

சென்னையில் புதிதாக வரவுள்ள அடுக்குமாடி வீடுகளின் விலை சதுரடிக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை குறைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎம்டிஏ (CMDA) விரைவான அனுமதி மற்றும் தேவையற்ற கூடுதல் கட்டண வசூல் நிறுத்தப்பட்டதன் காரணமாக இந்த விலை குறைவு சாத்தியமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு வாழ்நாள் கனவாகும்.. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலங்களின் மதிப்பும், கட்டுமான பொருட்களின் விலையும் அதிகமாகவே உயர்ந்துவிட்டன.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக, பல நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் சொந்த வீடு வாங்கும் தங்கள் கனவு நிறைவேறவில்லை. ஆனால் தற்போது, நிலைமை மாறத் தொடங்கியுள்ளது.
அதாவது, கட்டுமான துறையில் நிலவிவந்த புகார்களுக்கும், சிக்கல்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி தற்போது வைக்கப்பட்டுள்ளது..
பொதுவாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டிடிசிபி சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுரடிக்கு, 27 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கட்டட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள், கட்டுமான நிறுவனங்களை அணுகி, கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டட அனுமதி கோப்புகள் எந்த காரணமும் இல்லாமல், காலவரையன்றி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் புகார்களும் எழுந்தவண்ணம் இருந்தன. இந்த விவகாரம் பல ஆண்டுகளாகவே தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் கட்சி நிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால் வீடுகளின் விலை சாதாரணமாக இருக்க வேண்டியதை விட மிக அதிகமாக உயர்ந்து, ஒருகட்டத்தில் எளிய மக்களால் வாங்க முடியாத நிலைக்கு சென்றது.
இந்நிலையில் தான் கட்டிட திட்ட அனுமதிகளுக்கு 'கட்சி நிதி' என்ற பெயரில் முறைசாரா முறையில் வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் கட்டாய வசூலைத் தமிழக அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.
தேவையில்லாத இந்த கூடுதல் செலவு மிச்சமானதால், அந்த பயனை வீடு வாங்கும் மக்களுக்கு கொண்டு சேர்ப்போம் என்று கட்டுமான நிறுவனங்களும் உறுதியளித்துள்ளன.
இதனால் சென்னையில் வீடுகளின் விலை சதுர அடிக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை கணிசமாக குறையும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளன. சிஎம்டிஏ (CMDA) உடனடி அனுமதி மற்றும் தேவையற்ற கூடுதல் கட்டண (Party Fund) வசூல் செய்வதை தமிழக அரசு ரத்து செய்தது போன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கம் (CREDAI) இந்த விலை குறைப்பை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் 1,200 சதுர அடி வீடு ரூ. 70,000 முதல் ரூ. 1,50,000 வரை குறைந்துள்ளது.
இதனால் ரூ.35 லட்சமாக இருந்த வீடு தற்போது ரூ. 33 லட்சத்திற்கு கூட கிடைக்கிறது. வீட்டின் விலையில் லட்சக்கணக்கில் சேமிப்பு கிடைப்பதால், தற்போது வீடுகளுக்கான முன்பதிவு பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் நடுத்தர மக்கள் மற்றும் மாதம் ரூ.40,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பவர்களும் மீண்டும் தீவிரமாக வீடுகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது ஓஎம்ஆர் (OMR), போரூர், வளசரவாக்கம், மனப்பாக்கம் மற்றும் பூந்தமல்லி போன்ற பகுதிகளில் வீடு வாங்குபவர்களின் தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது.
கட்டுமானச் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால், வீடு வாங்குபவரின் மொத்த விலையில் சில லட்சங்கள் வரை மிச்சமாகும்.
தற்போது சென்னையில் சொத்து விகிதங்கள் சதுர அடிக்கு ரூ.4,000 முதல் ரூ.15,000 வரை விற்பனையாகின்றன. பரந்தூர் பகுதியில் சதுர அடி ரூ.2,000-ல் இருந்தும், கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், ஆவடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் மலிவு விலையிலும் மனைகள் மற்றும் வீடுகள் கிடைக்கின்றன.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொந்தமாக வீடு வாங்க ஆசைப்படும் சராசரி மக்களின் கனவு நனவாவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் மீண்டும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.