

பிரபலமான ஆயுத்த ஆடை நிறுவனத்தின் அதிபர் திரு. பாஸ்கரன். அவருக்கு கிருஷ்ணசந்திரன் மற்றும் ரவிசந்திரன் என இரண்டு மகன்கள். இருவரும் படித்து முடித்த பின், தந்தையின் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணி புரிந்து வந்தனர்.
பாஸ்கரன், தனது நிறுவனத்தின் பொறுப்புகளை தன் மகன்களில் ஒருவருக்குக் கொடுத்து விட்டு தான் ஓய்வு பெற வேண்டும் என நினைத்தார்.
தன் மகன்கள் இருவரையும் அழைத்தார்.
“கிருஷ்ணா! உனக்கு இரண்டாவது மாடியில் உள்ள இரண்டாம் எண் அறையைத் தருகிறேன். ரவி! உனக்கு மூன்றாம் மாடியில் உள்ள மூன்றாவது அறையைத் தருகிறான். இப்போது மணி பதினொன்று. நான் சரியாக ஒரு மணிக்கு உங்கள் அறைகளுக்கு ஆய்வு செய்ய வருவேன். அதற்குள் உங்கள் அறைகளைத் தயாராக வையுங்கள்” என்றார்.
“என்ன தயார் செய்ய வேண்டும் ?” எனக் கேட்டான் கிருஷ்ணா.
“ம்ம்…. அது உங்கள் தேர்வு. நிறைவாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்” என்றார் பாஸ்கரன். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பணமும் கொடுத்தார்.
ரவி அமைதியாக வெளியேறினான்.
இரண்டு மணி நேரம் தான் இருக்கிறது. கிருஷ்ணா நகரின் பெரிய கடைக்குச் சென்று நீண்ட வட்ட மேசை, அதற்கான நாற்காலிகள் மற்றும் நிற்கும் நிலை மின்விசிறிகளை வாங்கி, ஒரு பெரிய லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தான்.
மிகத் துரிதமாக வேலை செய்ததால் மிகப் பதட்டமாக இருந்தான்.
கூலியாட்களைக் கொண்டு மரச்சாமான்களைத் தனது அறைக்குத் தூக்கி வரச் செய்து, அறையில் பரப்பி வைத்தான். அறை நிறைவாக இருந்தது.
ரவி அங்கும் இங்கும் ஓடவில்லை. சற்று நேரம் அமைதியாக யோசித்தான்.
பிறகு, தனது நண்பன் ஒருவனின் கடையில் இருந்து பரிட்சார்த்த முறையில் ஏர்கூலர் ஒன்றை வரவழைத்தான். அப்பாவுக்குப் பிடித்தமான சந்தன வாசனையுடன் கூடிய அறை மணமூட்டி ஒன்றை வாங்கி வைத்தான். மேலும், குளிர்ந்த தண்ணீர், உப்பு பிஸ்கெட் மற்றும் மோர் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்தான். எல்லாம் ஓரிரு தொலைபேசி அழைப்பிலேயே முடித்துவிட்டான்.
அந்த அறையில் ஏற்கனவே ஒரு மேசையும் நாற்காலியும் இருந்தது.. மேசையில் ஒரு நாட்காட்டியையும் குறிப்பேட்டையும் வைத்தான்.
திரு. பாஸ்கரன், தான் கூறியபடி, ஒரு மணி அளவில் இரு அறைகளையும் பார்வையிட்டார்.
”அப்பா, திருப்தி தானே! நல்ல தரமுள்ள மேசையும் நாற்காலிகளும் வாங்கிவிட்டேன். நமது நிர்வாகக்குழு கூட்டம் நடத்தும் அளவுக்கு. நிறைவாக இருக்கிறதா?” என்றான் கிருஷ்ணா.
“சரிதான், செல்வு என்னாயிற்று?”
“உடனடியாகச் செய்ய வேண்டி இருந்ததால், கூலி நிறையத் தர வேண்டி இருந்தது. அதை என்னுடைய சொந்தப் பணத்தில் கொடுத்துவிட்டேன். மரச்சாமான்கள் கடைக்கு இன்னும் பத்தாயிரம் பாக்கி தர வேண்டும்” என்றான்.
ரவியின் அறையில் நுழைந்தார் பாஸ்கரன். இனிய சந்தனத்தின் மணம் மனதை நிறைத்தது. குளிர்ச்சியான காற்று இதமாக இருந்தது.
“உட்காருங்க”. இருந்த ஒரு நாற்காலியில் பாஸ்கரன் அமர்ந்தார். உப்பு பிஸ்கெட்டும் மோரும் உபசரித்தான்.
”வேறென்ன பணிகள் முடிக்க வேண்டும்?” எனச் சொல்லிக் குறிப்பெட்டில் குறித்துக் கொள்ள ஆயத்தமானான்.
“ரவி, நான் கொடுத்த பணத்துக்குச் செலவு என்ன?”
“குளிரூட்டி வாடகை, ஃப்ரெஷ்னர், பிஸ்கெட் மற்றும் மோர்…வரவழைக்க செலவு… எல்லாம் சேர்ந்து ஆயிரத்து இருநூறு… என்னுடைய உழைப்புக்கு முன்னூறு போக… மீதி பணம் இதோ இருக்கிறது. கீழே ஒரு மெஷின் பழுதாக உள்ளது. அதைச் செப்பனிட இந்தப் பணத்தை பயன்படுத்தலாமே? என்றான் ரவி.
பாஸ்கரன் முகத்தில் இளம் புன்னகை.
நிர்வாகப் பொறுப்பை யாருக்குக் கொடுத்திருப்பார் பாஸ்கரன்? நீங்களே சொல்லுங்களேன்.