

பல மாதங்கள் பிறகு என் தோழியை சந்தித்தபோது தான் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்திருந்த போது தன் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவியாக இருந்ததது. தன் மேல் தான் வைத்திருந்த நம்பிக்கை தான் என்றாள்.. அந்த தன்னம்பிக்கை எந்த அளவில் வாழ்க்கையில் மறுபிறவி எடுக்க உதவியது என்றும் கூறினாள்..
தன்னம்பிக்கைக்கு அவ்வளவு சக்தியா? பார்க்கலாம் வாருங்கள்..
முதலில் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் பாருங்களேன்.. வெற்றி உங்கள் பக்கம் தானாக வருவதைக் காணலாம். வாழ்க்கையின் வெற்றிக்கு தன்னம்பிக்கை மிக முக்கியமான விஷயம் ஆகும். இது ஒருவர் தனது திறமைகளில் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்ளும் மன உறுதியைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை மனிதனை உயர்த்தும் ஆற்றல் கொண்டது.
தன்னம்பிக்கை வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு மனிதனின் பலமாகும். தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை நங்கூரம் இல்லாத கப்பலைப் போன்றது. தன் மீது நம்பிக்கை வைப்பவர் மட்டுமே இந்த உலகில் சாதித்து காட்ட முடியும். இது பிறக்கும் போதே வருவது அல்ல.
மாறாக அனுபவம், விடாமுயற்சி மற்றும் நேர்மறை எண்ணங்கள் மூலமாக நாமே உருவாக்கும் ஒரு அரிய குணம்.
வரலாற்றில் சாதனை பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர்களின் வெற்றிக்கு மூலதனமாக இருப்பது இந்த தன்னம்பிக்கை தான் என்பது புரிய வரும். தடைகள் வரும் போதே துவண்டு போகாமல் "என்னால் முடியும் (i can do it) என்ற ஒற்றை மந்திர சொல் தருவதே தன்னம்பிக்கை.
சரி.. தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது அதற்கான வழிகள் உங்களுக்காக இதோ..
1. சிறு இலக்குகள்:
முதலில் அடையக்கூடிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய வேண்டும்.
2. தவறுகளில் இருந்து கற்றல்:
நாம் செய்யும் தவறுகளைக் கண்டு வருந்தாமல் அதை ஒரு பாடமாக எடுத்து அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும்.
3. நேர்மறை எண்ணங்கள்:
I can do it என்னால் முடியும் என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனைப் பின்பற்றி தடைகளை உடைத்து எறிந்து மீண்டு வந்த என் தோழி எழுதி பரிசு வாங்கிய 'மீண்டும் நான்' என்ற கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
மீண்டும் நான்..
வானம் தந்த வெளிச்சம் போல
நிலவு தந்த குளுமை போல
மழை தந்த மலர்ச்சி போல
என் விரல்களை பிடித்து மௌனத்தை கலைக்க சொன்ன என் பேனாவால்
என் எண்ணங்கள் உயிர் பெற
மீண்டும் நான்!!!
கனவுகளின் சிறகுகளோடு
கைபிடித்து வானில் பறந்து
வார்த்தைகளை வடிவமைக்க
மீண்டும் நான்!!!
மாயமான உன் எழுத்து உயிர் பெற
உன் எண்ணங்களே உன் எழுத்துக்கு அழகு
அன்புடன் தன்னம்பிக்கைக்கு
தோள் கொடுத்த துணை!!
இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுகிறதா என்ன?
இலக்கு இல்லாமல் கப்பல் கரை சேர்கிறதா என்ன?
தூரம் எவ்வளவு இருந்தாலும் துரத்தி செல்.
மூளையின் மந்திரச் சொல் மறுபடி
முளைக்க வைத்ததோ?
நகர்ந்தால் தானே நதி அழகு
பறந்தால் தானே பறவை அழகு
வளர்ந்தால் தானே செடி அழகு
முயன்றால் தானே மனிதனுக்கு அழகு
நீ எழுதினால் தானே உனக்கு அழகு
உன்னால் முடியும்
இந்த மந்திர வார்த்தை அளித்த
பலத்தில்
மீண்டும் நான்..
எனக்குள் சொல்லிக் கொண்டேன்..
வண்ணங்கள் ஓவியத்திற்கு அழகென்றால்
உன் எண்ணங்களே உன் எழுத்துக்கு அழகு
கடந்து போன நேரத்திற்கு கவலைப்படாமல்
புத்துயிர் பெற்று
மௌனத்திற்கு விடை கொடுத்து
மறுபடி பேனா முனையில்
மீண்டும் நான்!
சபாஷ். என்ன ஓர் அழகான தன்னம்பிக்கை தத்துவம். 'எண்ணம் போல் வாழ்வு' என்பது போல நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே உலகம் நம்மைப் பார்க்கும். தன்னம்பிக்கை என்பது நம்மை நாமே நம்புவது மட்டுமே அல்ல. நமது இலக்குகளை நோக்கி நம்பிக்கையோடு பயணிப்பதும் தான்.
நண்பர்களே... தன்னம்பிக்கையை உங்கள் மூச்சாக மாற்றி வாழ்வில் எல்லா வெற்றியையும் அடையுங்கள்.
Your success will be determined by your own self confidence and fortitude.