

இ-கேஒய்சி சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 23-ம்தேதியுடன் முடிவடைந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மீண்டும் கேஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பதை வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்புக்கான காலக்கெடு நேற்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைந்தது. இதுவரை தமிழகத்தில் சுமார் 85 சதவீத கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மின்னணு சரிபார்ப்பு பதிவை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இன்னும் 15 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பதிவை மேற்கொள்ளாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இ-கேஒய்சி செய்யாத வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இதற்கான காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை இ-கேஒய்சி அப்டேட் செய்யாதவர்கள் உடனே செய்துவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு தற்போது மானிய விலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் கேஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்கிடையே கேஸ் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தது.
அதாவது மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்துபோன நபர்கள் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும், 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை ஒரு சிலிண்டர் போதுமானதாக இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ள வீடுகளில் கூட வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இதையடுத்து கள்ளச் சந்தையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ‘இ-கேஒய்சி’ அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்ட போது, இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வணிக சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி முன்பதிவு செய்யும் கால அளவு உயர்த்தப்பட்டது. நகர்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் ‘இ-கேஒய்சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, சிலிண்டருக்கான அரசு மானியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும் அடுத்தடுத்த சிலிண்டர்களை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இ-கேஒய்சி செய்து வந்தனர். பலரும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இ-கேஒய்சி செய்யும் கால அவகாசத்தை ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீட்டித்தது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்ட நிலையில் 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.. அதாவது, தமிழகத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் இந்த வாடிக்கையாளர்கள் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்று மத்திய அரசு கேஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 31ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிலிண்டர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இ-கேஒய்சி பதிவுக்காக வாடிக்கையாளர்கள் கேஸ் நிறுவன அலுவலகத்திற்கு நேரில் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.