

நதியாவிற்கு 23 வயது பூர்த்தி அடைந்த உடனேயே அவரது அம்மா அவளை திருமணம் செய்து முடித்து வைத்தார்.
அவளுக்கு அமைந்த கணவரோ சரியான குடிகாரன்!
இதனால் நதியா திருமணமான ஒரு வாரத்திலேயே தன்னுடைய தாயான காளியம்மாள் வீட்டிலே வந்து தங்கிவிட்டாள்.
ஊர் உறவினர்களும் சமுதாயமும் அவளை பல ஏசினார்கள்.
இருப்பினும் நதியாவோ நல் ஒழுக்கத்துடன் வளர்ந்த ஒரு பெண்ணாவாள். நதியா தன்னுடைய தாய் வீட்டில் ஒரு வருட காலம் அவள் படித்த MSc படிப்பிற்கு ஏற்ப வேலை செய்து வந்தாள். இருப்பினும் அவளுடைய மனதில் எப்பொழுதும் ஒரு வேதனை இருந்து கொண்டே இருந்ததால் தினமும் அழுவாள்.
தன்னுடைய வாழ்க்கை இவ்வாறு நரகமாக ஆகிவிட்டது என்று கோவில்களிலும், வீடுகளிலும் அவள் அழுதபடியே இருந்தாள். இதனால், நதியாவின் தாயார் காளியம்மாள் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று எண்ணி ஆறு மாத காலம் நதியாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி அவளை வீட்டிலேயே இருக்கச் சொன்னார்கள்.
அவளும் தாய் கூறியபடியே வீட்டிலேயே இருந்தாள்.
பின் நதியாவின் தாயார் அவளுக்கு இரண்டாவது திருமணம் முடித்து வைப்பதற்காக ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்தார்.
இம்முறை நதியாவின் தாய், மாப்பிள்ளை தேடும் விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். முதலில் அமைந்தது போல குடிகாரனாக அமையக்கூடாது என்று அவர்கள் மனம் அதிகமாக எண்ணியது.
நதியாவின் தாயாரின் எண்ணத்தைப் போலவே ஒரு நல்ல குணமான மணமகன் நதியாவிற்கு அமைந்தான்.
அவ்விருவருக்கும் திருமணம் நல்முறையில் முடிந்தது.
நதியாவும் அந்த பழைய கசப்பான நினைவுகளில் இருந்து வெளியே வர கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தாள்.
அவளுடைய கணவரோ அவளை நல்முறையில் பார்த்துக் கொண்டான். இருப்பினும் இவ்விரு தம்பதிகளுக்கும் குழந்தை பேரு இல்லை. இதனால் நதியாவும் அவளுடைய கணவரும் பல மருத்துவமனைகளை நாடி குழந்தைக்கான மருத்துவத்தை மேற்கொண்டனர்.
நதியாவின் தாயாரோ அவருக்கு சிறந்த ஆன்மீக பக்தி இருந்ததன் காரணமாக அனைத்து கோவில்களிலும் தன்னுடைய மகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என்று அதிக நேர்த்திக்கடன்களை வைத்தார். இருப்பினும் காலங்கள் உருண்டோடின.
இரண்டு வருடங்கள் ஆகியும் நதியாவிற்கு குழந்தை செல்வம் இல்லை. இதனால் அவள், ஊர் மக்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவரிடமும் ஒரு கசப்பான பெயரையே (மலடி) பெற்றாள். அவள் அனைவர் இடத்திலும் மிகவும் தைரியமான பெண் போல் நடித்துவிட்டு தனியாக அறையிலேயே அழுது கொள்வாள். சிறிது காலம் போகப் போக அவள் வாழ்க்கையே வெறுக்க ஆரம்பித்து விட்டாள்.
நதியாவைப் போலவே, இச்சமுதாயத்தில் பல பெண்கள் குழந்தை பேரு இல்லை என்ற காரணத்தினாலே புறக்கணிக்கப்படுகிறார்கள். நல்லதொரு விசேஷ வீடுகளிலும் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
'ஆயிரம் நிறை பேசாது; ஆனால் ஒரு குறை பேசும்.' என்ற பழமொழிக்கு ஏற்ப நதியாவை பலர் ஏசியதன் காரணமாக அவள் விசேஷ வீடுகளுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டாள்.
ஒரு தம்பதியினருக்கு குழந்தை செல்வம் இல்லாத காரணத்தினால் மனிதனாக வாழ்வதே தேவை இல்லாத ஒன்று என்று இச்சமுதாயம் அவர்களை புறக்கணிக்கிறது.
நதியாவின் மனம், நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் கணம் கணம் துடித்துக் கொண்டிருந்தது. இறுதியாக அவள் ஒரு மருத்துவமனையை அடைந்தாள். மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பாகவே அவளுக்கு ஒரு நற்செய்தி கிட்டியது. இறுதியாக அவள் கருத்தரித்தாள்.
நதியாவின் மனநிலை அப்பொழுது உலகையே அவளுடைய கையில் கொடுத்தது போல் இருந்தது. நதியாவின் மன மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.