

வாணிக்கு ஆச்சரியம் தாங்கல.
ஆனா முகத்துல அதைக் காட்டிக்காம, ரவியோட அக்கா பேசுறதை அப்படியே அமைதியா கேட்டுட்டு இருந்தா.
“இவங்க இப்போ இப்படி பேசுறாங்க… ஆனா போன வருஷம் நடந்ததெல்லாம் என்ன?” ன்னு மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.
போன வருஷம் தான்.
அனன்யாவுக்கு பெண் பார்க்க ரவி, அகிலா, ஆனந்த் எல்லாரும் சேர்ந்து வந்திருந்தாங்க.
அன்னைக்கு வீடு களைகட்டிப் போயிருந்தது.
அனன்யா காபி போட்டு கொடுக்குற விதம், பேசுற முறை, வேலை பற்றிப் பேசுற தெளிவு எல்லாமே ரவிக்கும் அகிலாவுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு.
“பெண்ணு ரொம்ப நல்லா இருக்கா”
“நம்ம வீட்டு மருமகளா வந்தா சூப்பரா இருப்பா”
அப்படின்னு ரவி உள்ளுக்குள்ளவே முடிவு செஞ்சுட்டார்.
ஆனந்த் பக்கம் கேட்டா இன்னும் கிளியர்.
அனன்யாவைப் பார்த்து பேசின அப்போவே அவன் கண்ல ஒரு சந்தோஷம் தெரிஞ்சது.
அனன்யாவும் அவனை பிடிச்சதா மறைமுகமா காட்டினா.
“வீட்டில போய் பேசிட்டு சீக்கிரம் சொல்றோம்” ன்னு சொல்லிட்டு போனாங்க.
ஆனா அந்த சீக்கிரம் தான் வரவே இல்ல.
ஒரு வாரம்…
இரண்டு வாரம்…
ஒரு மாசம்…
வாணி எத்தனை தடவை சங்கர் கிட்ட,
“ஏதாவது பதில் வந்தா நல்லா இருக்கும்” ன்னு சொன்னாலும்,
அவர் “பொறுமையா இரு” ன்னு தான் சொல்லுவார்.
இதுக்குள்ள அனன்யா தான் ரொம்ப அமைதியா இருந்தா.
வெளியில சிரிச்சாலும்,
உள்ளுக்குள்ள அவளுக்கும் ஏமாற்றம் இருந்தது.
“ஏன் இப்படி தள்ளிப் போடுறாங்க?”
“நம்மள பிடிக்கலையோ?”
அப்படின்னு அவளுக்கு தோணாம இல்ல.
ஆனா ரவி வீட்டுல உண்மையான பிரச்னை வேற.
ரவிக்கு தன் மகள், ஆனந்தின் தங்கை, அபிநயாவைப் பற்றிய கவலை தான்.
அபி சின்ன வயசில காய்ச்சலால பாதிக்கப்பட்டதிலிருந்து, அவளோட வலது கை கொஞ்சம் சரியா அசையாது.
“என்ன இருந்தாலும் என் பொண்ணுதானே,” அப்படின்னு ரவி எப்பவுமே அவளை ஒரு கண்ணாடி பொம்மை மாதிரி பார்த்துக்கிட்டே இருந்தார்.
அபிநயா படிப்புல ரொம்ப கெட்டி.
ஓவியம் வரையும்போது அவளோட கை குறை ஒரு விஷயமே இல்ல. அந்தக் குறை அவளுக்கு இல்லாத மாதிரி அவளோட ஓவியங்கள் பேசும்.
நிறைய போட்டிகளில் ஜெயிச்சிருக்கா.
பத்திரிகையில அவளோட ஓவியம் வந்த நாள்ல, ரவிக்கு கண்ணுல தண்ணியே வந்துச்சு.
ஆனா அதே நேரத்துல ஒரு பயமும்.
“நான் இல்லாம அவளை யார் பார்த்துப்பா?”
“வீட்டுக்கு வரப்போற மருமகள் அபியை புரிஞ்சுப்பாளா?”
“எங்கே ஏதாவது மனசு நோகடுச்சிடுவாளோ?”
இந்த பயம்தான் ஆனந்த் கல்யாணத்தை தள்ளி வைக்கச் செய்தது.
அதனால தான் வாணி குடும்பத்துக்கு, “இப்போ கொஞ்சம் சிக்கல் இருக்கு. இன்னும் கொஞ்சம் டைம் வேணும்” அப்படின்னு சாக்கு சொல்லி மறுத்துட்டார்.
வாணி குடும்பமும், “சரி… நம்ம பொண்ணுக்கு கொடுப்பினை இல்ல போல” ன்னு நினைச்சுக்கிட்டு வேற வரன் தேட ஆரம்பிச்சாங்க.
ஆனா அனன்யா மட்டும் அசையவே இல்ல. வந்த வரன் எல்லாத்துக்கும், “இப்ப வேண்டாம். ஆறு மாசம் கழிச்சு பார்ப்போம்” ன்னு சொல்லிட்டே இருந்தா.
அந்த ஆறு மாசத்துல தான், அனன்யா ஆனந்த் கிட்ட மெதுவா பேச ஆரம்பிச்சா.
“உங்க வீட்டுல ஏன் அப்போ மறுத்தாங்க?” ன்னு நேரடியாக கேட்டுட்டா.
ஆனந்த் முதல்ல தயங்கினான். பிறகு எல்லாத்தையும் சொன்னான். அபிநயாவைப் பற்றிய கவலை; அப்பாவின் பயம்; வீட்டுல இருக்கும் அமைதி எல்லாம்.
அனன்யா அமைதியா கேட்டுக்கிட்டே இருந்தா. அப்புறம் ஒரே ஒரு விஷயம் சொன்னா.. “அபிக்கு கல்யாணம் நடக்கணும். அவங்க சந்தோஷமா இருக்கணும். அப்புறம் தான் நம்ம கல்யாணம்!”
அனன்யா உடனே தன் கல்லூரி தோழி லாவண்யாவை தொடர்பு கொண்டு அபியைப் பற்றி பேசி அவளோட தம்பி வினோத், அபிக்கு பொருத்தமானவன் என கூறி அபியை சந்திக்க வைத்தாள்.
வினோத் படிச்சவன், அமைதியானவன் கூட, அபிநயாவை சந்திச்ச நாளே, வினோத்துக்கு அவள் ஓவியம், அவள் பேச்சு, அவள் தைரியம் எல்லாமே பிடிச்சுப் போச்சு.
அபிநயாவும் முதல் தடவை யாரோ ஒருத்தன் தன்னை 'குறை'ன்னு இல்லாம முழுமையா பார்த்ததை உணர்ந்தாள்.
கல்யாணம் நடந்த நாள்லதான், ரவி எல்லாத்தையும் புரிந்து கொண்டார்.
“என் பயம் தேவையில்லாதது. இந்தப் பெண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா, அபிக்கு பாதுகாப்பு தான் கிடைக்கும்” ன்னு.
அதனால தான் அனன்யா – ஆனந்த் கல்யாணத்துல, ரவியே மேடையில நின்னு பெருமையா சொன்னார்:
“இந்த கல்யாணத்திற்கு காரணம் என் மருமகள்.”
அனன்யா சிரிச்சுக்கிட்டே சொன்னா:
“குடும்பம்னா… ஒருத்தருக்காக ஒருத்தர் புரிஞ்சுக்கணும்.”
அந்த சிரிப்புல, ஒரு கல்யாணம் இல்ல… இரு மனங்கள் சந்தோஷமா சேர்ந்ததோட அர்த்தம் இருந்தது.