

ராகவன் - நித்யா திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
ராகவன் முழு நாத்திகவாதி. பகுத்தறிவு உள்ளவர். ஆனால், மற்றவர்கள் மூடநம்பிக்கைகளுடன் வாழ்வதை பெரிது படுத்தமாட்டார். பெருந்தன்மை உடையவர்.
நித்யா நேர் எதிர். கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல... பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவர்.
இவர்கள் வாழ்கையில் ஒரு துன்ப நிகழ்வு ஏற்பட்டது. இவர்கள் அப்போது சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் பல அடுக்குகள் கொண்ட மாடியில் 3 வது பிளாக்கில் வசித்தார்கள். அவர்கள் உயிரையே வைத்திருந்த 6 வயது மகள் செல்வி 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
அந்த இழப்பை நித்யாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருக்கு மனச்சோர்வு நோய் வந்தது. டாக்டர் ருத்ரனின் (மனநல மருத்துவர்) சிகிச்சையால் 3 மாதத்தில் குணம் அடைந்தார்.
ராகவன் வீடு மாறி விட்டார்.
இப்போது அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை இருந்தது. அவள் பெயர் கலா. இப்போது அவர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை. நித்யா எம்.எம்.டி.ஏ. காலனியில் வீடு பார்க்கலாம் என்றார்.
ராகவன் சம்மதம் தெரிவித்து அங்கே சென்றார்கள். அவர்கள் வசித்த பழைய வீடு காலியாக இருந்தது. டு லெட் அட்டையில் நம்பர் இருந்தது. இப்போது ஒரு புதிய உரிமையாளர்.
நித்யா அந்த வீட்டிற்குத்தான் போக வேண்டும் என்று அடம் பிடித்தார். ராகவனுக்கு இஷ்டம் இல்லை. ஆனால், நித்யாவிற்காக ஒப்புக்கொண்டார்.
புது வீடு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. பிரச்னை ஆரம்பித்தது. நித்யாவிற்கு இரவில் ஒரு குழந்தை அழும் குரல் கேட்டது. கூடவே அந்த குழந்தை நடக்கும்போது கொலுசு சத்தமும் கேட்டது. அது செல்வியின் குரல் என்று எண்ணினார். செல்வி கொலுசு போட்டு இருப்பார்.
செல்வியின் ஆவிதான் அங்கு சுற்றுவதாக முழுக்க முழுக்க நம்பினார். அவர் ராகவனிடம் சொன்னார். அவர் அது வெறும் பிரம்மை என்றார்.
நாட்கள் ஆக ஆக நித்யா மிகவும் பயந்துபோனார். செல்வி ஆவி தனக்குள் வந்துவிட்டதாக நினைத்தார். இரவில் திடீரென எழுந்து, “நான் செல்வி…!” என்று சொல்லி பேயாட்டம் ஆடினார். இரண்டே மாதங்களில் அது போல நள்ளிரவு வேளையில் தினமும் பேயாட்டம் ஆடினார்.
ராகவன் டாக்டர் இடம் நித்யாவை கூட்டிச் சென்றார். ருத்ரன் மிகவும் பணிவாக நித்யாவை கேட்டார்.
“நீங்கள் செல்வி கதையை மறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா..?”
“ஆம் டாக்டர்…!” இது நித்யா.
டாக்டர் பேச ஆரம்பித்தார்.
“மேடம் நீங்கள் அதாவது உங்கள் மனம் அந்தச் சம்பவத்தை மறக்கவேண்டும் என்று திரும்ப திரும்ப நினைப்பதுதான் பிரச்னை… ஆம்… நீங்கள் நேசித்த செல்வியை… உங்கள் மேல் பாய்ந்துவிட்டாள் என தவறாக நினைக்கிறீர்கள்… மேடம் பேய், பிசாசு என்பது எல்லாம் சுத்த பொய்… 100 சதவீதம் தவறு. நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா…?”
“ஆம். டாக்டர்…!”
“அப்போது கடவுளை மீறி எப்படி பேய், பிசாசு இருக்கும்…? கொஞ்சம் யோசிங்க…!” என பக்குவமாக பேசினார். நித்யா அமைதி ஆனார்.
“சரி.. மேடம்.. நான் ஒரு மாதத்திற்கு மாத்திரை தருகிறேன். சாப்பிடுங்கள்… கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள்…!” என்றார்.
ஒரு மாதம் கழித்து டாக்டர் இடம் வந்தார்.
“எப்படி இருக்கீங்க…?”
“சார்… என்னைப் பிடித்து இருந்த குட்டிப் பேய் போய்விட்டது நன்றி...”
“மேடம்… எல்லாம் நம்ம மனசில்தான் இருக்கு… குட்டிப் பேயும் இல்லை… எந்தப் பிசாசும் அல்ல...!”
பேய் மனசில்தான் உள்ளது. நிஜத்தில் இல்லை.
நித்யா இப்போது தெளிவாக வேறு வீடு பார்க்கச் சொல்லி ராகவனிடம் சொன்னார்.
மனமே பேய்… !
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். தமிழ்நாடு தெற்கு இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம். இரவு நேரத்தில் பஸ் நிலையம் படு பிஸியாகி விடும்.
மதுரைக்குச் செல்லும் கடைசி பேருந்து புறப்பட இன்னும் 15 நிமிடங்கள்தான் இருந்தன. பாஸ்கர் சென்னையில் முதலாம் ஆண்டு எம். பி. பி. எஸ் படித்து வருகிறார். அவர் பஸ் நுழைவு வாயிலில் நின்றுக்கொண்டு இருந்தார். அப்போது மதுரை பேருந்து நடத்துனருக்கும் ஒரு பெரியவருக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.
நடத்துனர் கோபமாக பெரியவரிடம், “சீட் இல்லை. நிரம்பி விட்டது” என்று மீண்டும் மீண்டும் சொன்னார்.
பெரியவருக்கு என்ன அவசரமோ மன்றாடினார். இதை பார்த்துக்கொண்டு இருந்த பாஸ்கர் நடத்துனரிடம், “என் சீட்டை பெரியவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று சீட்டைக் கொடுத்தார்.
பெரியவர், பாஸ்கரிடம் “தம்பி… நீ எப்படி செல்வாய்…?” என்று கேட்டார்.
“ஐயா.. மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்பட இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. நான் ஆட்டோவில் எக்மோர் ரயில் நிலையம் சென்று விடுவேன்…!”
“தம்பி… ரிசர்வ் செய்யாமல் எப்படிச் செல்வாய்?”
“ஐயா... நான் இளைஞன்… நின்றுக்கொண்டு போய் விடுவேன்…!”
“தம்பி என்ன படிக்கிறாய்...?”
“முதலாம் ஆண்டு எம். பி. பி. எஸ்.”
“எந்தக் கல்லூரி…?”
பாஸ்கர் கல்லூரி பெயரைச் சொல்லி... “ஐயா நேரமாச்சு. நான் வரேன்…” என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடிக்க ஓடினார்.
பெரியவருக்கு பெரிய ஷாக்..!
ஒரு வாரம் கழித்து பாஸ்கர் வகுப்பில் இருந்தபோது டீன் (Dean) அலுவலக ஊழியர், பாஸ்கரிடம் ஒரு பெரிய கவரைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
கவரைப் பிரித்து பார்த்துபோது, அது கல்லூரியில் 5 வருடமும் படிக்க தரப்படும் உதவி தொகை விண்ணப்பம். கூடவே ஒரு துண்டுச் சீட்டு.
“மீட் டீன்… !” என்று இருந்தது.
வகுப்பு முடிந்ததும் டீன் அலுவலகம் சென்றார் பாஸ்கர்.
உள்ளே நுழைந்ததும் பாஸ்கருக்கு பெரிய ஷாக்..!
“சார்… நீங்களா? இன்ப அதிர்ச்சி.”
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தித்த பெரியவர்தான். ஐயா ‘சார்’ ஆனது.
“பாஸ்கர் நேர்காணல் நடக்கும்போது எனக்கு உடம்பு சரியில்லை. அதனால் தான்...”
“சார்… சார்…!” தடுமாறினார் பாஸ்கர்.
“பாஸ்கர் நான் உனது + 2 மதிப்பெண், நீட் ஸ்கோர், மற்றும் நேர்காணல், மதிப்பெண் எல்லாம் பார்த்தேன்… உங்கள் குடும்ப வருமானமும் பார்த்தேன்… குறைவுதான்… உனக்கு கல்வி உதவித் தொகை பெற எல்லா தகுதியும் இருக்கிறது. நீ விண்ணப்பத்தை நாளை சமர்ப்பிக்க வேண்டும். நான் சேங்ஷன் பண்றேன்…!”
பாஸ்கருக்கு இன்ப அதிர்ச்சி!
“சரிங்க சார்… !” என்று சொல்லி, “கிளம்பலாமா?” எனக் கேட்க டீன் அனுமதி தந்தார்.
மறுநாள் பாஸ்கர் டீன் அலுவலகம் சென்று, டீனிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தந்தார்.
சுமார் 10 நாட்களுக்குப் பிறகு டீன் அலுவலகத்திலிருந்து பாஸ்கருக்கு ஒரு கடிதம் வந்தது.
அவருக்கு 5 வருடங்களுக்கு கல்வி உதவித் தொகை தரப்படும் என்று இருந்தது. உடனே டீனை சந்திக்கவும் என்ற துண்டுச் சீட்டும் இருந்தது.
பாஸ்கர் டீனை சந்திக்கச் சென்றார். டீன் தனது கையால் முதல் செமஸ்டருக்கு தேவையான தொகையை ஒரே காசோலையாக தந்து..
“ஆல் தி பெஸ்ட்…!” என்றார்.
“தேங்க் யூ சார்..!” சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
பாஸ்ருக்கு இன்ப அதிர்ச்சி… !
நல்லது செய்தால் நல்லது வரும்.
இது உறுதி!