டெல்லியில் ஒரே நாளில் மட்டும் 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் என்பது தொடர்க்கதையாகி வந்தது. இதனையடுத்து சமீபக்காலமாக விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இ-மெயில் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ மிரட்டல் வருகிறது. இதனால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து மிரட்டல் வந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், எந்த மர்ம பொருள்களும் வெடிகுண்டுகளும் கிடைக்காமல் அந்த மிரட்டல்கள் வெறும் புரளி ஆகிவிடுகின்றன. இதனால், எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. இதனால், விமானம் தாமதமாக புறப்படுவது போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே இத்தகைய மிரட்டல் விடுவோருக்கு எதிராக, விமானங்களில் பறக்கத்தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு வசதியாக சட்டங்களில் திருத்தம் செய்யவும் பரிசீலித்து வருகிறது. ஆனாலும் இந்த மிரட்டல்கள் தொடர்கதையாகி வருகின்றன.
சமீபத்தில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இப்படி வெடிகுண்டு மிரட்டல் தொடர்க்கதையாகி வரும் நிலையில், டெல்லியில் தற்போது 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலையே இந்த மிரட்டல் இ மெயில்கள் மூலம் வந்தன. அந்த இ மெயிலில் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க வேண்டுமானால் 30,000 அமெரிக்க டாலர் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உடனே பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் இந்த பள்ளிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகிகளும் பெற்றோர்களும் மிகவும் தவிப்புக்குள்ளாகினர் என்பது குறிப்பிட்டத்தக்கது.