

தூக்கம் வராமல் இருப்பதே கொடுமை என்றால், தூங்குவது போல் நடிப்பது கொடுமையிலும் கொடுமையாக இருந்தது சாராவுக்கு. அம்மாவின் டென்ஷனுக்கு காரணம் தெரிந்த நாளில் இருந்தே இந்த அவஸ்தையை அனுபவித்து வருகிறாள்.
தூக்கம் வராத நேரத்தில் உடம்பு ஒரு நிலையில் படுக்கவே விடாது. புரண்டு படுக்கவும் முடியாது. அவள் தூங்கவில்லை என்பது தெரிந்தால் அம்மா மிகவும் துடித்துப் போய் விடுவாளே என்ற பதைப்பில் ஆடாமல் அசையாமல் கிடப்பாள்.
இரவு ஏழுமணி வரை அம்மா காட்டும் முகமே வேறு. மணி ஏழு ஆகப்போகிறது என்றாலே மிகவும் பதட்டமாகிவிடுவாள். குழந்தைகள் சாராவையும், ராகுலையும் அவசர அவசரமாக சாப்பிட வைத்து தூங்க வைப்பதில் தீவிரமாகிவிடுவாள்.
அன்றைய வீட்டுப் பாடங்களை அன்றன்றே செய்து முடித்து விட வேண்டும் என்று மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்பவள், அன்றொரு நாள் ராகுல் நிறைய ஹோம் வொர்க் இருக்கிறது என்று கூறி, சாப்பிட்டபின் மீதியை செய்ய ஆரம்பித்ததும் வெறி பிடித்தவள் போல் நடந்து கொண்டாள்.
"காலையில பார்த்துக்கலாம் இப்போ போய் படுத்து தூங்கு" என்று நயமாக ஆரம்பித்து ராகுல் பிடிவாதமாக அப்போதே முடித்து ஆக வேண்டும் என்று கூறியதும், கோபத்தின் உச்சத்தில் நின்று அவன் அழ அழ இழுத்து வந்து தூங்க வைத்தாள்.
இதையெல்லாம் பார்த்து சாரா மனதிற்குள் நிறைய யோசித்து நிறைய குழம்பி இருக்கிறாள்.
அம்மாவிடமே ஒருமுறை இதுபற்றி கேட்டும் இருக்கிறாள்.