

தமிழ்நாட்டில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள சூழலில், இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் காலை முதலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வேளச்சேரியில் நடை பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். வேளச்சேரி தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானாவை ஆதரித்து, முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன்னதாக கண்ணகி நகர் பகுதிக்குச் சென்று சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதனை முடித்துக் கொண்டு தற்போது வேளச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர்
இன்று காலை வீடியோ வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கும் அனைவருக்கும் நான் டேஞ்சர் தான் எனத் தெரிவித்தார்.
முதல்வர் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளேன்; தமிழ்நாட்டை வஞ்சிக்கவே மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர முயல்கிறது.
நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.7,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்டு உள்ளோம். தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கும் அனைவருக்கும் நான் டேஞ்சர் தான்” என முதல்வர் தெரிவித்தார்.