

"என்னங்க பாட்டியைக் காணோம்ன்னு, கீழே வீடே அல்லோலப்படுது. நீங்க என்னடான்னா மணி எட்டாகியும் தூங்குறீங்களே" கணவனை எழுப்பினாள் பவித்ரா.
"பவி..இன்னிக்கு சன்டே தானே.. தூங்க விடு" முனகி விட்டு, புரண்டவனிடம், "கீழே மாமா உங்களை கூப்பிடுறாங்க. எழுந்திருங்க" உலுக்கினாள். எழுந்து, பல் தேய்த்து விட்டு, டிஷர்ட்டை போட்டு கீழே இறங்கி வந்தான்.
ஹாலில், குடும்பமே சோகமாய் கூடியிருக்க, அப்பா ஆரம்பித்தார், "ஜெகன் ...காலையில இருந்து பாட்டியை காணோமடா.."சொல்லும் போதே, குரல் கம்மியது.
"பார்வதி அத்தை வீட்டுக்கு போயிருக்கும். நேத்து கூட, பார்வதி இருக்குற கொக்கிர குளத்துல மழைத் தண்ணி ரோடெல்லாம் வெள்ளமாப் போகுதுன்னு பேப்பர்ல போட்டிருக்கான். என்னாச்சுன்னு போயி பார்க்கணும்ன்னு சொல்லிட்டிருந்தா.." ஜெகன் சொல்ல, "அண்ணா, அத்தைக்கு போன் போட்டுக் கேட்டேன். வரலைன்னு சொல்லிட்டாங்க " தங்கை சாரு பதிலளித்தாள்.