

ஆஷிகி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் புகழ் பெற்றவர் பாலக் முஞ்சால். இவர் தனது வசீகர குரலினால் பாலிவுட் பாடகிகளில் முன்னணியில் இருப்பவர். இவர் தற்போது கின்னஸ் புத்தகத்திலும் லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். இவரது சாதனைகள் தனது பாடல்கள் மூலம் இடம் பிடிக்கப்பட்டது அல்ல; மாறாக அவரது அசாதாரண மனிதாபிமானப் பணிக்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாடகி பாலக் முஞ்சால், பாலக் பலாஷ் என்ற அறக்கட்டளையை உருவாக்கி 3,800 க்கும் மேற்பட்ட வறுமையில் வாடும் குடுங்களைச் சேர்ந்த குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதன் மூலம் பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தி கொடுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த பாலக் சிறு வயதில் இருந்தே இரக்க குணம் கொண்டவராக வளர்ந்துள்ளார். ஒரு ரயில் பயணத்தின் போது ஆதரவற்ற குழந்தைகளைச் சந்தித்த தருணம் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. அதிலிருந்து ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக அவரது எண்ணம் வளர்ந்து கொண்டு வந்தது.
பின்னாளில் அது தான் பாலக் பலாஷ் அறக்கட்டளையாக மாற உத்வேகமாக இருந்துள்ளது. அவர் தனது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சம்பாதிக்கும் பணத்தையும், வாழ்நாளின் தனிப்பட்ட சேமிப்பையும் உயிர் காக்கும் மருத்துவ உதவிகளுக்காகவே செலவிடுகிறார்.
எளிய குழந்தைகளின் மருத்துவ செலவுகளுக்கு மட்டுமல்லாது, மற்ற சமூக பணிகளுக்கும் தன்னால் இயன்ற நிதியை வழங்கியுள்ளார். குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார். அது போல கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவளித்துள்ளார். சினிமா பாடல்களின் மூலம் அவரது வாழ்க்கை தரம் உயர்ந்த போதும் பாலக் தனது வருவாயை தனது அறக்கட்டளை பணிகளுக்கு அர்ப்பணித்தார். அவரது தொழில்முறை சாதனைகளுடன் மனிதாபிமானப் பணிகளுக்கான சர்வதேச அங்கீகாரத்தை லிம்கா புத்தகம் வழங்கியுள்ளது.
பாலக்கின் கணவரான மிதுன் புகழ் பெற்ற பாலிவுட் இசையமைப்பாளராக உள்ளார். பாலக்கின் சமூக சேவைகளில் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறார். ஒரு துணைவராக எல்லா நேரங்களிலும் தன் துணைக்கான ஆதரவை தருகிறார். தன் அறக்கட்டளைக்கான நிதியை வெறுமனே பெறுவது இல்லை. உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நிதிகளை பெறுகிறார். "எந்த நிகழ்ச்சியும் இல்லாவிட்டாலும், வருமானம் இல்லாவிட்டாலும் - ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சை ஒருபோதும் நிற்காது." என்று பாலக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது இசை நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை இலக்காக கொண்டு நடத்தப் படுகிறது. அவரது இசை நிகழ்ச்சிக்கான காரணத்தை மற்றவர்களின் மனதை தொடும் வகையில் விளக்குவார்.
தனது இசை நிகழ்ச்சிகளின் மூலம் திரட்டப்பட்ட தொகை முழுவதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை பிரிவுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிதியில் இருந்து அவர் அறக்கட்டளை நிர்வாகச் செலவுகளுக்கு என்று ஒரு பைசா கூட பயன்படுத்தியது இல்லை. இதுவே அவரது அறக்கட்டளையின் பெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இந்த உயர் மட்ட வெளிப்படைத் தன்மை, அவரது பணியில் நம்பிக்கையையும் பங்களிப்பையும் அதிகரிக்கிறது.
பாலக் நிதியுதவியுடன் தன் சேவைகளை நிறுத்துவது இல்லை. அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் குழந்தைகளை அவர் சந்திப்பது வழக்கமாக வைத்திருக்கிறார். சில சமயம் மோசமான நிதி நிலையில் உள்ள அந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கும் நிதி அளிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களை சந்தித்து பரிசுகளை அளித்து, ரக்ஷா பந்தன் பண்டிகையும் கொண்டாடுகிறார்.
பாலக்கின் சாதனைகளை பாராட்டும் வகையில் "மிக அதிக எண்ணிக்கையிலான இதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்டிய பாடகி " என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் மற்றும் லிம்கா சாதனைகள் புத்தகத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார். எதிர்காலத்தில் 10,000 அறுவை சிகிச்சைகளுக்கு நிதியளிப்பதே அடுத்த இலக்காக பாலக் முஞ்சால் இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறார். தனக்கு கிடைத்த பெயரையும் புகழையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்.