

சுபா நடுத்தர வயது. அவர் ஆழ்வார் திருநகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவுஸ் கீப்பிங் வேலை செய்துவந்தார். காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை. (வேலை நேரம் அதிகம்.) மத்தியானம் 1.30 முதல் 2.30 வரை உணவு இடைவேளை.
சுபா கணவர் உடல் ஊனம் உள்ளவர். இருந்தாலும் காலை 4 மணி முதல் 7.30 வரை சுற்று வட்டாரத்தில் பால் மற்றும் தினசரி சப்ளை செய்து வந்தார். அவர்களுக்கு ஒரே மகன். 3வது வகுப்பு. அரசு பள்ளியில் படித்து வந்தான். காலை மாலை இரண்டுவேளையும் அவர்தான் மகனை பள்ளிக்கு கொண்டு சென்று அழைத்து வருவார்.
சுபா…
மதிய உணவு இடைவெளியில் அடுத்த ஸ்டாப் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் உள்ள டீ கடைக்குச் சென்று முதலில் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு உணவு சாப்பிடுவது வழக்கம்.
டீ கடை முதலாளி ராமசாமி.
அவருக்கு சுபாவை மிகவும் பிடிக்கும். இது ஆண் பெண் ஈர்ப்பு இல்லை. இது அண்ணன் தங்கை உறவு போல. சுபா தனது உணவை அவருடன் பங்கு போட்டுக்கொள்வார்.
சில நாள் ராமசாமிக்கு டிபன் ஸ்பெஷலாக கொண்டு வருவார். இது பல வருடங்களாக நடைபெற்றது.
இன்று.
சுபா… உணவு இடைவெளியில் ராமசாமி கடைக்கு அழுதுகொண்டே சென்றார்.
ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.
“என்ன ஆச்சு சுபா...?” எனக் கேட்டார்.
அதற்கு சுபா அழுதுகொண்டே “என்னை வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள்...!” என்று சொன்னார்.
ராமசாமி வருத்தம் அடைந்தார்.
மிகவும் சோகமான மனநிலை.
“சுபா… அப்போது நீங்கள் இனி வரமாட்டீர்களா? இனி என்ன செய்யப் போகிறீர்கள்…?” என்று அக்கறையுடன் கேட்டார்.
சுபா பதில் சொல்லமுடியாமல் அழுதுகொண்டே இருந்தார்.
உணவும் சாப்பிடவில்லை.
ராமசாமி சற்று யோசித்து… “நாளை காலை என் கடைக்கு வாருங்கள்… எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். கொஞ்சம் சாப்பிடுங்களேன்…!”
“வேண்டாம் அண்ணா…! நான் நாளை வருகிறேன்…! “
சுபா கணவரிடம் எதையும் சொல்லவில்லை.
மறுநாள்.
காலை 11 மணிக்கு ராமசாமி கடைக்குச் சென்றார். ராமசாமி அன்புடன் சுபாவை கேட்காமலேயே ஒரு டீ கொடுத்தார்.
“என்ன யோசித்தீர்களா.? இனி என்ன செய்வது என்று?”
“அண்ணா...! இல்லை…!“ என்று சொல்லி அழுதார்.
“சுபா… எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. இந்த ஏரியாவில் ஒரு டிபன் கடை கூட இல்லை. இந்தத் தெருவில் 3 கடைக்கு அடுத்து ஒரு கடை காலியாக விட்டது… உங்களுக்குத்தான் நன்கு சமைக்க தெரியுமே..? நீங்கள் ஏன் ஒரு டிபன் கடை துவங்கலாமே…?”
“அண்ணா.. அண்ணா... அட்வான்ஸ், கடை வாடகை எல்லாமே ரெடி பண்ணனும். என்னாலே முடியாது அண்ணா...”
“இல்லை சுபா.. கடைக்கு அட்வான்ஸ் மற்றும் கடை வாடகையை நான் தருகிறேன்.. நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள். உங்களுக்கு நான் ரூபாய் 1 லட்சம் கடனாகத் தருகிறேன்… நீங்கள் ஏதற்கும் கவலைப்பட வேண்டாம்..! “
“அண்ணா…! அண்ணா..!!” என்று அழுதார். தனது சம்மதத்தையும் தெரிவித்தார்.
ராமசாமி அன்றே அந்தக் கடையை வாடகைக்குப் பேசி முடித்தார்.
அடுத்த வாரம் கடைக்குப் பெயிண்ட் அடித்து புதிய நவீனகடைபோல் செய்துவிட்டார்.
இப்போதுதான் இந்த விஷயங்களைத் தனது கணவரிடம் சொன்னார்.
“ராமசாமி அண்ணாவுக்கு நாம் நன்றி சொல்லணும்” – கணவர்.
சரியாக 15 நாட்கள் கழித்து டிபன் கடைக்குப் பலகை வைக்கவேண்டும்.
சுபா… ”அண்ணா... கடைக்கு என்ன பெயர் வைப்பது..?” என்று கேட்டார்.
ராமசாமி யோசிக்காமல் பதில் சொன்னார் :
சுபா டிபன் சென்டர்… !