

'வசந்தம் மால்' போன வாரம்தான் திறக்கப்பட்டது. அலுவலகத்தில் உள்ளவர்கள், அனைவரும் சென்று பார்த்து, மிகவும் நன்றாக இருப்பதாக கூறிவிட்டார்கள். அன்று ஞாயிறு. மாலு, தன் கணவன் மற்றும், ஐந்து வயது மகனுடன், மாலுக்கு போக முடிவெடுத்து விட்டாள். தன் உயிர்தோழி சசியையும், அழைத்தாள். அவளும் வருவதாக ஒப்புக்கொண்டாள்.
மாலு, சரியாக தன் கணவன் மற்றும் மகனுடன் வந்து விட்டாள். ‘சசி’, இன்னும் வரவில்லை. சிறிது காத்திருக்கலாம் என்று முடிவெடுக்கும் போதே, ஒரு ஆட்டோ வந்தது. சசிதான் இறங்கினாள்.
ஏய், என்ன நீ மட்டும் தனியா? எங்கே உன் கணவர், மற்றும் பெண் குழந்தை? என்று கேட்டாள் மாலு.
மாலு, வயிற்றெறிச்சலை கொட்டிக்காதே. அந்த மனுஷன், சரியான அம்மா பிள்ளை. அவர் அம்மாவுக்கு, ‘வீசிங் மற்றும் இருமல் பிரச்சனை’ இந்த குளிருக்கு, கொஞ்சம் அதிகமா இருக்கு. அதனாலதான், வரலேன்னு சொல்லிட்டு, அம்மா பக்கத்துல சேர் போட்டு உட்கார்ந்திருக்கார்.
“ஏண்டி என்ன சொல்றே? அப்ப குழந்தையை யார் பார்த்துப்பாங்களாம்…”.
சாப்பாடு ஊட்டித்தான் வந்தேன். இப்ப மணி நாலு இல்லியா. ஏழு மணிக்கு, குழந்தைக்கு பால் கொடுக்கனும். அவ்வளவுதான். அதுக்குள்ளாற நாம போயிடலாம் இல்லியா?
‘ஓ. ஷ்யூர்’. ஆனாலும் நீ குடும்பத்துடன் வராதது, வருத்தம் தான், என்றாள் மாலு.
"இத பாரு மாலு நான் சொல்றேன்னு தப்பா நெனக்காதே. இந்த மனுஷனுக்கெல்லாம் கல்யாணமே பண்ணியிருக்கக்கூடாது. நம்ம உயிர்தான் போறது. ‘அம்மா’, ‘அம்மா’, ‘அம்மா’. அம்மாவை கட்டிக்கிட்டு அழுகிற இந்த மாதிரி துப்பு கெட்ட ஜீவனுக்கெல்லாம் திருமணம் ஒரு சடங்கு. அவ்வளவுதான். நாமதான் தூண்டில்ல மாட்டிக்கிட்ட மீனா துடிக்கிறோம். போடி இந்த ஜென்மம் தொலைந்து போச்சு. விடு. கோபம் கோபமா வர்றது. அம்மாவாம் அம்மா."
மாலு, அமைதியாக இருந்தாள். அவளை சமாதானம் செய்து, பின் அழகான மாலை வலம் வந்தனர். ‘மாலுவின் சின்ன பயல்’ அந்த ஆட்டம். விளையாட்டு. அந்த ஏசிக்கும், மக்கள் ரசனையும் கண்டு, அளவில்லாத ஆனந்தம், அடைந்தாள் சசி. மாலு கேட்கவே வேண்டாம்.
கணவன் கை பிடித்து, ஒவ்வொரு ஸ்டாலாக சென்று, வித விதமான செண்ட், ஐஸ் கிரீம், அழகு சாதன பொருட்கள் விற்கும் ஸ்டால், பற்பல ஆடை வகைகள், எல்லாம் பார்த்து வாங்கி வர சரியாக மணி ஏழு.
அய்யோ என்றாள் ‘சசி’.
ஏய் என்ன ஆச்சு.?
மணி ஏழு ஆயிடுச்சே. “என் பிள்ளைக்கு பசிக்குமே. பால் கொடுக்கனுமே. அய்யோ குழந்தை பசி தாங்காதே. இந்த மனுஷனுக்கும் பால் கலந்து கொடுக்க தெரியாதே. மாலு ப்ளீஸ்டி உடனே எனக்கு ஓலா புக் செய்து தர்றியா. கையும் ஓடலே காலும் ஒடலே மாலு” என்று, பரபரத்தாள் சசி.
உடனே, மாலுவின் கணவன் ஒரு ஓலா ஆட்டோவை புக் செய்து கொடுக்க, அதில் ஏறும் போது, மாலு சொன்ன வார்த்தைகள் தான் ‘இந்த கதையின் ஹாய்லைட்.’
“ஒரு வேளை பாலுக்கே, குழந்தைக்கு பால் கொடுக்க, சற்று தாமதம் ஏற்பட்டதுக்கு, ஒரு தாயா, இந்த பாடுபடுதே மனசு. இது மாதிரி, எத்தினி வாட்டி, பாலும் சோறும், பார்த்து பார்த்து கொடுத்து, ஆளாக்கி, தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருப்பாங்க, அந்த தாயும்.”
‘இது ஆட்டோ ஏறும் சசிக்கு சுரீரென்று மனதில் ஏதோ தைத்தது.’
டிரைவர், கொஞ்சம் வேகமா போறீங்களா? சசி, கேட்டபோதே தன் தாயை, தன் கணவன் போற்றி பாதுகாப்பதில், என்ன தவறு இருக்க முடியும்?. அந்த தாயும் நம்மைப்போல் என்ன பாடு பட்டு ஆளாக்கியிருப்பார்கள். எவ்வளவு தியாகம் செய்திருப்பார்கள். “அம்மா அம்மாதான்” என்று அவள் உள் மனம் நினைக்க, கண்களில் கண்ணீர் முட்டி நிற்க, பசிக்காக வீறிட்டு அழுத குழந்தையுடன், வாசலில் காத்து நின்றான், சசியின் கணவன்.
‘குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு பால் கரைக்க தயாரானாள்.’
“சசியும் ஒரு தாய்தானே”