

வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், பெங்களூருவில் உள்ள ஹோட்டல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடக்கூடும் என்று பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தினசரி உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும் என்று தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ம்தேதி தொடங்கிய இன்று நீடித்து வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளதுடன் தற்போது ஏற்றுமதி வர்த்தம் உள்ளிட்ட சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் எண்ணெய் விநியோகத்தையும் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது.
ஈரான் நிர்வகித்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் 20 சதவீத கச்சா எண்ணெய் செல்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான போர் பதற்றத்தால் இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி வாராந்திர அளவில் 30 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 21 சதவீதம் உயர்ந்து 100 டாலரைத் தாண்டியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு இருப்பதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எதுவும் மூடப்படவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ள அதேவேளையில், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எல்பிஜிக்கு இந்தியா பெரிதும் இறக்குமதியை நம்பியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 7-ம்தேதி திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளதே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாக கூறப்படுகிறது.
அதன்படி, ரூ.869க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.60 விலை அதிகரித்து ரூ.929க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், சென்னையில் ரூ.2,044க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.115 விலை உயர்ந்து ரூ.2,044க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், கடந்த மார்ச் 1-ம்தேதி ரூ.30 விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது உயர்ந்துள்ள விலையும் சேர்த்து ஒரே வாரத்தில் ரூ.145 வரை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது நடுத்தர குடும்பங்கள் மற்றும் ஹோட்டல்கள் மற்றும் சிறு உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் திடீரென கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை செய்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும், ஹோட்டல் உணவை மட்டுமே நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியதாவது, ‘கேஸ் சிலிண்டர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை ஹோட்டல் துறையும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
70 நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்த போதிலும், திடீர் வணிகரீதியான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் பெங்களூரு முழுவதும் உள்ள ஹோட்டல் துறைக்கு பெரும் நெருக்கடியையும், நஷ்டத்தையும் கொடுத்துள்ளதாக ஹோட்டல்கள் சங்கம் கூறியது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வணிக கேஸ் சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்கி ஹோட்டல் தொழிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
பெங்களூரில் உள்ள அதிகளவிலான ஐடி நிறுவனங்களில் வெளிமாநில ஊழியர்கள் தான் அதிகளவு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 3 வேளைக்கும் பெங்களூருவில் உள்ள சிறு உணவகங்கள் மற்றும் ஹோட்டல் உணவுகளையே நம்பி உள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று ஹோட்டல் சங்கம் அறிவித்திருப்பது ஹோட்டல் உணவை மட்டுமே நம்பி உள்ள வெளிமாநில ஊழியர்களுக்கும், சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் இந்த உணவை மட்டுமே நம்பியுள்ள பிற மக்கள் தங்கள் அன்றாட உணவில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடம் என்பதால் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதால், சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும், விநியோகத்தைச் சீர்செய்யவும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இனிமேல் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சமையல் கேஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய முடியும், அதாவது, ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் (முன்பு இது 15 முதல் 21 நாட்களாக இருந்தது) என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சூழலில், அனைத்துக் குடும்பங்களுக்கும் சமமான விநியோகத்தை உறுதி செய்யவும், வசதி படைத்தவர்கள் அல்லது அச்சப்படுபவர்கள் அதிகப்படியான சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.