

இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு மாநிலங்களும் போட்டிப்போடுகின்றன. பெரு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தேவையான உதவிகளை செய்து வரவேற்கின்றன. அந்த வகையில் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது புதிய உற்பத்தி ஆலையை அமைப்பதற்கக தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவும் மல்லுக்கட்டி வருகின்றன.
பஜாஜ் (Bajaj) என்பது இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனக் குழுமங்களில் ஒன்றாகும். 1940களில் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், வாகன உற்பத்தி, நிதிச் சேவைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் எனப் பல துறைகளில் இயங்கி வருகிறது. புனேயைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளராகவும், உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர வாகன (ஆட்டோ) உற்பத்தியாளராகவும் உள்ளது.
புனேவைச் சேர்ந்த இந்நிறுவனம் தற்போது தனது மின்சார 'சேட்டக்' (Chetak) ஸ்கூட்டரை மகாராஷ்டிராவில் உள்ள சக்கான் (Chakan) ஆலையிலும், 'கோகோ' (GoGo) மற்றும் 'ரிக்கி' (Riki) போன்ற மின்சார மூன்று சக்கர வாகனங்களைச் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்து வருகிறது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தின் பந்த்நகரிலும் (Pantnagar) இந்நிறுவனம் ஒரு உற்பத்தி ஆலையை இயக்கி வருகிறது.
இந்த முதலீட்டிற்கான இடங்களில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை முன்னணியில் உள்ளன. இருப்பினும், இறுதி இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையே பஜாஜ் நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசிடம் இருந்து வரவேண்டிய மின்சார வாகனங்களுக்கான மானித்தொகை (எப்.ஏ.இ மற்றும் மாநில மானியங்கள்) ரூ.70 கோடிக்கு மேல் திரும்ப கிடைக்காமல் நிலுவையில் இருப்பதால் அந்நிறுவனத்திற்கு ஒரு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளதாகத் தொழில் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிதி சார்ந்த இழுப்பறி காரணமாக அதிருப்தி அடைந்த பஜாஜ் நிறுவனம் அடுத்தக்கட்ட விரிவாக்கத்தை மகாராஷ்டிராவிற்கு வெளியே கொண்டு செல்ல தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த ஆலோசனையின்படி தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
பஜாஜ் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களை ‘சேட்டக்’ மாடல்களுக்கான தேவை சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதால் அதன் உற்பத்தி திறனை விரிவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டிருப்பது இந்த புதிய பாதைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, தெலுங்கானா இரு மாநிலங்களுமே பஜாஜ் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட முதலீட்டை ஈர்ப்பதற்காக தங்கள் தரப்பு சாதகமான சூழலை முன்வைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, ஓசூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே வலுவான ஆட்டோமொபைல் சுற்றுச்சூழல் மற்றும் முதிர்ச்சி அடைந்த ‘சப்ளை செயின்’ இருப்பதால் போட்டியில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் தொழில்நுட்பம் மற்றும் புதிய கொள்கை ஆதரவு மூலம் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் நில வசதிகளை செய்துதர முன்வந்திருக்கிறது.
தமிழகத்தில் இந்த ஆலை அமைக்கப்பட்டால் இது தென் இந்தியாவில் அமைய இருக்கும் பஜாஜ் நிறுவனத்தின் முதலாவது உற்பத்தி ஆலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பஜாஜ் நிறுவனம் இரு மாநிலங்களின் சலுகைகளையும், தளங்களையும் ஆய்வு செய்து வருவதாகவும், யார் பக்கம் போகலாம் என்பது குறித்து இறுதி முடிவு விரைவில் எட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்கள் வெளியேற்றம் குறித்த விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டபேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல்வேறு முக்கிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். தற்போதைய ஆட்சி நிர்வாகம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், தக்கவைப்பதிலும் தொய்வடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு, பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 40 நாட்களில் எந்தவொரு நிறுவனமும் தமிழகத்தை விட்டு வெளியேறவில்லை என்று மறுத்தார். மேலும், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய ஊழல் காரணமாகவே நிறுவனங்கள் வெளியேறியதாகவும் குற்றம் சாட்டினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 25 தொழில் முதலீடுகள் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றுள்ளன. குறிப்பாக, 2024-ம் ஆண்டில் மட்டும் ஏராளமான முதலீடுகள் விட்டு போனது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு சுமார் ரூ. 3.3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முந்தைய ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அந்த வகையில் பஜாஜ் ஆட்டோ முதலீடு முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்படாத முதலீடு திட்டம் என்றும், அவ்வாறு தமிழகத்தில் பஜாஜ் நிறுவனம் கால் தடம் பதித்தால், அந்த பெருமை தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் தவெக அரசுக்கே சேரும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.