குறைந்த முதலீடு... நிறைந்த லாபம்! பெண் குழந்தைகளுக்கு அதிக பலன் தரும் சேமிப்பு திட்டங்கள்..!
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் பெண் குழந்தைகளுக்காகப் மத்திய அரசு பல முன்னெடுப்புகள், சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அனைத்து அரசுத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள், தேசிய அளவிலும் மாநில அளவிலும் பெண்களுக்கு உதவுவதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன.
பெண் குழந்தைகள் மிகச் சிறிய வயதாக இருக்கும் போதே பெற்றோர் குழந்தைகள் பெயரில் சேமிக்கத் தொடங்கினால், மகள் பெரியவள் ஆகும்பொழுது 'கூட்டு வட்டி' (Compounding) முறையில் பணம் பன்மடங்கு பெருகி இருக்கும். இந்த சேமிப்பு திட்டங்கள் பெண் குழந்தைகளின் கல்வி, வேலை, திருமணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை முன்கூட்டியே தொடங்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
அந்த வகையில் உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த சிறு சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் அதிக வட்டி (தற்போது 8.2%) மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகிறது. பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அல்லது 21 வயதில் முதிர்வு அடையும் போது இந்தத் தொகை கிடைக்கும். 18 வயதில் மேற்படிப்புக்காக 50% தொகையை திரும்பப் பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி விலக்கு உண்டு.
யூலிப் (Unit Linked Insurance Plans):
யூலிப் (ULIP - Unit Linked Insurance Plan) என்பது ஆயுள் காப்பீடு மற்றும் பங்குச் சந்தை முதலீடு ஆகிய இரண்டையும் ஒரே திட்டத்தில் வழங்கும் ஒரு நிதி தயாரிப்பாகும். இதில் நீங்கள் செலுத்தும் பிரீமியம், காப்பீட்டு பாதுகாப்பிற்கும், மீதிப் பணம் பங்குகள் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. பிரிவு 80C கீழ் பிரீமியத்திற்கும், பிரிவு 10(10D) கீழ் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு பெறலாம். இதில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஓரளவு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும் உண்டு.
பாலிகா சம்ரிதி யோஜனா:
நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இரண்டிலும் இந்தப் பெண் குழந்தை நலத் திட்டம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் பிறக்கும்போதே ரூ.500 வழங்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும்போது, அந்த மாணவி பத்தாம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.300 முதல் ரூ.1000 வரை கல்வி உதவித்தொகை பெறுகிறார். ஒரு குடும்பத்தின் இரண்டு மகள்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்.
முக்யமந்திரி ராஜ்ஸ்ரீ யோஜனா:
இத்திட்டம், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பிறப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் ரூ.50,000 நிதி உதவியை 6 தவணைகளில் வழங்குகிறது. இது பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் உதவுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும்.
பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள் :
அபாயம் இல்லாத, நிலையான வருமானம் தேடும் பெற்றோர்களுக்குப் பின்வரும் அரசு சார்ந்த திட்டங்கள் நல்ல பலனை கொடுக்கக்கூடியவை.
தபால் நிலைய டெபாசிட்டுகள் (POTD): நிலையான வட்டி மற்றும் பாதுகாப்பு. POFD கணக்கைத் திறப்பதற்கு அதிகபட்சத் தொகை எதுவும் இல்லை, குறைந்தபட்சத் தொகை ரூ 1,000 ஆகும். நீங்கள் 5 வருட நிலையான வைப்பு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்திருந்தால், இந்திய வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): நீண்ட காலச் சேமிப்பிற்கு உகந்தது. இது ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு நிதியாண்டில் ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி சேமிப்பை ஒரே நேரத்தில் விரும்பும் நடுத்தர மற்றும் குறைந்த ஆபத்து விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
வங்கி நிலையான வைப்பு நிதி (FD): அவசர காலத் தேவைகளுக்கு எளிதில் மாற்றக்கூடியது. இது சேமிப்பு கணக்கை விட அதிக வட்டி வழங்குகிறது (பொதுவாக 5% முதல் 8% வரை). 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை தேர்ந்தெடுக்கலாம்.
தபால் நிலைய தொடர் வைப்பு நிதி (RD): மாதந்தோறும் சிறு தொகையைச் சேமிக்க உதவும். இது தற்போது ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 1 வருடத்திற்குப் பிறகு, கணக்கில் உள்ள தொகையில் 50% வரை கடன் பெறலாம். இந்திய அரசின் நேரடி உத்தரவாதம், பாதுகாப்பானது.
சந்தை சார்ந்த முதலீடுகள் (Mutual Funds & SIP):
நீண்ட கால அடிப்படையில் (10-15 ஆண்டுகள்) அதிக லாபம் ஈட்ட விரும்புவோர் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை குறைந்த முதலீட்டில் (ரூ.500 முதல்) பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெற உதவும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.
குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அல்லது எஸ்.ஐ.பி. (Systematic Investment Plan) முறையில் மாதந்தோறும் முதலீடு செய்வது பணவீக்கத்தை விஞ்சிய லாபத்தைத் தரும். சீரான முதலீடு மற்றும் நீண்ட கால முதலீட்டு காலம் (Long term horizon) கூட்டு வட்டி மூலம் உங்கள் பணத்தை பெருக்க உதவுகிறது.
கல்விக்கான அரசு திட்டங்கள்:
முதலீட்டுத் திட்டங்களைத் தாண்டி, பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க அரசு சில சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
சி.பி.எஸ்.இ. உதான் (Udaan): இது அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் உயர்கல்வி பயில உதவும் திட்டமாகும். மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., க்களில் சேருவதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் "உதான்' என்ற திட்டம் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, கணிதம், அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம்.
பாலிகா சம்ரிதி யோஜனா: இந்தத் திட்டம் பெண் குழந்தைகளைச் செழிப்பாக மாற்றவும், அவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களின் பிறப்பிற்கான சமூகக் களங்கத்தை நீக்கி, நிதி உதவி வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண் குழந்தை பிறந்தவுடன் ரூ. 500 உடனடி நிதியுதவியாக வழங்கப்படுகிறது. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உங்கள் பெண் குழந்தையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக எந்த ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதாக இருந்தாலும் நன்கு ஆலோசித்து, ஆய்வு செய்து முடிவெடுப்பது நல்லது.
இந்த சேமிப்பு உங்கள் மகள் கல்விக்காகவா அல்லது திருமணத்திற்காகவா? என்பதை பொறுத்து நீங்கள் பாதுகாப்பான திட்டத்தை விரும்புகிறீர்களா அல்லது சற்று ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை அதிக லாபம் தரும் திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால் ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்ல.
நிதி ஆலோசகர்களின் கருத்துப்படி, அனைத்துப் பணத்தையும் ஒரே திட்டத்தில் போடாமல், சுகன்யா சம்ரிதி போன்ற பாதுகாப்பான திட்டங்களிலும், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வளரக்கூடிய திட்டங்களிலும் பிரித்து முதலீடு செய்வது உங்கள் மகளின் எதிர்காலத்தைப் பொன்னானதாக மாற்றும்.

