சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்க எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் மிகவும் முக்கியமான ரயில் முனையமாக இருக்கும் சென்னை எழும்பூரில், தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அடுத்த 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மிக முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் வந்து செல்கின்றன. 1 முதல் 9 வரைலயிலான நடைமேடைகளில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது சென்னை எழும்பூரில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே எழும்பூர் ரயில் நிலையத்தை உலக தரத்திற்கு இணையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மின்சார ரயில்கள் 5 மற்றும் 6வது நடைமேடைகளில் வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை 3 ரயில் பாதைகள் மட்டுமே இருந்தன. தற்போது இது நான்கு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக ஓராண்டிற்கும் மேலாக வேளச்சேரி செல்லும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்பட்டன. நான்கு வழி பாதைகளின் பணிகள் முடிவடைந்த பிறகு, தற்போது சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் எப்போதும் போல இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது மின்சார ரயில்கள் வந்து செல்லும் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அடுத்த 45 நாட்களுக்கு மின்சார ரயில்கள் அனைத்தும் நடைமேடை 5 மற்றும் 6-ல் வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்கள் எழும்பூரில் நடைமேடை 6-ல் வந்து செல்லும்.
அதேபோல் மறுமார்க்கத்தில் அரக்கோணம், காஞ்சிபுரம், திருமால்பூர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து வரும் மின்சார ரயில்கள் நடைமேடை 5-ல் நின்று செல்லும். மேலும் திருத்தப்பட்ட தற்காலிக நேர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்.
இதுவொரு தற்காலிக மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. மறுசீரமைப்பு பணிகள் வெகுவிரைவில் முடிக்கப்பட்டு, மீண்டும் புறநகர் ரயில்கள் எப்போதும் போல 10 மற்றும் 11வது நடைமேடைகளில் இயக்கப்படும்” என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
சென்னையில் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் வரப்போகும் இந்த பெரிய மாற்றத்தை பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் வேலைக்கு செல்லும் பலருக்கும் புறநகர் மின்சார ரயில்கள் தான் பாலமாக இருந்து வருகின்றன