், 10 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு முன் கூட்டியே மாதவிடாய் குறித்தத் தகவல்களைத் தெரிவித்து, அவர்களுக்கு மாதவிடாய் குறித்த அச்சத்தைப் போக்கிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முறையற்ற மாதவிடாய் பிரச்னையா? முடிவு கட்ட உதவும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!
Menstrual Hygiene Day

மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு, மாதவிடாய்க் காலத்தை எப்படி சுகாதாரத்துடன் பேணுவது என்பதை முழுமையாக விளக்கிட வேண்டும்.

மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமற்ற நிலையினால் வரும் நோய்கள் வராமல் காத்திட வேண்டிய அவசியத்தையும் உணர்த்திட வேண்டும்.

அப்போதுதான், இந்தியாவிலுள்ள மாதவிடாய் தொடர்புடைய பல்வேறு மூட நம்பிக்கைகளிலிருந்து பெண்கள் விடுபட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com