

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகவும், கேரளா, புதுச்சேரி, அசாமில் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ம்தேதியும் என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. மொத்தம் 1955 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறைகளைச் சீராகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குற்றப்பின்னணி கொண்டவரா? இல்லையா? என்பதை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் ‘இசிஐ-நெட்’ (ECINet) புதிய மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது.
தற்போது இசிஐநெட் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்-ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்தல் தொடர்பான அனைத்து செயலிகள் மற்றும் இணைய தளங்களை ஒன்றிணைத்து, ஒரே செயலியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை தேர்தல் தொடர்பான சேவைகளுக்காக மக்கள் பல்வேறு தனித்தனியான செயலிகள், இணையதளங்கள், என பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அந்த சிரமத்தை குறைத்து, “ஒரே செயலி - அனைத்து தேர்தல் சேவைகள்” என்ற நோக்கில் ‘இசிஐ-நெட்’ உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்கள், கடன்கள், கல்வித்தகுதி, சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை வேட்புமனுவில் கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்த தகவல்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கும் திறந்தவையாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகவல்களை அறிய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ள ‘இசிஐ-நெட்’ தளத்தில் ‘Know Your Candidate (KYC)’ பிரிவை பயன்படுத்தலாம். மேலும் இதில் வேட்பாளர்கள் சமர்பித்துள்ள முழுமையான பிரமாணப் பத்திரம் (Form 26) பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.
‘இசிஐ-நெட்’ தளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் ஒருக்கிணைக்கப்பட்டு உள்ளன. இதில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த தளத்தில் வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல், விண்ணப்ப நிலை கண்காணிப்பு, வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு, குறைதீர்ப்பு போன்ற சேவைகளும் வாக்காளர்களுக்கு கிடைக்கும்.
அதுமட்டுமின்றி தேர்தல் நாளில் வாக்குச் சாவடி எங்கு அமைந்துள்ளது, எந்த நேரத்தில் வாக்களிக்க வேண்டும், அருகிலுள்ள வாக்குச் சாவடிகள் என அனைத்தும் துல்லியமாக காட்டுகிறது. இதனால் தேர்தல் நாளில் ஏற்படும் குழப்பம் பெரிதும் குறையும்.
அத்துடன் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க சி-விஜில் செயலி வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.