

தலையில் கட்டோடு, போதையில் தள்ளாடிபடியே வந்தான் புருஷன். பார்த்தவுடன் தாலியை கண்களில் ஒத்திக்கொண்டாள் அஞ்சலை.
“குடிகார புருஷன் மேல இன்னா அக்கறை”
நையாண்டி குரல்கள் பக்கத்து விட்டாரிடமிருந்து கேட்கும். அதைக் கண்டுகொள்ள மாட்டாள்.
அஞ்சலைக்கு தூக்கம் பறிபோனது. புரண்டு புரண்டு படுத்தாள். மறு நாள் காலை என்ன நடக்கும்? என்பது அவள் மனதில் நிழலாடின.
“இன்னாம்மே!, நான் குடுக்கற காசை எவனுக்கு அழுவுறே? நான் கேட்டா குடுக்க மாட்டீயா?” கேட்டு கேட்டு அலுத்து போனது.
அப்போதுதான் கண்ணயர்ந்தாள். அறிவிப்பாக ஒலிபெருக்கியில் ‘மாரியம்மா! மாரியம்மா...’ பாட்டு ஒலித்தது...
“இந்தப் பாட்டு எதுக்கு இந்த நேரத்துல…? மாரியம்மாவுக்குத்தான் கண்ணில்லையே! கண்ணிருந்தா! புருஷனைத் திருத்தணும்ல” ஆதங்கத்தில் அவளைத் திட்டிவிட்டு அவளே! “நீ என்னா செய்வே, நான் ஒருத்தித்தானா? ஒரே நேரத்தில் ஆயிரத்தெட்டு பேரை காபந்து பண்ணனும்” என அவளே தேற்றிக்கொண்டாள்.
புருஷன் கண்விழித்தான்…. காயத்தின் வலியையும் மறந்து “இன்னாம்மே, எனக்கு ஐநூறு ரூபா வேணும், இன்னா செய்வீயோ, ஏது செய்வீயோ! ரூபாயோட வா… இல்லேன்னா, எங்கேயாவது ஒழிந்து போ” போதை அவனை இப்படியெல்லாம் பேச வைத்தது.
ஐநூறு ரூபாய்க்கு எங்கே போவது?… யோசித்து. யோசித்து.. கடைசியில் அந்த கிராமத்து பெரிய மனுஷன் சுந்தரராஐ வேணுகோபால்கிட்டதான் ‘போகணும்… வேற வழியே இல்லை என முடிவுக்கு வந்தாள்.
பெரிய மனுஷன் வீட்டு கதவைத் தட்ட.. தலையை வெளியே நீட்டி, “அஞ்சலையா!, புருஷனுக்கு காசா? இதோ பார் அஞ்சலை, எப்ப பார்; கடன் வாங்கி.. ஒன் பருஷனுக்கு காசை குடுக்கிறே! அவன் குடிச்சுட்டு குட்டிச்சுவரா போயிட்டான், ஒன் புருஷனைக் கூட்டிவா நான் அவன்கிட்டே நேர்லேயே தரேன்...”
அவசர.. அவசரமா வீட்டுக்கு ஓடியவள், புருஷனைக் கூட்டி வந்தாள்.
பெரிய மனுஷன் வீட்டு கேட்டிற்குள் நுழைந்தவுடன்...
”அஞ்சலை, ஒன் புருஷன் வெளியே இருக்கட்டும், நீ மட்டும் உள்ற வா!”
அஞ்சலைக்கு திக்கென்றது, இதுவரைக்கும் இப்படி கூப்பிட்டதில்லை. ‘ஐநூறு ரூபாய்க்கு இப்படியா?’
என்னன்னமோ யோசனைகள் அவளை அலைக்கழித்தது.
“இன்னா அஞ்சலை யோசிக்கிற? உள்ற வா…” வலிய கூப்பிட்டு… “இதுவரைக்கும் ஐம்பதாயிரம் வாங்கிட்டே எப்ப திருப்பி தரப்போறே? ஓன் புருஷனும் லாயக்கில்ல.
அவனால ஒரு சொகமும் இல்ல-ன்றது, ஒன் ஒடம்ப பார்த்தாலே தெரியுது “ ஆதனால, “என்னோட ஆசைக்கு இணங்கினா, ஐநூறு இல்லே, ஐயாயிரம் தரேன் அதுவுமில்லாம, இதுவரைக்கும் வாங்கின ஐம்பதாயிரத்தையும் தள்ளுபடி பண்ணிடுறேன். இன்னா சொல்றே?”
கேட்டதும், மிளகாயை அரைத்து உடம்பெல்லாம் பூசினாற்போல திகுதிகுவென்றது.
யோவ், நீ எல்லாம் பெரிய மனுஷனா? ஐநூறு ரூபாயக்கு முந்தி விரிக்க சொல்றீயே, ஒன் பொண்டாட்டிகிட்ட எவனாவது கேட்டா, ஒனக்கு எப்படி இருக்கும்” ஆவேசமாக கேட்டாள்.
“அஞ்சலை, நான் ஒன் புருஷன் மாதிரி குடிகாரன் இல்லே, நான் குடும்பஸ்தான்தான் ஒத்துக்கறேன். நீ பணம் கேட்டபோதெல்லாம் நான்தானே கொடுத்தேன். இதுக்கு ஒரு முடிவு வேண்டாமா, ஒண்ணு நீ ஒத்துக்கோ, இல்லே, நாளைக்கு ஐம்பதாயிரத்தோட வா... நீ வரலேன்னா, நானே ஒன் வீட்டுக்கு வந்து ஒன் ஒடம்ப பதம் பார்த்துடுவேன். உன் புருஷன் குடிகாரன், கையாலாகதவனாயிற்றே? அவன் வருவானா” நெத்தியடியாக அநியாயத்தை நியாயப்படுத்தினார் பெரிய மனுஷன்.
இவ்வளவு நேரமாயிற்றே, ஐநூறு ரூபாய் வாங்குவதற்கு இவ்வளுவு நேரமா? சன்னலருகே எட்டிப் பார்த்தவனுக்கு பெரிய மனுஷன் பேச்சைக் கேட்டதும் அவன் நாடி நரம்பெல்லாம் சூடேறியது. உள்ளே போனவன்...
“தூத்தெறி, கையலாகதவன்னு நெனைச்சு என் பொண்டாட்டிய பெண்டாள கூப்பிடுறீயா? நான் யார்ன்னு நாளைக்கே காட்டுறேன்” சவால் விட்டான்.
“வெளியே போடா நாயே...”
மறுநாள் பெரிய மனுஷன் மனைவிக்கு விசயம் அரசல்புரசலாக தெரிந்துவிட்டது. .. “இன்னாங்க, நா ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருக்கிறப்பவே, இன்னொருத்திய பெண்டாள கூப்பிட்டிங்களாமே, என்கூட இத்தனை வருஷமா குடும்பம் நடத்துனது வேஷமா இது நியாமா?”
கண்ணீரால் கேள்வி வளர்த்தாள்.
“அடியே!. ஏன்னை புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதானா? குடிகாரனா இருந்தாலும் கையாலாகதவனா இருந்தாலும், அவனவன் பொண்டாட்டி பத்தினியா இருக்கணும்தான் நெனைப்பான் அவன் பொண்டாட்டியும் திருத்தாம விட்டுட்டா…. நானும் பணத்தைக் குடுத்து... குடுத்து கெடுத்து வெச்சிட்டேன். அவன் மொடாக்குடியனா ஆனதுக்கு நானும் ஒருவகைல காரணமாயிட்டேன். இதுக்கு ஒரு முடிவு கட்டணும்தான், வேற வழியே இல்லாமத்தான் இந்த அஸ்திரத்தை விட்டேன்...
நீ மார்க்கெட்டுக்குப் போனா, அஞ்சலையின் புருஷனைப் பத்தி விசாரிச்சுக்கோ அவன் என்ன பண்றான்னு?” என்றார்
மார்க்கெட்டிற்கு போகும்போது பார்த்தால்…..
அதே டாஸ்மாக் கடையின் வெளியே…. “சைட் டிஷ் தயாரிக்கும் அடுப்படியில் ஆம்லேட் போட்டபடி நின்று கொண்டிருந்தான்.
புருஷனின் அஸ்திரம் நன்றாகத்தான் வேலை செய்துள்ளது. தன் புருஷனை நினைத்து சந்தோசமாக தன் தாலியை கண்களில் ஒத்தி எடுத்துக்கொண்டாள் பெரிய மனுஷனின் மனைவி அஞ்சலாதேவி!