

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (ஆகஸ்ட் 8) தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இன்று மதியம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார் அமித் ஷா. மத்திய அமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை முழுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாநகரம் மற்றும் கிரிவலப் பாதையை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது காவல் துறை. தற்போது திருவண்ணாமலையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சரின் வருகையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரின் வருகையால் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பக்தர்கள் கிரிவலப் பாதையில் செல்ல சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு பேரிகார்டுகளை அமைத்துள்ளனர் போலீஸார்.
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு, அதன்பிறகு அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு செல்லவுள்ளார். அங்கு நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித் ஷா கலந்து கொள்ள இருக்கிறார்.
டிரோன்கள் பறக்கத் தடை:
மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 8) மற்றும் நாளை (ஆகஸ்ட் 9) ஆகிய 2 நாட்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்.
சாமி தரிசனம்:
டெல்லியில் இருந்து சென்னை வரும் அமைச்சர் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் இருக்கும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வந்து இறங்குவார். அதன் பின்னர், மாலை வேளையில் ‘ஸ்ரீ ரமண மகரிஷி’ ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார் அமைச்சர்.
இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி 2026 பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சியில் நடைபெற்ற ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்திருந்தார். அதோடு கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதற்றார்.
அமைச்சர் அமித் ஷாவின் இந்த வருகை ஆன்மீகம் மற்றும் அரசு முறைப் பயணமாகவே திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, நாளை (ஆகஸ்ட் 9) அவர் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார்.
புதுச்சேரி காவல்துறையினருக்கு ‘குடியரசுத் தலைவர் கொடி விருது’ வழங்கும் பெருவிழாவில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெற இருக்கும் ‘ஹர் கர் திரங்கா’ என்ற விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைக்க இருக்கிறார் அமித் ஷா.
இதற்கு முன்பு அமைச்சர் அமித் ஷா வரும் போதெல்லாம் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அவரை சந்திப்பது வழக்கம். ஆனால் பாஜக-வில் இருந்து விலகி தனியாக ஒரு அரசியல் அமைப்பை அவர் தொடங்கி இருப்பதால், இருவரும் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்காது.