

அந்த ட்ரக் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு டெனிசியிலிருந்து அலபாமாவை நோக்கி போய்க் கொண்டிருந்தது. மகிழ்ச்சியான அந்த குடும்ப உறுப்பினர்கள் தாய், தந்தை தங்கள் ஐந்து பெண் பிள்ளைகளுடன் வளர்ப்பு நாய் சேடியேயுடன் டிரக்கின் பின்னே காரில் போய்க் கொண்டிருந்தனர். வழியெங்கும் விளை நிலங்கள் மலை அருவிகள் என பார்த்துக்கொண்டு சிரிப்பும் களிப்புமாக தாங்கள் புதிதாக வாங்கிய தங்கள் பண்ணை வீட்டுக்கு போய்ச் சேர்ந்தனர்.
ஆளரவமில்லாமல் மரங்கள் புதர்கள் என மண்டி இருந்த அந்த இடமே ஒரு அமானுஷ்ய தோற்றத்தை கொடுத்தது. சோபாவில் அமர்ந்தபடி கண்களை இமைக்காமல் டிவியில் சுவாரஸ்யமாக காஞ்சுரிங் ஒன் படத்தை பார்த்துக் கொண்டிருந்த கோகுல், "என்னமா படம் எடுக்குறாங்கப்பா, இது பேய் படம், இப்ப எடுக்குற பேய் படத்தை பார்த்தா பயத்துக்கு பதிலா சிரிப்பு தான் வருது மியூசிக்கே மிரட்டுதே" என நினைத்தான். வசனங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தவனுக்கு சின்ன குழந்தையின் கால் கொலுசொலி தனியாக கேட்டது.
தன் மகன் வருண் தூக்கத்தில் எழுந்து, படுக்கையில் தான் இல்லாதது கண்டு, தன்னைத் தேடி ஹாலுக்கு வந்து விட்டானோ என சோபாவில் இருந்து திரும்பி பெட்ரூம் வாசலை பார்த்தான் கோகுல்.
ஆனால் அங்கு யாரும் இல்லை. அவன் மனைவி கஸ்தூரி "வெள்ளிக்கிழமை நைட்டான உங்களுக்கு பேய் படம் பார்க்கிறதே வேலையா போச்சு. நான் போய் படுக்கிறேன் பா" என்று பத்து மணிக்கே மகனுடன் சென்று படுத்து விட்டாள்.
திரும்பவும் சலங் சலங் என கொலுசொலி சற்று நீண்டு ஒலித்தது. படத்தில் இந்த மாதிரி எல்லாம் சவுண்டு வராதே என நினைத்தான் கோகுல்.
ஏனென்றால் அவன் அந்தப் படத்தை நான்காம் முறையாக பார்க்கிறான். டிவியை மியூட் செய்து விட்டு ஃபேனையும் அணைத்துவிட்டு அந்த ஒலி கேட்கிறதா என கவனித்தான். திரும்பவும் நன்றாக ஒரு சிறு குழந்தை நடந்து வருவது போல் அந்த ஒலி கேட்டது. ஒரு நிமிடம் கோகுலுக்கு மூச்சுவிடவே திணறலாக இருந்தது. ஹாலில் ஒரு இரவு விளக்கு மட்டும் போடப்பட்டு இருந்தது.
எங்கும் ஊசி விழுந்தால் கேட்கும் நிசப்தம். சோபாவிலிருந்து ஹால் ஜன்னலை பார்த்தவனுக்கு வெளியே மை இருட்டு பயமுறுத்தலாய் அமர்ந்திருந்தது. அப்போது காற்றில் வெண்மையாக ஒரு உருவம் ஹால் ஜன்னலைக் கடந்து செல்வது தெளிவாகத் தெரிந்தது.
கோகுலின் இதயம் ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது. கண்களை கசக்கி கொண்டு திரும்பவும் ஜன்னலை பார்த்தான். அங்கு எதுவும் இல்லை. அந்த சலங்கை ஒலியும் நின்று இருந்தது. என்னடா இது பேய் படத்தோட தாக்கமா என்று நினைத்தவனின் தோள்பட்டையில் ஒரு கை அழுத்தமாகப் பதியவும், "ஐயோ பேயி பேயி நான் இல்ல நான் இல்ல" என அலறினான் கோகுல்.
"அடச்சே எதுக்கு இப்படி அலறீனீங்க நானே ஒரு நிமிஷம் பயந்துட்டேன்" என்றாள் அவன் மனைவி கஸ்தூரி.
"நீதானா நானும் பயந்தே போயிட்டேன்" என்ற கோகுலிடம்,
"எனக்கெல்லாம் எதுக்கும் பயமே வராதுன்னுவீங்க. பேய் படம் பார்த்து பயந்துட்டீங்களா எனக்கு தூக்கம் வரல. டிவி சத்தம் நின்னுடுச்சா அதான் என்ன பண்றீங்க பார்க்கலாம்னு வந்தேன்" என்றாள் கஸ்தூரி கொட்டாவியுடன் சற்று கிண்டலாக.
அப்போது திரும்பவும் சலங் சலங் என கொலுசொலி கேட்டது. "இது என்னங்க" என்று பேச ஆரம்பித்த கஸ்தூரியிடம் "உஷ் ஜன்னலை பாரு" என்றான் கோகுல் பயத்துடன். கஸ்தூரியும் சற்று படபடப்புடன் ஜன்னலை பார்த்தாள். திரும்பவும் அங்கு இருளில் வெள்ளையாக ஒரு உருவம் ஜன்னலை கடந்தது. அவ்வளவுதான் கணவனும் மனைவியும் கைகளை இறுகப்பற்றிய படி பெட்ரூமுக்கு ஓடி வந்து கதவை சாத்திக் கொண்டனர்
பயத்தில் இருவர் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது. கஸ்தூரி தங்கள் குலதெய்வ ஸ்தோத்திரத்தை சொல்ல ஆரம்பித்தாள். கோகுல் பெட்ரூம் ஜன்னல் கதவு சாத்தி இருப்பதை பார்த்து நிம்மதியானான்.
பெட்ரூம் அலமாரியில் இருந்த விபூதி டப்பாவை எடுத்து நெற்றியில் பட்டையாக விபூதியை வைத்துக் கொண்டான். கஸ்தூரிக்கும் வைத்து விட்டான். பயத்தில் இருவருக்கும் தூக்கமே வரவில்லை.
திடீரென காலிங் பெல் சத்தம் தொடர்ந்து கேட்கவும் தூக்கி வாரி போட்டு இருவரும் எழுந்த போது விடிந்து வெகு நேரமாகி இருந்தது. இருவரும் உட்கார்ந்தபடியே தூங்கியிருப்பதைக் கண்டு கஸ்தூரி கோகுலிடம் "ஏங்க நேத்து கனவு ஏதாவது கண்டோமா?" என கேட்டாள்.
"கனவெல்லாம் இல்லை நிஜம்தான் யாரோ காலிங் பெல் அடிக்கிறாங்க யாருன்னு போய் பாரு" என்றான் கோகுல் சோம்பல் முறித்தபடி.
கஸ்தூரி நன்கு வெளிச்சம் வந்துவிட்டதால் சற்று தைரியமாக வெளியே வந்தாள். வாசலில் பக்கத்து வீட்டுப் பாட்டி நின்று கொண்டு இருந்தார். "ஏன் கஸ்தூரி இப்பதான் எந்திரிச்சியா, தாத்தாவோட எட்டு முழ வேட்டி ஒண்ணு நேத்து மாடியில காய வைச்சேன். அதை எடுக்க மறந்துட்டேன் அது பாரு உங்க வீட்டு மாடிக்கொடியில் சிக்கி கீழே வரைக்கும் தொங்குது அதை கொஞ்சம் எடுத்து கொடும்மா..." என்றார்.
கஸ்தூரி நிமிர்ந்து பார்த்தாள். தாத்தாவின் வேட்டி மாடியிலிருந்து அவர்கள் வீட்டு ஹால் ஜன்னல் வரை தொங்கிக் கொண்டிருந்தது. 'ஓ இது தானா நேத்து ராத்திரி காற்றில் ஆடி நம்மை மிரட்டிய பேய்?' என நினைத்த கஸ்தூரி மாடிக்குச் சென்று கொடியில் சிக்கி இருந்த வேட்டியை கிழியாமல் பொறுமையாக எடுத்துக் கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்தாள்.
பாட்டி கூறிய நன்றியை வாங்கிக்கொண்டு போர்டிகோ படி ஏறினாள். அங்கு காற்றில் உருண்டோடி கொண்டிருந்த அவள் மகன் வருணின் பந்து அவள் கண்களில் பட்டது.
அது மெதுவாக உருள உருள பந்தினுள் இருக்கும் சலங்கைகள் அழகாக சலங் சலங் என ஓசை எழுப்பியது. அடக்கடவுளே இப்போ அழகா தெரிவது ராத்திரி நம்மை எப்படி பயமுறுத்திடிச்சி என நினைத்தவள் சிரித்தாள்.
ஹாலினுள் நுழைந்தவள் சோபாவில் சற்று பயத்துடன் அமர்ந்திருந்த கோகுலைப் பார்த்தாள்." யாரோ எனக்கு எல்லாம் பேய்னா பயமே கிடையாதுன்னு சொன்னாங்க" என்று கூறி சிரித்தாள். "ஐயோ நீ சிரிக்காத இன்னைக்கு ராத்திரி பொழுது எப்படி போகும்னு இருக்கு எனக்கு" என்றவனின் முன் தன் கையில் இருந்த பந்தை கீழே மெதுவாக உருட்டி விட்டாள் கஸ்தூரி. அதிலிருந்து வந்த ஓசை இரவு தான் கேட்ட கொலுசொலி போல் இருந்ததைப் பார்த்து "இதுதானா " என அசடு வழிந்தான் கோகுல்.
"ஜன்னலில் தெரிஞ்ச பேய் பக்கத்து வீட்டு தாத்தாவோட வேட்டி நீங்க பயந்ததும் இல்லாம என்னையும் வேற பயமுறுத்தி விட்டீங்க" என்றாள் கஸ்தூரி கோபமாக.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு இந்த லட்சணத்துல வெள்ளிக்கிழமையான பேய் படம் பார்க்கிறது. நிஜமான பேய் வந்தா அப்போ தெரியும் நம்ம தில் எப்படின்னு" என்று அவனை கலாய்த்தாள் கஸ்தூரி.