

ஹைதராபாத்தில் ‘ஓல்டு சிட்டி கோல்டு மேன்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் திடீரென பிரபலமான சூர்யா பாய் என்ற நபர் குறித்து தற்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்டு சிட்டி(பாதபஸ்தி) பகுதியை சேர்ந்தவர் சூர்யாபாய். நடமாடும் தங்க மாளிகை என்று சொல்லும் அளவுக்கு கழுத்திலும் கைகளிலும் நகைகள் அணிந்திருப்பார். வெள்ளை நிற ஆடைகளுடன் வலம் வரும் இவர் பெரும் பெரிய தடிமனான சங்கிலிகள், மோதிரங்கள், பெரிய கைவளையல்கள் ஆகியவற்றை அணிந்து ‘கோல்டு மேன்’ என்ற தனிப்பட்ட பிராண்டை மக்களிடையே உருவாக்கியிருந்தார். அனைவரும் இவரை பெரும் செல்வந்தராக இருப்பார் என்ற கணித்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் அவரும் யூடியூப் பேட்டிகள், சமூக வலைதள வீடியோக்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் மூலம் தன்னை மிகப்பெரிய செல்வந்தராக மக்களிடையே உருவகப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது அவரை பார்த்து ஆச்சரியப்பட்ட சக பக்தர்களும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோகளும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
ஆனால் பொதுவெளியில் ஏராளமான நகைகள் அணிந்து பொதுமக்களிடையே பந்தா காட்டிவந்த அவரது இந்த கம்பீரமான தோற்றம் முழுவதும் போலியானது என்பது தற்போது வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது அவர் அணிந்திருந்த நகைகள் எல்லாம் கவரிங் நகைகள் என்று தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இவரது கூட்டாளியான ஐதராபாத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் இதேபோல் அதிக நகை அணிந்தவாறு டெல்லி சென்றுள்ளார். அங்கு அவரை வருமானவரித்துறையினர் மடக்கி விசாரித்தபோது அவர் அணிந்திருந்த நகைகளில் ஒரு கிலோ நகைக்கு முறையான கணக்கு காட்டவில்லை. அவரது செல்போனில் சூர்யாபாயின் படமும், தொலைபேசி எண்ணும் இருந்தது.
இதனையடுத்து ஐதராபாத் வருமானவரித்துறை அதிகாரிகள் சூர்யாபாயை பிடித்து விசாரித்தபோது, அவர் அணிந்திருந்த நகைகள் ரூ.1 கோடி மதிப்புள்ளதாக ஆரம்பத்தில் கூறியிருந்தார்.
ஆனால் அந்த நகைகளை துறை சார்ந்த நிபுணர்கள் மதிப்பீடு செய்தபோது, அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் மட்டுமே என தெரியவந்தது. பெரும்பாலான நகைகள் செம்பில் செய்யப்பட்டு, அதன் மேல் தங்க அல்லது ரோடியம் பூச்சு பூசப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளில் வெறும் 3 சவரன் அளவிற்கு மட்டுமே உண்மையான தங்கம் இருந்தது. இதுவரை குறைந்தது 32 கவரிங் நகைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நிதி நிலைமை தொடர்பான விசாரணையில், அவர் கடந்த ஆறு ஆண்டுகளில் வருமானவரி கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவரிடன் நடத்திய விசாரணையில் அவர் வெளிஉலகத்திற்கு வெளிப்படுத்திய செல்வந்த வாழ்க்கை முறைக்கும், உண்மையான நிதி நிலைக்கும் இடையில் பெரும் முரண்பாடு இருப்பது வெளிப்பட்டுள்ளது.
இவர் கவரிங் நகைகளை அணிந்தவாறு மக்களிடையே பந்தா காட்டி வந்தது தற்போது தெரியவந்த நிலையில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.