

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் முன்னணி கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக கட்சியில் இருந்து செங்கோட்டையன் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினரும் விரைவில் இணைவார்கள் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஆனால் பொங்கலுக்குப் பிறகும் ஓபிஎஸ் தனது கூட்டணி குறித்த தகவலை அறிவிக்காத நிலையில், இவருடைய ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிகளில் இணைய திட்டமிட்டுள்ளனர். அவ்வகையில் ஏற்கனவே மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏ-வான வைத்தியலிங்கமும் திமுகவில் இணைய உள்ளார்.
ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்தியலிங்கம் சற்றுமுன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை 10:45 மணிக்கு சென்னையில் உள்ள அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி குறித்த முடிவை எடுப்பதில் ஓபிஎஸ் தயங்குவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வைத்தியலிங்கம் திமுகவில் இணைய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு பலவீனமாக இருக்கும் நிலையில் தற்போது மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரின் இழப்பு அவருக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
மேலும் ஓபிஎஸ் தனது கூட்டணி குறித்த முடிவை விரைவில் அறிவிக்காவிடில் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் எம்எல்ஏ வைத்தியலிங்கம் திமுகவில் இணைவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாகவே கருதப்படுகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணி பலமாக இருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பில் இருந்த எம்எல்ஏ-க்கள் திமுக பக்கம் சாய்வது அதிமுகவிற்கு பலவீனமாக அமைந்துள்ளது. மேலும் ஓபிஎஸ் தரப்பை தவெக-வில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வரும் நிலையில், அதற்கு தகுந்த பலன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பதை விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும் ஓபிஎஸ் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உடன் கைகோர்த்து அதிமுகவில் இணைவாரா அல்லது செங்கோட்டையுடன் சேர்ந்து தவெக-வில் இணைவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.