

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஆதாரமற்ற பணப் பரிமாற்றத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பிரபல ஜவுளிக் கடைகளில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து, வருமான வரிது துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர். இதன்படி தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸில் காலை முதலே ரெய்டு நடைபெற்று வருகிறது.
இதுதவிர உதகையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சேலத்தில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, துணிக் கடைகளில் சேலை மற்றும் வேட்டியை பரிசாக அளிப்பதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித் துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற புதுச்சேரி தேர்தலின் போது, காங்கிரஸ் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு பரிசு டோக்கன்களை வழங்கியதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகளில் அதிரடி ரெய்டை மேற்கொண்டுள்ளது வருமான வரித்துறை.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் ஐடி ரெய்டு நடைபெற்ற நிலையில், தற்போது தமிழ்நாடு முழுக்க வருமானவரித்துறை என சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.