

“கிரிஷ்.. எல்லார்ட்டயும் பேசியாச்சு. அவங்க வீடியோ அனுப்பறதுக்குள்ள போய் சாப்பிட்டு வந்துடலாம் வா..” – சரவணன்
“இல்லடா.. நீங்க போய் சாப்பிடுட்டு எனக்கும் வாங்கிண்டு வந்துருங்க.. எனக்கு வெளியே வர மூடே இல்ல.. “ சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஃபோன் வந்தது.
“சித்தப்பா தான் பண்றாரு .. இருங்க என்னன்னு கேட்டுட்டு போங்க..”
“ஸ்பீக்கர்ல போடு,” என்றான் அருண்.
தலை ஆட்டியபடி ஆன் பண்ணி பேசினான்.. “ஹலோ!சொல்லுங்க சித்தப்பா.. ஏதாவது முன்னேற்றம் இருக்கா..”
“அந்தப் பையனோட உறவினர்கள் கோவமா இருக்கறதால அவ்வளோ சீக்கிரம் முன்னேற்றம் வராதுப்பா.. என்ன ஒண்ணு.. ராத்திரி ஸ்டேஷன்ல இருக்க வேண்டாம். வக்கீல் வச்சு பேசி நான் அவங்களை என் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போறேன். உங்க வீட்டுக்கு வந்தா ரெண்டு பேர் இருக்கற மனநிலைல என்ன வேணாலும் ஆகலாம். என் வீட்டுல நிறைய பேர் இருக்கறதால பயம் இல்ல. நாளைக்கு காலைல திரும்ப இங்க வரணும்.. நாளைக்குத் தான் அந்த பையன் வகுப்பு மாணவர்களை இவங்க விசாரிக்கப் போறாங்க. பள்ளிக்கூடம் லீவ் விட்டதால தொடர்பு கொள்றது கஷ்டமுன்னு சொல்றாங்க.. ஏன்னா நிறைய பேரண்ட்ஸ் பசங்க பேச அனுமதிக்க மாட்டாங்கல்ல..”