

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய காலப் பாதுகாப்பான EPF சேமிப்புகளைத் திரும்பப் பெற்று, அவற்றை Mutual Fundsல் முதலீடு செய்ய வேண்டாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் விளக்கியுள்ளது. EPFO-வின் விளக்கப்படி, EPF மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் இரண்டுமே நீண்டகால நிதித் திட்டமிடலுக்கு உதவினாலும், அவற்றின் நோக்கமும் செயல்பாடும் முற்றிலும் வேறுபட்டவை.
அதாவது, EPF மற்றும் மியூட்சுவல் ஃபண்ட் ஆகிய இரண்டும் முற்றிலும் வேறுபட்ட நிதி இலக்குகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்பதால், ஒன்றை மற்றொன்றிற்கு மாற்றாகக் கருதக் கூடாது என்று தெரிவித்துள்ள EPFO, விவரமறிந்தவருக்கு EPF மட்டுமே போதுமானது என்று கூறியுள்ளது. EPF என்பது ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை (ஓய்வூதிய சேமிப்பு) உறுதி செய்வதற்கான ஒரு சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். ஆனால், மியூட்சுவல் ஃபண்ட் என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்தி உள்ளது.
* EPF என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) ஆகும். இது இந்தியாவில் பணிபுரியும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12% தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் (Employer) வழங்குகிறது. நிறுவனத்தின் 12% பங்களிப்பில் 3.67% இ.பி.எஃப் கணக்கிற்கும், மீதமுள்ள 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) செல்கிறது. பணி ஓய்வுக்குப் பின் பாதுகாப்பான நிதி உதவியை வழங்குகிறது. மேலும் சேமிப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது.
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு முழுக்க முழுக்க தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்தது. இதில் நிறுவனத்தின் சார்பில் எந்தவித பங்களிப்பும் கிடைக்காது.
* EPF-ன் முக்கிய நோக்கம் ஊழியர்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கானது என்பதால், தேவையான விதிமுறைகளைத் தவிர EPF கணக்கை விருப்பப்படி மூட முடியாது.
ஆனால் அதுவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள், தங்களின் முதலீட்டை தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுக்கும் வசதி உள்ளது.
* EPF-க்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதத்தை அறிவிக்கப்படுவதுடன், சேமிப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது.
குறிப்பாக மாதந்தோறும் கட்டாய சேமிப்பு நடைபெறுவதால், ஊழியர்களின் ஓய்வுக்கால நிதி சீராக உருவாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் வருவாய் பங்குச்சந்தையின் போக்கைப் பொறுத்தே அமையும். எனவே, சந்தை ஏற்றம் காணும்போது அதிக லாபமும், சரிவடையும் போது நஷ்டமும் ஏற்படக்கூடும். இதனால், இதில் முதலீட்டு அபாயம் நிறைந்துள்ளது.
* EPFO-வின் தகவலின்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) முதலீடுகளுக்கு பிரிவு 80சி கீழ் வரி விலக்கு, EEE முறை மற்றும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெறும் தொகை வரிவிலக்கு போன்ற முக்கிய வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, EPF-ல் செலுத்தப்படும் பங்களிப்பு, அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் தகுதியான விதிமுறைகளின் கீழ் பெறப்படும் தொகை ஆகியவை வரிச்சலுகை பெறுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் லாபத்திற்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படி மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) விதிக்கப்படலாம்.
ஈக்விட்டி ஃபண்ட் (ELSS) மூலமாக பிரிவு 80C கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம்; மேலும் 1 ஆண்டுக்கு மேல் வைத்திருக்கும் ஈக்விட்டி முதலீட்டு லாபத்தில் ஆண்டுக்கு ரூ. 1.25 லட்சம் வரை வரியில்லை. அதற்கு மேல் உள்ள லாபத்திற்கு 12.5% வரி செலுத்த வேண்டும்.
* EPF உறுப்பினர்களுக்கு இ.பி.எஸ். (EPS) மற்றும் இ.டி.எல்.ஐ. (EDLI - Employees' Deposit Linked Insurance) திட்டங்களின் பலன்களும் கிடைக்கும். EDLI அனைத்து EPF உறுப்பினர்களுக்கும் முதலாளியால் (நிறுவனத்தால்) வழங்கப்படும் ஒரு இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இதில் ஊழியரின் ஊதியத்தில் இருந்து எந்தப் பிடித்தமும் செய்யப்படுவதில்லை.
ஓய்வுபெற்ற பிறகு தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், வேலையில் இருக்கும் போது ஊழியர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தால், அவரது நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு ஓய்வூதியம் மற்றும் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையும் கிடைக்கிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் நேரடி அரசு ஓய்வூதியம் அல்லது சமுதாயப் பாதுகாப்பு போன்ற உறுதியான உத்தரவாதம் கிடைக்காது.
முதலீட்டாளர் இறந்தால், அவரது முதலீட்டு மதிப்பு மட்டுமே வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
* EPFO-வின் கருத்துப்படி, EPF என்பது ஓய்வுக்காலத்திற்கான பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாகும். அரசு அறிவிக்கும் வட்டியுடன் சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், காப்பீடு போன்ற கூடுதல் பலன்களும் இதில் கிடைக்கின்றன.
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நீண்டகாலத்தில் அதிக வருமானம் தரும் வாய்ப்பு இருந்தாலும், அது சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. எனவே, அதிக லாப வாய்ப்புடன் அதிக ரிஸ்கும் இருப்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சந்தை விதிகளின்படி முதலீட்டு லாபத்திற்கு மூலதன ஆதாய வரியும் பொருந்தக்கூடும்.
ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டுப் பிரிவை பல்வகைப்படுத்த பரஸ்பர நிதிகளைத் தேர்வு செய்யலாமே தவிர, EPF சேமிப்பை முன்கூட்டியே எடுத்து சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது அவரது நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் என்பதை EPFO தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, சந்தை அபாயங்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் பரஸ்பர நிதிகளை கூடுதல் முதலீடாகப் பயன்படுத்தலாமே தவிர, ஓய்வூதியத் திட்டமிடலின் முதன்மை அடித்தளமாக EPF சேமிப்பையே வைத்திருக்க வேண்டும் என்று EPFO அறிவுறுத்தியுள்ளது.
நிபுணர்களின் கருத்துப்படி, ஓய்வூதியத் தேவைகளுக்காக முழுத் தொகையையும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல், பாதுகாப்பிற்கு EPF + அதிக வளர்ச்சிக்கு Mutual Fund (SIP) என இரண்டையும் இணைத்து முதலீடு செய்வதே (Asset Allocation) புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.
Disclaimer for Business section இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.