

குணசேகரன், சந்திரமதி இவர்களின் மகன் தினகரன், அவன் மனைவி சாரா, அவர்களின் ஆறு வயது குழந்தை சந்தீப் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து இரண்டு நாளாகிவிட்டது.
குணசேகரன், "தீனா, நம்ம கிராமத்து வீட்டை வித்துடலாம்ன்னு இருக்கேன்."
தினகரன், "நம்ம தாத்தா வீட்டையா?"
"ஆமாம், ஊருலயே ரெண்டு பேரு கேக்கறாங்க. என் ஃபிரண்ட் நாகராஜனும் அதை வாங்கிக்கறேன்னு சொல்றார்."
தினகரன், "இப்போ என்ன அவசரம்பா? நீங்கதான் அப்பப்போ அங்கப் போயி தங்கிட்டு வர்றீங்களே?"
அவன் அம்மா சந்திரமதி, “இப்போல்லாம் அடிக்கடி போக முடியறதில்லை தீனா. போனாலும் முன்ன மாதிரி மாசக்கணக்கா இருக்க முடியலை. நகர வாழ்க்கையே பழகிப்போச்சா, எல்லாத்துக்கும் அங்க ஆளு தேட வேண்டியிருக்கு..."
தினகரன் மனைவி சாரா, "இந்தத் தடவை இங்க லீவுக்கு வந்தது நல்லதாப் போச்சு மாமா. இவர் வந்ததே கிராமத்துக்குப்போய் பத்து நாள் தங்கிட்டு வரணும்னுதான். மூணு மாசமா அதைப் பத்தின பேச்சுதான்," என்றாள்.