

"ஏங்க, நம்ம பொண்ண உங்க அம்மா வீட்டிலிருந்து அவ கல்லூரிக்கு போக சொல்லலாமா?"
"என்ன திடீர்னு? பொண்ணு மேல பாசமா? இல்ல எங்க அம்மா மேல பாசமா?"
"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. ஒரு சில விஷயங்களை நாம சொன்னா அவ புரிஞ்சுக்க மாட்டா, கோபப்படுவா. இந்த காலத்துப் பசங்க அந்த மாதிரிதான் இருக்காங்க. அதையே பெரியவங்க சொன்னா மறுப்பு சொல்லாம யோசனை செய்து பார்ப்பாங்க. அதுக்குத்தான்... காலேஜ் முதல் நாளிலிருந்தே உங்க அம்மா வீட்டிலிருந்து போனால் அவளுக்கும் எந்த சந்தேகமும் வராது."
"நீ என்ன சொல்ல வர்றே? எனக்கு எதுவும் புரியலையே!"
'இவருக்கு எல்லாம் விளக்கமா சொன்னாதான் புரியுமாக்கும்' என மனதிற்குள் நினைத்துக்கொண்டவள்,
"நாம இரண்டு பேரும் காலேஜ்ல படிக்கும் போதுதான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நீங்க நல்லவரா இருந்ததாலே நம்ம இரண்டு பேர் வீட்டிலேயும் எந்த எதிர்ப்பும் இல்லை. நமக்கும் நல்ல வேலை கிடைச்சது, இப்பவும் சந்தோஷமா இருக்கோம்.
அதுபோல நம்ம பொண்ணும் காலேஜ்ல யாரையாவது காதலிச்சா என்ன பண்றது? அந்தப் பையன் நல்லவனா இருந்தா பரவாயில்லை! ஆனா ஒரு சில பசங்க சும்மா லவ் பண்ற பேர்ல காலேஜை கட் பண்ணிட்டு, பொண்ணை பைக்கில் உட்கார வெச்சுக்கிட்டு ஊரை எல்லாம் சுத்திட்டு, சினிமா, பீச்சுன்னு போயிட்டு... அப்புறம் கல்யாணம் பண்ற நிலை வரும்போது, 'எங்க அப்பா வேண்டாம்னு சொல்றாரு, அம்மா பெரிய இடமா பார்க்கிறாங்க'னு சாக்குப்போக்கு சொல்லிட்டுத் திரியற பசங்களா இருந்தா என்ன பண்றது? அதான் பயமா இருக்கு."
"சரி, அதுக்கு எதுக்கு எங்க அம்மா வீட்டில் விடச் சொல்றே? உங்க அம்மா வீடுதானே நம்ம பொண்ணு கல்லூரிக்கு பக்கமா இருக்கு?"
"இதையும் விளக்கிச் சொல்லணுமா? எங்க அம்மா ஒரு ஓட்டை வாய்! நம்ம பொண்ணு லீவு நாள்ல வீட்டில் இருக்கும்போது நம்ம லவ் மேரேஜ் பற்றி ஒருவேளை அவகிட்ட சொல்லிட்டா, அவளுக்கும் அந்த எண்ணம் வந்திடும் இல்லையா? அதனாலதான்."
"ஆனா உங்க அம்மா, மூணு பொண்ணுங்களை நல்லபடியா வளர்த்து, படிக்க வச்சு, நல்ல குடும்பத்து மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. அது உனக்கே தெரியலையா? அதனால நம்ம பொண்ணையும் அவங்க பொண்ணுங்க மாதிரியே கண்டிப்பா வளர்ப்பாங்க. காதல், கத்திரிக்கான்னு எதுவும் வராம இந்த விஷயத்தில் கவனமா இருப்பாங்க. நமக்கும் கடைசி காலத்துல எந்தப் பிரச்னையும் வராது!"
பொண்ண பெத்த அம்மாவுக்கு சுருக்கென்று இருந்தது!